உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால், கோவிலுக்கு செல்லும் நாம் அனைவரும் ஏழுமலையானை தரிசித்த உடனே லட்டு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி புறப்படுவோம். திருப்பதியில், பூங்கா, நீர்வீழ்ச்சி, கோவில்கள் என பல்வேறு அரிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அடுத்த முறை நீங்கள் திருப்பதி செல்லும் போது இந்த அழகான இடங்களுக்கு உங்கள் குடும்பத்தினருடன் சென்று வாருங்கள்!

நாகரவனம் ஜங்கிள் புக்
திருப்பதியில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம். திருப்பதி வனப்பகுதியை சுற்றி பார்க்க வேண்டும், திருப்பதியில் ட்ரெக்கிங் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தால் நாம் கண்டிப்பாக இந்த இடத்திற்கு செல்லலாம். இங்கு ஸ்லேண்டர் லோரிஸ், இந்திய ராட்சத அணில், கோல்டன் கெக்கோ, சிறுத்தை, முள்ளம்பன்றி, சாம்பர் என பலதரப்பட்ட வன விலங்குகளையும் ரெட் சாண்டர், சைகாஸ் பெட்டோமி மற்றும் எண்டெடா போன்ற ராட்சத தாவரங்களையும் கண்டு ரசிக்கலாம். அது மட்டுமில்லாமல் அழகான அருவிகளும் உண்டு. நண்பர்களுடனும், குடும்பத்துடனும் கட்டாயம் கண்டுகளிக்க வேண்டிய இடம் இது. இந்த இடம் கபில தீரத்த கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
தலகோனா நீர்வீழ்ச்சி
ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவில் திருப்பதி-மதனப்பள்ளி நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள தலகோனா ஒரு மேம்பட்ட சுற்றுலா மையமாகும். இயற்கை அழகு மற்றும் பசுமையால் சூழப்பட்ட அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தலகோனா நீர்வீழ்ச்சியின் நீர் குணப்படுத்தும் சக்திகளால் செறிவூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு ட்ரெக்கிங், வனவிலங்குகளை பார்ப்பது, படகு சவாரி செய்வது, ஜங்கிள் சஃபாரி டிரைவ், கேனோப்பி வாக் செய்யவும் வசதிகள் உண்டு.

ஆகாய கங்கா
திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து மற்றும் ஜீப் வசதிகளும் உண்டு.
பாபவிநாசம்
பாபவிநாசத்தை சுற்றி உள்ள இயற்கை காட்சிகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். திருமலை கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஒரு அழகான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பாபவிநாசத்தின் புனித நீரில் நீராடுபவர்களின் பாவங்களை நீங்குவதாக நம்பப்படுகிறது.பாபநாசம் அருவிக்கு அருகில் அரசு அணை கட்டியுள்ளது. அருவியில் இருந்து வரும் தண்ணீர் அணையில் சேமிக்கப்பட்டு திருமலையில் தண்ணீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

கபில தீர்த்தம் மற்றும் ஶ்ரீ கபிலேஸ்வரர் சுவாமி திருக்கோயில்
இந்த கபில தீர்த்தம், அழிப்பவரான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கபிலேஸ்வர சுவாமி கோயிலாகும். இக்கோயில் கீழ் திருப்பதியில் உள்ள நந்தி சிலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள பல்வேறு சரணாலயங்களில் ஒன்றாக இது இருந்தாலும் கூட, கபில தீர்த்தம் அதன் இங்கு வரும் மக்களின் இதயங்களில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் அதனை சுற்றி உள்ள இயற்கை அழகு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.
ஜாபலி ஆஞ்சநேய சுவாமி கோயில்
இந்த கோவில் திருமலையில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும். மேலும் ராமரும் சீதையும் ஆரண்ய வாசத்தில் இருக்கும் போது, அவர்கள் இங்கு ஹனுமானுடன் சில காலம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடம் ஆகாச கங்காவில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ராக் கார்டன்
திருப்பதியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று இந்த ராக் கார்டன். இந்த இயற்கையான வளைவு வடிவ கல் உருவாக்கத்தை சிலாதோரணம் என்றும் அழைக்கிறார்கள். இது 450 கோடி ஆண்டுகள் பழமையானது. உலகில் அரிதாக வெகு சில இடங்களில் மட்டுமே காணக்கூடிய "ப்ரீகேம்ப்ரியன் இயற்கைக் கல் உருவாக்கம்" இந்த ராக் கார்டனில் அமைந்துள்ளது. இது சுற்றுலாத்தமாக மட்டுமில்லாமல் புவியியலாளர்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.
மாமண்டூர் காடு
சென்னை - கடப்பா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாமண்டூர் வனப்பகுதி, அதிக மதிப்புமிக்க உள்ளூர் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. மாமண்டூர் மலைகளும் பள்ளத்தாக்குகளும் பல அழகிய இடங்கள், பருவகால் நீர்வீழ்ச்சிகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை அழகால் சூழப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications





