தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னையில் ஏகப்பட்ட சுற்றுலாத் தலங்கள் இருக்கிறது என்று நமக்கு தெரியும். அவை எல்லாவற்றிர்க்கும் கூட நீங்கள் சென்று வந்திருக்கலாம், ஆனால் சென்னையிலிருந்து சற்று தூரத்தில் பல அழகான சுற்றுலாத் தலங்கள் உண்டு. வார இறுதிகளில் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது பெஸ்ட் ஆப்ஷன். உங்களுக்கு ஒரு சின்ன பிரேக் எடுத்த மாதிரியும் இருக்கும், குறைந்த செலவில் சுற்றுலா சென்று வந்த மாதிரியும் இருக்கும்!

புதுச்சேரி
பிரெஞ்சு காலனி பாரம்பரிய இந்திய உணர்வுகள், துடிப்பான இரவு கலாச்சாரம் நிறைந்த பார்ட்டிகள், பிரஞ்சு கட்டிடக்கலை, வண்ணமயமான பல கடற்கரைகள், அழகான ஆரோவில், அமைதியான ஆசிரமம், ஆன்மிகம் பொங்கும் கோவில்கள் என புதுச்சேரியில் எல்லா விதமான சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது. வார இறுதியில் சென்னையிலிருந்து பெரும்பாலான இளைஞர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விடுகின்றனர். நீங்கள் இன்னமும் செல்லவில்லை என்றால் சென்று வாருங்களேன்.

வேலூர்
பல்லவர்கள், சோழர்கள், விஜயநகரம், ராஷ்டிரகூடர், கர்நாடகா மற்றும் ஆங்கிலேயர்கள் போன்ற பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்ட வேலூர் செழுமையான வரலாற்று பாரம்பரியத்தை பறை சாற்றுகிறது. வேலூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள அற்புதமான வேலூர் கோட்டையின் காரணமாக 'கோட்டை நகரம்' என்று செல்லப்பெயர் அழைக்கப்படுகிறது. வேலூர் கோட்டை தொடங்கி, ஸ்ரீபுரம் தங்கக் கோவில், ஏலகிரி, திப்பு கோட்டை, கைகல் நீர்வீழ்ச்சி, புங்கனூர் ஏரி, வைனுபாபு அப்சர்வேட்டரி வரை ஏராளமான சுற்றுலாத் தலங்கள் வேலூரில் உண்டு.

காஞ்சிபுரம்
ஆயிரம் கோவில்களின் தங்க நகரம் என்று அன்புடன் அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை சுற்றிப் பார்ப்பதற்கு இரண்டு நாட்கள் அல்ல, இரண்டு மாதங்கள் கூட பத்தாது. புகழ்பெற்ற அத்திவரதர் வீற்றிருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி கோவில், பஞ்சபூத காற்று ஸ்தலமான ஏகாம்பரேஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களுக்கு சென்று ஆசி பெற்று வாருங்கள். அங்கு கிடைக்கும் காஞ்சி பட்டுப்புடவைகளை உங்கள் துணைக்கு வாங்கி கொடுத்து மகிழுங்கள்.

திருப்பதி
சென்னையிலிருந்து வார இறுதிகளில் புறப்படும் சுற்றுலா இலக்குகளில் திருப்பதியும் முதன்மையான இடம் வகிக்கிறது. கலியுக வரதனாக நம்மை காக்கும் திருப்பதி வெங்கடாசலபதியை காண எவருக்குத் தான் ஆசை இருக்காது. வார இறுதிகளில் திருப்பதி செல்லும் பேருந்துகளில் ஏறி குடும்பத்தினருடன் திருப்பதி செல்லுங்கள். சர்வ தரிசனத்தில் சிக்காமல் ஆதார் அட்டையை கொடுத்து மூன்று மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யுங்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலை போலவே பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில், ஸ்ரீனிவாசமங்காபுரம், காணிப்பாக்கம், காலஹஸ்தி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வாருங்கள்.

நாகலாபுரம் மலைகள்
சென்னையில் இருந்து வெறும் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம் பல நீர்வீழ்ச்சிகளுடன், கண்கவர் இயற்கை சூழலால் நம் மனதை மயக்குகிறது. நாகலாபுரத்திற்கு உங்கள் சொந்த வாகனங்களில் செல்வதே சிறந்தது. செக் போஸ்டை ஒட்டியிருக்கும் பார்க்கிங்கில் உங்களது கார் அல்லது பைக்கை பார்க் செய்துவிட்டு. அங்கிருந்து நடக்க ஆரம்பிக்கலாம். 5 அருவிகள் கொண்ட நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள் ஒவ்வொன்றை அடைவதற்கும் குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்கள் ஆகிறது. நீங்கள் ஒரு செட் மாற்றுத்துணி, வழுக்காத செருப்பு, டவல், பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டி எடுத்து செல்வது அவசியம். ஏனெனில் அங்கு எதுவும் கிடைக்காது.

புலிகட் ஏரி
தமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. புலிகட் ஏரிக்கு வரும் பல்வேறு வகையான பறவைகளின் காரணமாக, பறவைகளை கவனிப்பது இங்கு வருபவர்களின் விருப்பமான பொழுதுபோக்காக உள்ளது. பழவேற்காட்டில் டச்சு சர்ச், டச்சு கல்லறை, கலங்கரை விலக்கம், சிந்தாமணீஸ்வரர் கோவில் மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய எண்ணற்ற கண்கவரும் சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

மாமண்டூர் காடுகள்
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகிய இடமா என்று இந்த இடம் நம்மை வியக்க வைக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்க்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
சென்னையிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். உலகின் மிகப்பழமையான பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக 1798-ஆம் ஆண்டிலிருந்து பறவைகளின் வாழ்விடமாகவும், புகலிடமாகவும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வருகிறது. 250 ஆண்டு காலமாக வேடந்தாங்கல் கிராம மக்கள் பறவைகளை தங்கள் குழந்தையை பாதுக்கப்பது போல பாதுகாத்து வருகிறார்கள். நீங்கள் குழப்பமாக இருந்தால் இந்த இடத்திற்கு சென்று வாருங்க, நிச்சயம் தெளிவு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications





