நீங்கள் கடற்கரை பிரியர் என்றால் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று ரசித்து விட்டு வர வேண்டிய கடற்கரைகள் தென்னிந்தியாவில் பல உள்ளன. இங்கு சென்று குறைந்த பட்சம் ஒரு நாளாவது இருந்து விட்டு வந்தாலே வேறு உலகிற்கு சென்று வந்த வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து விடும். இவற்றில் சில கடற்கரைக்கு ஒருமுறை சென்றால் அங்கிருந்து திரும்பி வருவதற்கு மனம் வராது. அப்படிப்பட்ட அழகான கடற்கரைகளின் பட்டியலை பார்த்து விட்டு வரலாம் வாங்க.

மன்றோ துருத்து தீவு :
மன்றோதுருத்து தீவு, இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. பசுமையான இயற்கை அழகு சூழ்ந்த ஒரு அழகான கடற்கரை தீவு இது. கேரளாவில் உள்ள மிக அழகான தீவு மற்றும் கடற்கரைகளில் இதுவும் ஒன்று. அஷ்டமுடி ஏரி மற்றும் கல்லாடா நதி சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதை முன்ரோ தீவு என்றும் அழைக்கிறார்கள்.
குருசடை தீவு :
ராமேஸ்வரத்தில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள தீவு இது. பவளப்பாறைகள், கடல் வாழ் உயிரினங்கள், பசுமையான செடிகள், நீல கடல் என மனதை கொள்ளை அடிக்கும் தீவு இது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த தீவிற்கு செல்வதற்கு படகு வசதியும் செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினரின் அனுமதி இல்லாமல் இந்த தீவிற்கு யாரும் செல்ல முடியாது.

கோகர்ணா :
பாறைகள், தென்னை மரங்கள் ஆகியவை நிறைந்துள்ள இந்த அழகிய கடற்கரை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆத்மலிங்கம் இருக்கும் மகாபாலேஷ்வர் கோவிலுக்கு செல்பவர்கள் இந்த கடற்கரைக்கு வராமல் செல்ல மாட்டார்கள். அக்னாஷினி, கங்காவலி நதிகளுக்கு இடையே இந்த கடற்கரை அமைந்துள்ளது. மனதிற்கு அமைதி வேண்டும் என்பவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கடற்கரை இது.
பட்டர்ஃபிளை பீச் :
கோவாவில் அமைந்துள்ள மிக அழகாக, அமைதியான கடற்கரைகளில் இதுவும் ஒன்று. இந்த கடற்கரைக்கு படகு மூலம் மட்டுமே செல்ல முடியும். கோவாவின் முக்கியமான சுற்றலாத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். தெளிவான, சுத்தமான நீரால் சூழப்பட்ட இந்த கடற்கரையின் அழகு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.
யாரடா கடற்கரை :
ஆந்திராவில் வங்கக் கடலின் கரையில் அமைந்துள்ளது யாரடா பீச். மூச்சு முட்டும் அளவிற்கு அழகான காட்சிகளை வைத்திருக்கும் இந்த கடற்கரை தனிமையை, அமைதியை வேண்டுபவர்களின் மனம் கவர்ந்த பீச்களில் ஒன்றாக உள்ளது. அமைதியாக கடலின் அழகையும், இயற்கையின் அழகையும் ரசித்து விட்டு வர வேண்டும் என நினைப்பவர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம்.

கோவளம் கடற்கரை :
கோவிலாங் எனப்படும் கோவளம் கடற்கரை இந்தியாவின் புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றாகும். சென்னையில் இருந்து 40 கி.மீ., தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்த படியாக அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் பீச் இது தான். முக்கிய சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
வர்கலா பீச் :
பாபநாசம் கடற்கரை என்றும் அழைப்படும் இது கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அரபிக்கடலில் அமைந்துள்ள இந்த கடலில் நீராடுவதால் பாவங்கள் நீங்குவதாக நம்பிக்கை. குன்றுகள், படிவப்பாறைகள் என பார்த்து ரசிக்க அளவில்லாத விஷயங்களை கொண்டுள்ளது. கடலில் நீந்தி மகிழ, சன் பாத் எடுப்பதற்கு என சொர்க்க பூமியாக விளங்குகிறது இந்த கடற்கரை.
தனுஷ்கோடி கடற்கரை :
ராமேஸ்வரம் தீவின் முனையில் அமைந்துள்ள இந்த பகுதி அரிச்சல் முனை என்றும் அழைக்கப்படுகிறது. வங்கக்கடலும், இந்திய பெருக்கடலும் ஒன்றிணையும் இடமாகும். ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள மிக அழகான கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் மிக முக்கியமான பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.



Click it and Unblock the Notifications






