
இன்று உலகமே போற்றும் புத்த மதம் அவதரித்த இடம். இந்தியா முழுவதையும், தென் கிழக்கு ஆசியாவையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்தியாவின் முதல் பேரரசான மவுரிய பேரரசின் தலைநகரம். ஐந்தாம் நூற்றாண்டிலேயே பல்கலைக்கழகம் அமைத்து கல்வியில் உலகின் முன்னோடியாக இருந்த இடம் என பீகார் மாநிலத்தில் பெருமைகள் அளவிடமுடியாதது. புனித ஸ்தலங்கள்,வரலாற்று தொன்மைவாய்ந்த இடங்கள், தேசிய பூங்காக்கள், வண்ணமையமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் என பீகார் ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை தரக்கூடிய சுற்றுலாதலம்.
மகாபோதி கோயில்:

புகைப்படம்: chaostrophy
பீகார் தலைநகரான பாட்னாவில் இருந்து 96கி.மீ தொலைவில் புத்த கயா என்னும் இடத்தில் மகாபோதி கோயில் அமைந்திருக்கிறது. புத்தர் ஞானம் அடைந்ததாக சொல்லப்படும் இந்த இடத்தில் கி.மூ 250களில் அசோக மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பின்னர் துருக்கிய மன்னர்களின் படையெடுப்பினால் சிதைக்கப்பட்ட மகாபோதி கோயில், பிரிட்டிஷ் காலத்தில் புனரமைக்கப்பட்டு தற்போதுள்ள தோற்றத்தை அடைந்திருக்கிறது. இக்கோயிலின் உட்புற கூரையை தாய்லாந்து அரசு 290 கிலோ தங்கத்தால் வேய்ந்திருக்கிறது.

மேலும் இக்கோயிலின் அருகில் புத்தர் ஞானம் அடைய அமர்ந்து தியானம் செய்த போதி மரம் உள்ளது. பெரும் பழமையும், சிறப்பும் நிறைந்த இந்த இடத்திற்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது நிச்சயம் சென்று வாருங்கள்.
நாலந்தா பல்கலைக்கழகம்:

புகைப்படம்: Wonderlane
உலகில் எண்ணற்ற நாடுகளில் நாகரீகம் தோன்றா காலத்திற்கு முன்னரே கி.பி 5ஆம் நூற்றாண்டில் விண்வெளி அறிவியல், ஆயுர்வேதம், தனுர்வேதம், பல மேம்பட்ட கணித பாடங்கள், கொரியா, திபெத், சீனா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து வந்து கல்வி பயின்ற மாணவர்கள் என உலகின் முதல் பல்கலைக்கழகமாக திகழ்ந்தது நாலந்தா பல்கலைக்கழகம்.

புகைப்படம்: Hideyuki KAMON
11ஆம் நூற்றாண்டில் துருக்கியில் இருந்து படையெடுத்து வந்தவர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் அதன் சிதைந்த கட்டிடங்களை நாம் காண முடியும். இதனருகில் நாலந்தா தொல்பொருள் அருங்காட்சியகத்தில் நாலந்தாவில் இருந்து கிடைத்த தொன்மையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மகாவீர் மந்திர்:

புகைப்படம்: Samtxneo
இந்துக்களின் விருப்பமான கடவுள்களின் ஒருவரான ஹனுமானின் கோயில் தான் இந்த மகாவீர் மந்திர். பாட்னாவில் அமைந்திருக்கும் இக்கோயில் வட இந்தியாவில் அதிக மக்கள் வரும் கோயில்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இக்கோயில் யாரால் எப்போது கட்டப்பட்டது என்ற வரலாறு கிடைக்கப்பெறவில்லை. 1947க்கு பிறகே இங்கு அதிகமாக பக்தர்கள் வர ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஹனுமானுக்கு உகந்ததாக சொல்லப்படும் செவ்வாய், சனிக்கிழமைகளில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். ராமநவமி இக்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்நாட்களில் பல கி.மீ தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
தக்ஹ்ட் ஹர்மிந்தர் ஜி, பட்னா சாஹிப்:

சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சின் பிறந்த இடம்தான் இந்த தக்ஹ்ட் ஹர்மிந்தர் ஜி, பட்னா சாஹிப் குருத்வாரா. சீக்கிய அரசின் முதல் மகாராஜாவான ரஞ்சித் சிங் என்பவரால் கங்கை நதிக்கரையில் இது கட்டப்பட்டுள்ளது. சீக்கியர்களின் ஐந்து புனித சிம்மாசனங்களில் ஒன்று இக்கோயிலில் உள்ளது. அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலுக்கு அடுத்து சீக்கியர்கள் அதிகம் வரும் இடமான இங்கு பீகார் செல்கையில் நாமும் சென்று வரலாம்.
பராபர் குகைகள்:

புகைப்படம்: William Lee-Wright
இந்தியாவில் உள்ள மிகப்பழமையான குகைகளுள் ஒன்றானான இதனுள் கி.மு 3ஆம் நூற்றாண்டை சேர்ந்த மவுரிய மற்றும் அசோகர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. பீகாரில் கயா மாவட்டத்தில் பேலா கஞ்ச் என்னும் இடத்தில் இது அமைந்திருக்கிறது. புத்த மற்றும் ஜைன துறவிகள் இந்த இடத்தில் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இரண்டு பகுதிகளாக உள்ள இந்த குகைகளில் ஒரு பகுதி முற்றிலும் பளிங்குக்கல்லால் ஆனதாகும். மற்றொரு பகுதி சிறியதாக ஒரு ஸ்துபி போன்று வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. இதனுள் நாம் எழுப்பும் ஒலி விதவிதமான வகையில் எதிரொலிக்கிறது.



Click it and Unblock the Notifications





