நாம் எங்கு சென்றாலும், நம் இதயத்தின் ஒரு பாகம் வீட்டில் நம் செல்லப்பிராணி என்ன செய்து கொண்டிருக்கிறதோ என்று தேடிக் கொண்டிருக்கும்! செல்லப்பிராணிகளை வீட்டில் விட்டுச் செல்லும் நபர்களால் மட்டுமே இந்த கவலையை உணர முடியும். ஆனால் இனி நீங்கள் அப்படி செய்ய தேவை இல்லை! நீங்கள் செல்லும் ரயிலில் உங்கள் செல்லப்பிராணியையும் நீங்கள் அழைத்து செல்லலாம் என தென்னக ரயில்வே சென்னையில் அறிவித்துள்ளது. இது பயணிகளிடையே மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் பற்றிய மேலும் விவரங்கள் கீழே!

தனித்து விடப்படும் செல்லப்பிராணிகள்
நாம் ஒரு ஊருக்கு சென்றாலோ, வெளியில் ஷாப்பிங், கடைகள், தியேட்டர் அல்லது ஏதேனும் விசேஷம் என சென்றாலே, நாம் நம் செல்லப்பிராணிகளை வீட்டிலேயே தான் விட்டு செல்கிறோம். காரணம் பெரும்பாலான இடங்களில் அவற்றிற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் வீட்டில் தனித்து விடப்பட்டிருக்கும் நம் செல்லப்பிராணிகளின் நிலை குறித்து நாம் நம் மனது துடித்துக் கொண்டிருக்கும். ஆனால் அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் பயணிகளின் வரவேற்பை பெற்றுள்ளது. ஆம் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை தெற்கு ரயில்வே சமீபத்தில் வெளியிட்டது.

தென்னக ரயில்வேயின் புதிய வழிகாட்டுதல்கள்
தெற்கு ரயில்வே சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் கூற்றுப்படி, இந்த வசதியைப் பெற முதல் வகுப்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். பயணிகள் ஏசி-முதல் வகுப்பு/ முதல் வகுப்பு கேபின்/ கூபேயில் செல்லப் பிராணிகளை எடுத்துச் செல்லலாம். மேலும் ரயில் மேலாளரின் (பாதுகாவலர்) மேற்பார்வையின் கீழ் லக்கேஜ்-கம்-பிரேக் வேனில் லக்கேஜாகவும் எடுத்து செல்ல அனுமதி உண்டு.

முன்பதிவு செய்யாமல் ரயிலில் ஏறக்கூடாது
ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, ஏசி நாற்காலி கார், ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் செல்லப்பிராணிகளை அனுமதி இல்லை. முன்பதிவு எதுவும் இல்லாமல் பயணிகள் செல்லப்பிராணியை ரயிலில் ஏற்றக்கூடாது. சரியான முன்பதிவு செய்யாமல் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்லும் பயணிகள் பிடிபட்டால், அபராதம் விதிக்கப்படும் எனவும் அபராதம் லக்கேஜ் கட்டணத்தை விட ஆறு மடங்கு அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிப்பவர் கட்டாயம் செய்ய வேண்டியவை
பயணிகளின் பெயர் பதிவேட்டில் (PNR) ஒரு செல்லப்பிராணி மட்டுமே அனுமதிக்கப்படும். பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறையைப் பொருட்படுத்தாமல், புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணிநேரத்திற்கு முன்பதிவு செய்வதற்காக உங்களது செல்லப்பிராணியை லக்கேஜ் மற்றும் பார்சல் அலுவலகத்திற்கு நீங்கள் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம்.

செல்லப்பிராணியுடன் பயணிப்பவர் சமர்ப்பிக்க வேண்டிய தகவல்கள்
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, செல்லப்பிராணியுடன் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் செல்லப்பிராணிக்கு தொற்று/தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை என்று கால்நடை மருத்துவரிடம் இருந்து தகுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சான்றிதழ் பயணத்திற்கு 24-48 மணிநேரத்திற்கு முன்னதாகப் பெற வேண்டும் மற்றும் முன்பதிவு செய்யும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். உங்கள் செல்லபிராணியுடன் பயணிக்க வேண்டுமென்றால் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பர்ஸ்ட் கிளாஸ் இருக்கையைத் தேர்வு செய்திடுங்கள்! இப்போது தென்னக ரயில்வேயின் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தெரிந்துக் கொண்டீர்கள் அல்லவா? அடுத்தமுறை பயணிக்கும் போது உங்கள் செல்லப்பிராணியுடன் ரயிலில் ஆனந்தமாக பயணம் செய்திடுங்கள்!



Click it and Unblock the Notifications





