உங்கள் குழந்தைகளுக்கு லீவு விட்டாச்சா? எங்கயாச்சும் கூட்டிட்டு போகச் சொல்லி அடம் பிடிக்குறாங்களா? அப்படின்னா சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 'போல்க்ஸ் வேர்ல்ட்' என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் கம்மி பட்ஜெட் கேளிக்கை பூங்காவிற்கு அழைத்துச் செல்லலாமே. MGM Dizzie world, VGP போன்ற பெரிய கேளிக்கை பூங்காக்களுக்கு செல்ல நிறைய செலவாகிறது என்று உங்களுக்கு தோன்றினால் தாரளமாக இந்த இடங்களுக்கு உங்கள் வீட்டு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். போட் ரைடு, கப் & சாசர், ஜியான்ட் வீல், ஸ்னோ வேர்ல்ட் என விளையாட்டுகளுடன் அசத்தலான ஷாப்பிங் மற்றும் சுவையான உணவுகளை உண்டு மகிழ இங்கே கட்டாயம் வர வேண்டும்!

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கார்னிவல்
சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பல வேடிக்கைகள், கேளிக்கைகள், விளையாட்டுகள் மற்றும் வித விதமான உணவுகள் ஆகியவை இந்த பொருட்காட்சியின் அம்சங்களாகும். கம்மி பட்ஜெட்டில் அட்டகாசமாக மாலைப் பொழுதை கழிக்க இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும் போது இதை மிஸ் பண்ணலாமா? உங்கள் வீட்டு குட்டீஸ்களின் மனம் கவர்ந்த படியும் இருக்கும், உங்களின் பணம் கரையாமலும் இருக்கும் - நீங்கள் இங்கு சென்றால்.
பெசன்ட் நகர் கடற்கரையில் கார்னிவல்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நீண்ட நாட்களாக இந்த கார்னிவல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறதா, நமக்கு தான் நேரம் இருக்கிறதே. ஒன்றும் தவறில்லை. இன்னமும் செல்லலாம். இது முடிவடையும் தேதி குறிப்பிடவில்லை. ஆகையால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.

குழந்தைகளின் மனதை கவரும் விளையாட்டுகள்
குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட ஸ்நோ வேர்ல்ட், ஜியான்ட் வீல், ரேஞ்சர், கிராஸ் வீல், கொலம்பஸ், வாட்டர் ரோலர், டோரா டோரா போன்ற 20க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. மேஜிக் ஷோ, கடல்வாழ் மீன்கள் காட்சியகம், பறவைகள் வீடு, கண்ணாடி மாளிகை, பேய் வீடு, 3D தியேட்டர் மற்றும் ஒட்டக சவாரி போன்றவையும் இங்கு உள்ளன.
பலவகையான சுவையான உணவுகள்
டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சுவையான மீன் வறுவல் போன்ற வகைவகையான திண்பண்டங்களையும் உண்டு மகிழலாம். அது மட்டுமின்றி நவீன உணவு வகைகளான நூடுல்ஸ், பிசா, பாஸ்தா, ஷவர்மா, பானி பூரி, பார்பிக்யூ சிக்கன் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன.

எதற்காக செல்ல வேண்டும்
இந்தப் பொருட்காட்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிக அளவு இடம் பெற்றுள்ளன. குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவும், பணிச்சுமைக்கிடையே பொழுதுபோக்குவதற்காகவும் நீங்கள் இங்க வந்து செல்லலாம். வருகின்ற பொங்கல் விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த கண்காட்சிக்கு சென்று வாருங்கள்.
நேரம் மற்றும் நுழைவுக்கட்டணம்
இந்த கார்னிவல் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கிறது. வாரத்தின் எல்லா நாட்களிலும் நீங்கள் இங்கே செல்லலாம். உள்ளே செல்ல நுழைவுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. அதனால் உள்ளே சென்றால் கட்டாயம் நாம் ஏதோ ஒரு விளையாட்டில் பங்கேற்று தான் ஆக வேண்டும் என்று இல்லை. சும்மா சுற்றிப் பார்த்து விட்டு சாப்பிட்டு விட்டு கூட வரலாம்.

இங்கே எப்படி செல்வது
சென்னையின் எந்த மூலையில் இருந்தும் பெசன்ட் நகரை அடைய பேருந்துகள் உண்டு. பெசன்ட் நகர் கடற்கரையிலேயே அமைந்துள்ள இந்த கார்னிவலுக்கு உங்கள் வீட்டு குழந்தைகளுடன் சென்று அசத்தலாக ஒரு மாலைப் பொழுதை கழித்துவிட்டு வரலாம்.



Click it and Unblock the Notifications





