தமிழக தலைநகரான சென்னையின் போக்குவரத்து நெரிசலைப் பற்றி கூறவே வேண்டாம். அதிலும் கோயம்பேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் யாவும் விடுமுறை நாட்களிலும், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் திணறுகின்றன. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பயணம் செய்து வருவதே பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனை சரி செய்யும் விதமாக சென்னையை அடுத்த வண்டலூருக்கு அருகிலுள்ள கிளம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி பொருட்செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. உலகத்தர கட்டமைப்பில் தயாராகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா தேதி இப்போது வெளிவந்துள்ளது. புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பல்வேறு அம்சங்கள் என்னவென்று இங்கு பார்ப்போம்!

மாறிக்கொண்டே வரும் சென்னையின் பேருந்து நிலையங்கள்
சென்னை, பிராட்வேயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததால் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது.
தென் மாவட்ட பேருந்துகளுக்கான சிறப்பு பேருந்து நிலையம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏராளமான வசதிகளுடன் தயாராகும் பேருந்து நிலையம்
இந்த சூழலில் கிளாம்பாக்கத்தை சுற்றி ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகள் வரிசை கட்டி வரவுள்ளன. அதுமட்டுமின்றி சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் ரயில் சேவையில் வண்டலூர் அருகே புதிதாக ரயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
லிப்ட் மற்றும் தங்குமிடம் வசதிகள்
இந்த பேருந்து நிலையத்தின் தரைத் தளத்தில் கடைகள், உணவகம், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. முதல் தளத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் தங்குவதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட உள்ளன. அதோடு லிப்ட் வசதியும் இங்கு அமைக்கப்படவுள்ளது. மொத்தமாக 215 கடைகள் இங்கு உள்ளதால் பல விதமான உணவகங்கள் மற்றும் கடைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளின் மேம்பாடு
அப்பகுதியைச் சுற்றி தடையற்ற போக்குவரத்துக்கு வசதியாக, அயனஞ்சேரி-மீனாட்சிபுரம் சாலையை ரூ.7.5 கோடியில் 60 அடி சாலையாக CMDA விரிவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு வசதியாக ரூ.29 கோடி செலவில் வெளிவட்டச் சாலையில் வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து நிறுத்தும் வசதி செய்யப்படும் எனவும் ரூ.17 கோடி செலவில், முனையத்தில் இருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை மழைநீர் வடிகால் வலையமைப்பும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 3ம் தேதி திறக்கப்படும் பேருந்து நிலையம்
2019ம் ஆண்டு தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணி தற்போது முழுமை அடைந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். தீபாவளி, பொங்கல் என்று அடுத்தடுத்து திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியான நிலையில் தற்போது திறப்பு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆம், ஜூன் மாதம் 3ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையம் என அழைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications





