நீண்ட நாட்களாக உங்கள் வீட்டு குட்டீஸ்கள் எங்காவது அழைத்துப் போகச் சொல்லி கொண்டே இருக்கிறார்களா? சென்னை வாசிகள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி 2024 ஜனவரி 12 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பல வேடிக்கைகள், கேளிக்கைகள், விளையாட்டுகள் மற்றும் வித விதமான உணவுகள் ஆகியவை இந்த பொருட்காட்சியின் அம்சங்களாகும்!
சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி
சென்னை வாசிகள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 48 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சி சென்னை தீவுத்திடலில் ஜனவரி 12 அன்று கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி தொடர்ந்து 70 நாட்களுக்கு நடைபெறும், அதாவது நீங்கள் மார்ச் மாதம் மூன்றாம் வாரம் வரை இந்த கண்காட்சியைக் கண்டு களிக்கலாம். பல வேடிக்கைகள், கேளிக்கைகள், நடனம், விளையாட்டு மற்றும் வித விதமான உணவுகளை சுவைத்து மகிழ இந்த கண்காட்சிக்கு நீங்களும் வருகை தரலாம்.

பல்வேறு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி
தொடக்க நிகழ்வாக, கண்காட்சியின் நுழைவுவாயில் பகுதியில் திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த பொருட்காட்சியில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து உள்ளன.
சிறுவர்களின் மனதை கவரும் கண்காட்சி
குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட ஸ்நோ வேர்ல்ட், ஜியான்ட் வீல், வாட்டர் ரோலர், டோரா டோரா போன்ற 2௦க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. 125 சிறிய கடைகள் மற்றும் 60 தனியார் அரங்குகள், பல ஸ்டால்கள், சிறுவர் இரயில், மீன் காட்சியகம், பேய் வீடு. பறவைகள் காட்சி, 3D தியேட்டர் போன்ற விளையாட்டு அம்சங்கள் நிறைந்துள்ளன.

பல்வேறு வித்தியாசமான ஸ்டால்கள்
டிராபிக் போலீஸ், பொது காவல் துறை, அவர்களின் பதவிகள், உபயோகப்படுத்தும் ஆயுதங்களின் மாதிரிகள் ஆகியவை காவல்துறை ஸ்டாலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பிரபலக் கோயில்களின் மினி கட்டமைப்புகள், கோபுரங்கள்,அழகிய பல்வேறு சுவாமி சிலைகள் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை ஸ்டாலில் நீங்கள் பார்க்கலாம். மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை, ஆவின், காதி, சுற்றுலா, கல்வி போன்ற பல்வேறு அரசுத் துறைகளின் ஸ்டால்கள் வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு உணவுகளையும் சாப்பிடலாம்
டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சுவையான மீன் வறுவல் போன்ற வகைவகையான திண்பண்டங்களையும் உண்டு மகிழலாம். அது மட்டுமின்றி நவீன உணவு வகைகளான நூடுல்ஸ், பிசா, பாஸ்தா, ஷவர்மா, பானி பூரி, பார்பிக்யூ சிக்கன் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன.
தீவுத்திடல் கண்காட்சி 2024 டிக்கெட்டுகள்
2024 ஆம் ஆண்டிற்கான தீவு திடல் கண்காட்சி டிக்கெட்டுகளை நேரடியாக அந்த இடத்தில் வாங்கலாம். முரண்பாடுகளைத் தவிர்க்க, அமைப்பாளர் நுழைவுச் சீட்டுகளை நேரலை கவுண்டரில் மட்டுமே வழங்குகிறார். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டால்கள், விளையாட்டுகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளையும் மக்கள் அந்தந்த இடங்களில் நேரடியாக வாங்கலாம்.
கட்டணம் மற்றும் திறந்திருக்கும் நேரம்
பெரியவர்களிடம் ரூ. 40, சிறார்களிடம் ரூ. 25 மற்றும் மாணவர்களிடம் ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப்படும். பொங்கல் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். மீதமுள்ள நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.



Click it and Unblock the Notifications





