பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகள், பசுமையான காபி தோட்டங்கள், சுற்றிலும் சில்லென்ற காற்று, எங்கும் நிசப்தம் என, தனியாக பயணிக்க விரும்புபவர்களுக்கு, சிக்மகளூர் சரியான தேர்வு.
நகரத்தினுள் இருக்கும் இறைச்சலிருந்து தப்பித்து, சாகசத்திற்கும், அமைதிக்கும் வாய்ப்பை வழங்கும் ஒரு அழகான இடம் சிக்மகளூர். தனியாக பயணிக்க விரும்புபவர்களின் புகலிடமாகவும் மாறி வருகிறது.
கலாசார, தியான மறைவிடங்களுடன் உங்களின் அட்ரினலினை விரைவாக வைத்திருக்கும் மலையேற்றங்களையும் நீங்கள் தேடுகிறீர்களின் என்றால், அந்த அனைத்தையும் சிக்மகளூர் வாரி வழங்கும்.
எப்போது பயணிக்கலாம்
சிக்மகளூருக்கு ஆண்டு முழுவதும் விஜயம் செய்யலாம். இருப்பினும், செப்டம்பர் முதல் மே வரை சிறந்தது. இந்த மாதங்களில்தான் தட்பவெப்ப நிலைகள் வெளியில் தடையின்றி சுற்ற உங்களை அனுமதிக்கும்.
தங்குமிடம்
பாதுகாப்பான தங்குமிடங்களைத் தேர்வு செய்யவும். காபி தோட்டங்களில் உள்ள பல ஹோம்ஸ்டேகள், ஒருவர் தன் இரவுகளை சௌகரியமாக கழிக்க வீடு போன்ற சூழலை வழங்குகின்றன.
செராய், ட்ரிவிக் ஹோட்டல்கள் & ரிசார்ட்ஸ் போன்ற பிரபலமானவை. அதுமட்டுமின்றி, உள்ளூர் ஹோம்ஸ்டேகளும் உள்ளன.

போக்குவரத்து
சிக்மகளூரில் பொதுப் போக்குவரத்து குறைவு. எனவே, தனியாகப் பயணிப்பவர்கள் ஸ்கூட்டர்களை வாடகைக்கு எடுப்பது அல்லது வாடகை டாக்ஸிகளை எடுப்பது சிறந்தது. வரைபடம் அல்லது ஜிபிஎஸ் எப்பொழுதும் உங்கள் கைகளில் இருப்பது நல்லது. தேர்வு செய்யும் வாகனங்கள், அது சார்ந்த நிறுவனங்கள் நேர்மையானவையா என்பது ஒரு முறைக்கு, இரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மலையேற்றம்
மலையேற்றம் அல்லது சுற்றுப்பயணத்தை உள்ளூர் வழிகாட்டியுடன் மேற்கொள்ளலாம். அவர் அனுபவத்தை மிகவும் பயனுள்ளதாகவும், எந்தவொரு பயணிக்கும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறதா என்பதை உறுதி செய்வார். பிராந்தியத்தில் காணப்படும் கலாசாரத்தின் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை பற்றிய சிறந்த தகவல்கள், அழகான அனுபவங்களையும் உங்களுக்கு கொண்டு வருவார்.
இணைந்திருங்கள்
உங்கள் பயணத்தின் போது ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தினர் அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளுக்குச் சென்றால், தொடர்ந்து உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பயண அனுபவங்களை வழங்கி கொண்டே இருங்கள்.
அவசரத் தொடர்புகள்
மருத்துவமனைகள், உள்ளூர் போலீஸ் மற்றும் நீங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கான தொடர்புகள் போன்ற அவசர தொடர்பு விவரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். 112 என்பது இந்தியாவின் உள்ளூர் அவசர எண்.

முன்னெச்சரிக்கைகள்
உங்களிடம் அடிப்படை 'First Aid'மருத்துவப் பெட்டி மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்க, பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களில் சாப்பிடுவது நல்லது.
ஊர் சுற்ற முக்கிய இடங்கள்
முல்லையனகிரி சிகரம்:
கர்நாடகாவின் மிக உயரமான மலை சிகரமான முல்லயனகிரி. சவாலான மலையேற்றத்தை வழங்குகிறது. நேரடி சூரிய ஒளி இல்லாததால் உங்கள் பயணத்தை சீக்கிரம் தொடங்குங்கள்.
பாபா புடாங்கிரி
சூஃபி துறவியின் பெயரிடப்பட்ட இந்த மலைத்தொடர், அதன் குகைகள் மற்றும் இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது. பாபா புடங்கிரி மலையேற்றமானது அடர்ந்த தாவரங்கள் மற்றும் காபி தோட்டங்கள் வாயிலாக படரும்.
ஹெப்பே நீர்வீழ்ச்சி
காபி தோட்டத்திற்குள் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை மலையேற்றம் அல்லது ஜீப் சவாரி மூலம் அடையலாம். முழுப் பகுதியும் அழகான அன்றாட கால் தடங்கள் படாத காடுகளுடன் சுத்தமான நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது, அவை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும்.
குத்ரேமுக் தேசிய பூங்கா
இது இந்தியாவின் சிறந்த வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும்; குத்ரேமுக், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது. இந்த பூங்காவில் விலங்கினங்களுடன் பல்வேறு தாவரங்கள் உள்ளன. அதேசமயத்தில் மலையேற்ற பாதைகள் எளிதானவை முதல் கடினமானவை வரை உள்ளன.
காபி தோட்ட சுற்றுப்பயணங்கள்
சிக்மகளூரின் சில காபி தோட்டங்களுக்குச் செல்லாமல் நீங்கள் உங்கள் பயணத்தை நிறைவு செய்ய முடியாது. பல தோட்டங்கள் வழிகாட்டப்பட்ட சுற்றுப் பயணங்களை வழங்குகின்றன. அங்கு காபியை வளர்ப்பதிலும், செயலாக்குவதிலும் ஈடுபட்டுள்ள பல்வேறு நிலைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை நிச்சயமாக பெறுவீர்கள்.
ஹொய்சலா கோவில்கள்
பெலவாடி, ஹளேபிடு மற்றும் பேலூர் பழங்கால கோவில்கள், இப்பகுதியின் கலாசார செழுமையைக் குறிக்கின்றன. வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் தவறவிட முடியாத கட்டிடக்கலை அற்புதங்கள்.
உள்ளூர் உணவு
பிரபலமான உணவை, இங்கே முயற்சித்து பாருங்கள். அவற்றில், சில அக்கி ரொட்டி, நீர் தோசை, பிசி பேலே பாத் மற்றும் பிற. சிக்மகளூர் தென்னிந்திய மற்றும் சைவ சிறப்பு உணவுகளையும் கொண்டுள்ளது.
நினைவாற்றல் மற்றும் ஆரோக்கியம்
யோகா மற்றும் தியான வகுப்புகளை வழங்கும் பல ஓய்வு விடுதிகள் மற்றும் ஹோம்ஸ்டேகள் உள்ளன. இந்த பயிற்சிகள் சிக்மகளூரின் அழகிய நிலப்பரப்புகளை அனுபவிக்கும் போது, உங்கள் மனதையும், முழு உடலையும் ரிலாக்ஸ் செய்ய நிச்சயமாக வாய்ப்பளிக்கும்.
இயற்கை நடைகள்
காபி எஸ்டேட், காடுகள், மலைகள் ஊடே நிதானமாக நடந்து செல்லலாம். அத்தகைய அமைதியான சூழலில் தன்னைப் பற்றி ஆழமாக சிந்திக்க அனுமதிக்கிறது. பதற்றமும் குறையும்.
பொறுப்பான பயணம்
தனியாக பயணம் செய்யும் ஒருவர் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். குப்பைகளை ஆங்காங்கே போடாதீர்கள். சூழலுக்கு உகந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள் மற்றும் நிலையான சுற்றுலாவைக் கடைப்பிடிக்கும் உள்ளூர் வணிகங்களை ஆதரிக்கவும்.
வனவிலங்கு பாதுகாப்பு
நீங்கள் வனவிலங்கு சரணாலயங்கள் அல்லது பூங்காக்களில் இருந்தால், அதிகாரிகள் வகுத்துள்ள அனைத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டும். விலங்குகளின் தனியுரிமையில் தலையிடாதீர்கள். அனைத்து நிகழ்வுகளிலும் சுற்றுச்சூழல் சுற்றுலா கொள்கைகளை பின்பற்றவும்.
சாகச மலையேற்றங்கள் முதல் அமைதியான இடங்கள் வரையிலான பல்வேறு செயல்பாடுகளை, தனியாக பயணிக்கும் பயணப்பிரியர்களுக்கு கொட்டி கொடுக்கும் சிறந்த இடம் சிக்மகளூர்.
மகிழ்ச்சியான நேரங்கள் நிறைந்த பாதுகாப்பான பயணத்திற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னரே நீங்கள் திட்டமிட்டு செய்ய வேண்டும். பயணத்தின் போது அமைதியைத் தழுவுவதோடு, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ள தவறாதீர்கள்.
சிக்மகளூர் என்ற மாய உலகத்தில் உங்களை நான் விரைவில் சந்திக்கிறேன். வாங்க சந்திக்கலாம்.



Click it and Unblock the Notifications





