கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதி கொடைக்கானல். இது, தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. கடந்த 1845 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள், கிறிஸ்தவ மிஷனரிகளால் ஒரு தலமாக உருவாக்கப்பட்டது. இருப்பினும், சங்க இலக்கிய காலத்திலேயே மலைவாசஸ்தலத்தைப் பற்றிய ஆரம்பகால அதிர்ச்சியூட்டும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன என்பதை நம்பியாக வேண்டும்.

கொடைக்கானலின் நவீன சகாப்தம் ஆங்கிலேயர்கள் வந்த பின்னரே தொடங்கியது. இது, கோடைகால ஓய்வு மற்றும் காலனித்துவத்தின் விடுமுறை இடமாக விளங்கியது. இப்படிப்பட்ட சுற்றுலா தளத்தில் பியர் ஷோலா நீர்வீழ்ச்சி முதல் டால்பின் நோஸ் வரை, பல இடங்கள் உள்ளன.
அவை ஒவ்வொரு சீசனிலும், அங்கு வரும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. கொடைக்கானல் பெரும்பாலும் சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்தாலும், நகரத்தின் பொருளாதாரத்தில் விவசாயமும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.

ஹலோ... விவசாயம், பொருளாதாரம் என, ஏதோ பொருளாதாரம் பாடம் எடுக்க போகிறீங்களா? பாஸ்...! இந்த கட்டுரை என்பது சுற்றுலா பற்றிய சுவாரஸ்சிய நிறைந்தது என நினைத்து கீழே வேற படிக்க வந்துட்டோம்.
ஆனால், நீங்க என்ன என்றால், விவசாயம் என, ஏதோ சொல்ல போறீங்க போல...! சரி சரி கோவப்படாதீங்க பாஸ்... ஒரு ஊரில் உள்ள சுற்றுலா தலம் மட்டும் முக்கியம் அல்ல... அங்குள்ள முக்கிய தகவலும் தெரிந்தால் நமக்கு பிரயோஜனப்படும் தானே...!

கொடைக்கானலில் நீங்க பல இடங்களுக்கு ஊர் சுற்றிவிட்டு திரும்பும்போது, மறக்காம இந்த கிராமத்துக்கும் ஒரு ரவுண்டு அடிங்க. அதாவது, கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் பூண்டு விவசாயம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது, 3000 ஆண்டுகள் பழமையானது.
அம்மாடியோவ்... இவ்வளவு பழமையானது? சத்தியமா எனக்கு கூட தெரியாதுங்க. இங்கு வாழும் மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம். இங்குள்ள பல தோட்டங்களில் உருளைக்கிழங்கு, கேரட், பூண்டு, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. உற்பத்தியாகும் காய்கறிகள் அனைத்தும் வடுகபட்டி என்ற கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உங்களுக்கு தெரியும்?
மலைகளின் அரசியான கொடைக்கானலில் காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் அதிகமாக தென்படும். அவை உணவு தேடி வரும் போது, ஊருக்குள் விவசாயிகள் விளைவிக்கும் உருளைக்கிழமை, பீன்ஸ், முட்டைகோஸ், கேரட் போன்ற காய்கறிகளை வயிறார உண்டு பெரும் சேதத்தை விளைவித்துவிட்டு அசால்ட்டாக சென்றுவிடும்.
ஆனால், பூண்டை எந்த விலங்குகளும் சாப்பிடாது என்பது உங்களுக்கு தெரியும் ? சத்தியமா சொல்றேன் எனக்கு இதுநாள் வரை தெரியாதுங்க. ஆகையால் தான் பல ஆண்டுகளாக, இங்குள்ள மக்கள் பூண்டு விவசாயித்தை பிரதானமாக கொண்டுள்ளனர்.
இங்குள்ள 98 சதவீத மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்தான். அதில் பூண்டு விவசாயம் பிரதானம். ஆகையால் தான் பூண்டு விவசாயம் இங்கு மிகவும் பிரபலமானது என்பதை தெரிந்து கொண்டு தான் ஆக வேண்டும்.
இரண்டு வகை
இப்பகுதியில் இரண்டு வகையான பூண்டு விளைகிறது. ஒன்று மலைப்பூண்டு. நவம்பர் முதல் டிசம்பர் வரை அறுவடை செய்யப்படும். மற்றொன்று மேட்டுப்பாளையம் பூண்டு. இது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பயிரிடப்படுகிறது. உற்பத்தி செய்ய மூன்று மாதங்கள் ஆகும். இங்கு உற்பத்தியாகும் பூண்டு வடுகபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பூண்டு தோட்டங்களைத் தவிர, கொடைக்கானலில் விவசாயத்தில் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. கொடைக்கானல் பழத்தோட்டங்களுக்கும் பெயர் பெற்றது.
கொடைக்கானலில் உள்ள பழத்தோட்டங்களில் பேரிக்காய், பீச், திராட்சை, பிளம்ஸ் போன்ற பழங்கள் அதிகளவில் விளைகின்றன. கொடைக்கானல், மாநிலத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. கொடைக்கானலில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு புத்துணர்ச்சி மற்றும் தரம் அதிகம் உள்ளது என்பதை, அங்கு சென்று பிரஸ்ஸாக வாங்கி சாப்பிட்டவர்களுக்கு தெரியும்.
ஊர் சுற்றிவிட்டு, அங்குள்ள மக்களின் வாழ்வில் முறை போன்றவற்றையும், அங்கிருக்கும் பிரபலமான விஷயங்களை அறிந்து கொள்வது ஒரு வித அலாதி தான். மறக்காதீங்க... இப்ப கொடைக்கானல் போவதற்கு சரியான நேரம். சில்லென்ற காற்று, துாரல்... பகலிலும் உடலை உறைய வைக்கும் குளிர்... பூண்டு வாசனையின் ஊடே தோட்டங்களை கடந்தும், நடந்தும் செல்வது போல நினைத்து பாருங்கள் ஒரு முறை...



Click it and Unblock the Notifications






