சென்னையில் பனியா? அதுவும் ஏப்ரல் மாதத்திலா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் சென்னை உண்மையில் மைனஸ் 3 டிகிரி வெப்பநிலை பதிவு செய்து குளிரால் நடுங்கியது என்றே சொல்லலாம். இந்த அதிசயம் நடந்து 200 வருடங்களுக்கு மேலாகிறது. ஆம்! 1815 ஆண்டு ஏப்ரல் மாதம் 24 முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை சென்னையில் பகல் வெப்பநிலை வெறும் 12 டிகிரியாகவும், இரவு வெப்பநிலை மைனஸ் 3 டிகிரியாகவும் குறைந்து சென்னை முழுக்க பனி மழை பெய்துள்ளது. இன்று கருணையே இல்லாமல் அக்னிபழம் போல் கொதித்துக் கொண்டிருக்கும் சென்னையில் பனிமழை பெய்தது என்பது ஆச்சர்யமாக உள்ளது தானே! அன்று சென்னையில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே உறைந்து தான் போனதாம். அதற்கு என்ன காரணம் தெரியுமா? இதே போல் சென்னையில் மறுபடியும் பனிமழை பெய்ய வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம் வாருங்கள்!

பனிமழையில் நனைந்த சென்னை
இன்று நாம் அனைவரும் அறிந்த தோராயமான சென்னையின் வெப்பநிலை, 30-40 °C தான். கடற்கரை நகரம் என்பதால் மழைக் காலங்களை தவிர்த்து மீதி எல்லா நாட்களிலும் சென்னையில் வெயில் தான். ஆனால் இப்படிப்பட்ட சென்னையில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பனி மழை பெய்துள்ளது. ஏப்ரல் 24 - 28 தேதி வரை காஷ்மீர் போல பனிமழை சென்னையில் பெய்துள்ளது. சென்னை வானிலையில் நிபுணத்துவம் பெற்ற வானிலை பதிவர்கள், ஏப்ரல் 1815 இல் சென்னையில் பதிவு செய்யப்பட்ட வானிலை ஆய்வுகளை தோண்டி எடுத்தனர். அதன் மூலம் சென்னை பனிமழையில் அன்று நனைந்தது தெரிய வந்துள்ளது.

எரிமலை வெடிப்பினால் உலகில் ஏற்பட்ட பனிமழை
உலகில் சுமார் 1500 செயலில் எரிமலைகள் உள்ளன, அவற்றில் சில வரலாற்றின் மிகவும் துயரமான இயற்கை பேரழிவுகளில் சிலவற்றை ஏற்படுத்தியுள்ளன. 1815 இல் ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பு, மவுண்ட் தம்போரா வெடிப்பு என்று அழைக்கப்படுகிறது. மவுண்ட் தம்போரா என்பது இந்தோனேசியாவின் சும்பாவாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு செயலில் உள்ள எரிமலை ஆகும். தம்போரா மலையின் வெடிப்பு, மனிதகுலத்தைப் பாதித்த மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகவும் தீவிரமான எரிமலை வெடிப்பாகும்.

12,000 மக்களை விழுங்கிய தம்போரா எரிமலை
ஏப்ரல் 5, 1815 இல், தம்போரா மலையில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தம்போரா எரிமலை வெடித்து சிதறியது. இதன் சத்தத்தை 2,000 கிமீ தூரத்திற்கு அப்பால் இருந்தும் கூட கேட்க முடிந்ததாம். இந்த வெடிப்பு தம்போரா கிராமத்தையே அழித்துவிட்டது, இதில் கிட்டத்தட்ட 12,000 மக்கள் இறந்தனர். தம்போரா மட்டுமின்றி இந்தோனேசியா பல கிராமங்களையும் இந்த எரிமலை வெடிப்பு துவம்சம் செய்தது. இன்று வரை பதிவான எரிமலை வெடிப்புகளில் இதுதான் மிக மிக மோசமான எரிமலை வெடிப்பு என்று கூறப்படுகிறது.
குறைந்த உலக வெப்பநிலை
தம்போரா எரிமலை வெடிப்பின் போது, மில்லியன் கணக்கான டன் சல்பர் டை ஆக்சைடு மற்றும் பிற தனிமங்கள் வெளியிடப்பட்டன. இந்த கலவையானது வளிமண்டலத்தில் உயர்ந்து பூமத்திய ரேகையிலிருந்து துருவங்களுக்கு பரவலாக பரவியது. சல்பர் டை ஆக்சைடு ஆக்சிஜனேற்றம் செய்து அதன் விளைவாக சல்பேட் அயனிகளை உருவாக்கத் தொடங்கியது. இந்த அயனிகள் சிறிய அளவிலான சூரிய ஒளியை பிரதிபலிக்கும் சிறிய துகள்களாக மாறியது. இதன் விளைவாக, வளிமண்டலத்தில் ஒரு போர்வை உருவாகி முழு உலகையுமே அது மூடியது. இதனால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு முழு உலகமும் இருண்டது. சில இடங்களில் சூரிய ஒளி கிடைக்க பல மாதங்கள் கூட ஆனது என்று அறிக்கைகள் கூறுகின்றன.

பனிமழையை சந்தித்த சென்னை
தம்போரா எரிமலை வெடிப்பினால் வானில் நிகழ்ந்த மாற்றம் சென்னை மட்டுமின்றி முழு உலகையுமே ஆட்டி படைத்தது. ஐந்து நாட்களும் உலகின் வெப்பநிலை குறைந்து காணப்பட்டதோடு பல இடங்களில் பனி மழையும் பெய்தது. அதில் சென்னையும் ஒரு பகுதியாகும். எரிமலை வெடிப்பு ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்பில் சில தீவிரமான தீங்கு விளைவிக்கும் விளைவுகளையும் ஏற்படுத்தியது. தம்போரா எரிமலை வெடித்ததற்கு அடுத்த ஆண்டு 'கோடை இல்லாத ஆண்டு' என்று அறியப்பட்டது. உலகம் இந்த அழிவிலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் மீண்டு வர பல ஆண்டுகள் ஆனது என அறிக்கைகள் கூறுகின்றன.



Click it and Unblock the Notifications





