கிட்டத்தட்ட 7,000 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரையை உள்ளடக்கிய இந்தியாவில் மணல் சூழ்ந்த கடல்கள், மலைகளுக்கு நடுவில் கடல்கள், சுற்றிலும் பனை தோப்புகள் அடங்கிய கடல்கள், சதுப்பு நில கடற்கரைகள் என பற்பல அழகிய கடற்கரைகள் உள்ளன. எனினும் வெளிநாடுகளில் மட்டுமே காணக்கூடிய இரவில் நீல நிறத்தில், ஜொலிக்கின்ற கடற்கரைகள் இந்தியாவில் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் இருக்கின்றன! மின்மினி பூச்சிகளால் ஆன கம்பளம் கடலில் விழுந்து கிடப்பது போன்ற ஒரு மாய பிம்பத்தை இது உருவாக்கும். இந்த வித்தியாசமான கடற்கரைகள் இந்தியாவில் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன என்று பார்ப்போமா?
பயோலுமினென்சென்ஸ் ஏற்படுத்தும் அரிய நிகழ்வு
நாம் பார்த்து கொண்டிருப்பது கனவா இல்லை நிஜமா என்று தெரியாத உணர்விற்கு நாம் சென்று விடுவோம். இரவில் கடலின் கரைகள் முழுக்க நீல கம்பளம் போர்த்தி இருப்பது போல தெரிவதை பார்த்தால் யார் தான் இதனை நிஜமென்று உணருவார்கள்? ஆனால் இந்த அதிசய நிகழ்வுக்கு காரணம் - பயோலுமினென்சென்ஸ் எனப்படும் ஒரு செயலாகும். பயோலுமினென்சென்ஸ் என்பது பாக்டீரியா, பூஞ்சை, பாசிகள், பூச்சிகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களால் ஏற்படுகிறது. இது இந்த உயிரினங்களுக்குள் நிகழும் ஒரு வகை வேதியியல் அல்லது ஒரு வேதியியல் எதிர்வினை ஆகும். இந்த நிகழ்வு ஏற்படும் போது அலைகளால் அந்த உயிரினங்கள் கரைக்கு அடித்து வரப்படுகின்றன. அதனால் தான் கடற்கரைகள் நீல வண்ணத்தில் மின்னுகின்றன.
இந்தியாவில் பயோலுமினென்சென்ஸ் கடற்கரைகள்
ஹேவ்லாக் கடற்கரை, அந்தமான் தீவுகள்
ஒளிரும் கடற்கரைகளில் ஒன்றைப் பார்வையிடுவது நிச்சயமாக இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் உணர்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். சந்தேகத்திற்கு இடமின்றி, அந்தமானின் ஹேவ்லாக் தீவு கடற்கரை மிகவும் பிரபலமான பயோலுமினசென்ட் கடற்கரையாக இந்த பட்டியலில் முதலில் உள்ளது.
பயோலுமினென்சென்ஸை காணுவதற்கான உச்ச நேரம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆகும். இந்த நிகழ்வை நீங்கள் எங்கு, எப்போது பார்க்கலாம் என்று உள்ளூர் டூர் ஆபரேட்டர்களிடம் நீங்கள் கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல அந்தமானுக்கு ட்ரிப் பிளான் பண்ணலாம்.
பங்காரம் கடற்கரை, லட்சத்தீவு
லட்சத்தீவுகளின் அமைதியான தீவுகளில் அரேபிய கடலில் அமைந்துள்ள பங்காரம் என்ற சிறிய தீவு ஒளிரும் இரவு நேர கடற்கரை அழகைக் காணுவதற்கு ஏற்ற இடமாகும். பயோலுமினசென்ட் பைட்டோபிளாங்க்டன், பாசிகள் மற்றும் ஜெல்லிமீன்கள் ஆகியவற்றைத் தவிர வேறெதுவும் உங்களை தொந்தரவு செய்யாததால், ஒளிரும் கடலின் அழகில் நீங்கள் தொலைந்து போவது உறுதி.
இயற்கையானது சில அற்புதமான மூச்சடைக்கக்கூடிய நேர்த்தியைக் கொண்டுள்ளது. லட்சத்தீவில் உள்ள பங்காரம் கடற்கரை இதற்கு சிறந்த உதாரணம் என்பதை நீங்களே உணருவீர்கள்.
ஜூஹு கடற்கரை, மும்பை
பரபரப்பான மும்பை மாநகரத்தின் மிகவும் பிரபலமான கடற்கரையான ஜூஹு கடற்கரை 2016 ஆம் ஆண்டு முதன் முதலில் பயோலுமினென்சென்ஸ் நிகழ்வைக் கண்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கடற்கரையில் அரங்கேறும் இந்த சிறப்பு காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், கடற்கரையிலிருந்து அரை கிமீ தொலைவில் இந்த மகிழ்ச்சியான காட்சியைக் காணலாம். எனவே, அடுத்த முறை மும்பையின் புகழ்பெற்ற ஜூஹூ கடற்கரையில் பயோலுமினசென்ட் உயிரினங்கள் உள்ளன என்று கேள்விப்பட்டால், உங்கள் காரை ஸ்டார்ட் செய்து உடனே அங்கு செல்லுங்கள்!
பெடல்பாடிம் கடற்கரை, கோவா
கோவா ஏற்கனவே இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலம், எனினும் இந்த ஒளிரும் நீல நீர் கடற்கரை கோவாவை இன்னும் பிரபலமாக்குகிறது. பெடல்பாடிம் கடற்கரை இரவில் நம்பமுடியாத அளவிற்கு பிரகாசிக்கிறது. கடற்கரையை ஒட்டியவரே பல தங்குமிடங்கள் மற்றும் குடில்கள் உள்ளன. அதில் அமர்ந்தவாரே அலாதியாக நீங்கள் மின்னும் கடற்கரையை கண்டு ரசிக்கலாம்.
கடற்கரையில் பயோலுமினசென்ட் ஆல்காவைப் பார்க்க சிறந்த நேரம் குளிர்காலம் ஆகும். ஆகவே நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் கோவாவுக்கு சென்றால் பயோலுமினென்சென்ஸ் நிகழ்வைக் காணலாம்.
மட்டு கடற்கரை, உடுப்பி
மங்களூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அழகிய கடற்கரையான மட்டு உள்ளது. இந்த கடற்கரை ஒரு தனிமையான சொர்க்கம் மற்றும் இது இரவில் ஒளிர்கிறது. மட்டு கடற்கரை பிக்னிக், நடைபயிற்சி மற்றும் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடமாகும். பல இரவுகளில், ஆடும் தென்னை, பனை மரங்களின் வழியே நடந்து செல்லும்போது, கடல் பிரகாசமாவதை நீங்களே கண்டு வியப்பீர்கள்!
திருவான்மியூர் கடற்கரை, சென்னை
இந்தப் பட்டியலில் புதிதாக இடம் பெற்றது நம் திருவான்மியூர் கடற்கரை! ஆம், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஒரு சாதாரண இரவில் கடலில் நீல நிறத்தில் ஏதோ மின்னுவதைக் கண்டு கடற்கரைக்குச் செல்பவர்கள் ஆச்சரியப்பட்டனர். விரைவில், சென்னை கடற்கரையில் முதன்முறையாக பயோலுமினென்சென்ஸ் தென்பட்டது என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது! சென்னை கடற்கரையில் இது சாதாரண நிகழ்வாக இல்லாவிட்டாலும், இது மறுபடியும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால் உடனே அங்கு சென்று இந்த நிகழ்வைக் காண தவறாதீர்கள்!
அமெரிக்கா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், தாய்லாந்து மற்றும் பசுபிக் தீவு நாடுகளில் மட்டுமே தென்படும் இந்த அரிய நிகழ்வு நம் இந்திய கடற்கரைகளிலும் அரங்கேறுகிறது என்றால் நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?