தொன்று தொட்டு விளங்கும் தமிழகத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் நாம் ஒருநாளும் மறக்க முடியாது. அதற்கு சான்றாக பல கோவில்களும், அரண்மனைகளும், கோட்டைகளும், கோபுரங்களும் நிற்கின்றன. அந்த வகையில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டவர்களான டென்மார்க்கை சேர்ந்த டேனிஷ்காரர்கள் காரைக்காலுக்கு அருகே தரங்கம்பாடியில் எழுப்பியிருக்கும் டான்ஸ்போர்க் கோட்டை மற்றும் தேவாலயத்தை பற்றி நாம் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்!
எதற்காக செல்ல வேண்டும்
இந்தியாவை நீண்ட காலம் ஆங்கிலேயர்கள் ஆண்டிருந்தாலும், முதன்முதலாக இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்து வர்த்தகம் செய்ய வந்தவர்கள் போர்த்துகீசியர்கள், அவர்களை தொடர்ந்து டச்சு, டேனிஷ், பிரெஞ்சு, பிரிட்டிஷ் என ஒருவர் பின் ஒருவராக வந்தனர். அனைத்து ஐரோப்பியர்களும் இந்தியாவின் பல பகுதிகளில் கோட்டைகளையும், கோபுரங்களையும், தேவாலயங்களையும் எழுப்பினர். அவற்றில் ஒன்று தான் தரங்கம்பாடியில் இருக்கும் டான்ஸ்போர்க் கோட்டை.

டான்ஸ்போர்க் கோட்டை
இருதரப்பு வர்த்தகத்தைத் தொடங்குவதற்காகக் கட்டப்பட்ட டான்ஸ்போர்க் கோட்டை, காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கும் டிரான்க்யூபார் கடற்கரையில் இன்றும் காணலாம். சிறிய நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், டேனிஷ், பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் பிரஞ்சு காலனிகளின் கலவைகளைக் காணலாம். இது இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டையாகும். இந்த தளம் நிறைய வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை நாமே உணரலாம். தரங்கம்பாடியை அடைந்தவுடன் கடலோரத்தில் அமைதியாக வீற்றிருக்கும் கோட்டையை பார்வையிட்டுவிட்டு அடுத்தடுத்த இடங்களுக்கு செல்லலாம்.

புதிய ஜெருசலேம் தேவாலயத்திற்கு ஒரு பயணம்
புதிய ஜெருசலேம் தேவாலயம் டேனிஷ் கட்டிடக்கலையின் மற்றொரு தொன்மையான வடிவமாகும். அமைதியான தேவாலயத்தில் ஒரு கல்லறை உள்ளது. 1718 இல் கட்டப்பட்ட இந்த தேவலாயத்தில், மத அமைப்பு இந்திய மற்றும் ஐரோப்பிய பாணிகளின் தாக்கத்தை காணலாம். லூத்தரன் மதகுருக்களின் புகழ்பெற்ற உறுப்பினரான பர்த்தலோமஸ் ஜீகன்பால்கின் கல்லறை இருக்கும் இடமாகவும் இந்த தேவாலயம் உள்ளது. இதனால் தரங்கம்பாடியில் உள்ள தேவாலயம் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

கடற்கரையில் உலா செல்லுங்கள்
அழகு நிறைந்த கடற்கரைகளில் ஒன்றான தரங்கம்பாடி கடற்கரை பொழுதுபோக்கிற்கு ஏற்ற இடமாகும். "ஆடும் அலைகளின் நிலம்" என்று பொருள்படும் தரங்கம்பாடி, அலைகளின் இனிமையான தாலாட்டுப் பாடல்களையும் அடிவானத்தின் மூச்சடைக்கக் கூடிய காட்சிகளையும் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துகிறது. தம்பதிகள் நிதானமாக உலா செல்வதற்கும், நெருக்கமான நேரத்தை ஒன்றாக செலவிடுவதற்கும் இது சரியான இடமாக உள்ளது.

மாசிலாமணி நாதர் கோவில்
700 ஆண்டுகள் பழமையான கோயில், அதன் தனித்துவமான கட்டிடக்கலையால் தனித்துவமாக தெரிகிறது. சீன மற்றும் தமிழ் வடிவமைப்புகளின் நேர்த்தியான தொகுப்பைக் கொண்ட இக்கோவில் சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட கோவிலாகும். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையிலிருந்து இந்த கோவில் 300 மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கட்டாயம் நீங்கள் பார்வையிட வேண்டிய கோவிலாகும்.
இவை மட்டுமின்றி, சீயோன் தேவாலயம், பழைய டேனிஷ் கல்லறை ஆகியவற்றையும் நீங்கள் பார்வையிடலாம்.
எப்படி செல்வது
தரங்கம்பாடி புதுச்சேரியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் அமைந்துள்ளது. புதுச்சேரி, சிதம்பரம், காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் பகுதியிலிருந்து தரங்கம்பாடியை எளிதில் அணுகலாம்! காரைக்காலில் இருந்து தரங்கம்பாடிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீங்கள் பொது போக்குவரத்து முறையிலும், அல்லது சொந்த வாகனத்திலும் தரங்கம்பாடிக்கு வரலாம். வரலாறும் கலாச்சாரமும் நிறைந்த இந்த இடத்திற்கு நீங்கள் போவது எப்போது?



Click it and Unblock the Notifications





