டார்ஜிலிங், கேரளா, கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில ரயில் பயணங்கள் மிகவும் அழகான ரயில் பயணங்களாக கூறப்படுகின்றன. வழி நெடுக மலைகளும், நீர்வீழ்ச்சிகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த இந்த ரயில் பாதைகள் நாம் மறக்க முடியாத அனுபவங்களை தருவதாக கூறுகின்றனர். ஆனால் இவற்றிற்கு ஈடாக தமிழ்நாட்டிலும் இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பாதைகள் இருக்கின்றன. இந்த விஷயம் நம்மில் பலருக்கும் தெரியாது. பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு முதல் செங்கோட்டையிலிருந்து கொல்லம் வரை என தமிழ்நாட்டிலிருந்து செல்லும் ரயில் பாதைகள் சமவெளிகள், காடுகள், நீர்நிலைகள் நிறைந்த ஒரு அழகிய பயணத்தை கொடுக்கின்றன. நீங்கள் இந்த இடங்களுக்கு வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காக சென்றாலோ ரயிலில் டிக்கெட் புக் செய்து சென்று பாருங்கள், இந்த பாதைகள் ஏன் தமிழ்நாட்டின் அழகிய ரயில் பாதைகள் என்று கூறப்படுகின்றன என்பது உங்களுக்கே புரியும்!

மேட்டுப்பாளையம் - ஊட்டி
தமிழ்நாட்டில் எத்தனை அழகான ரயில் பாதைகள் இருந்தாலும் அவற்றிற்கு எல்லாம் மணி மகுடம் போல் இருப்பது மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பயணம் தான். 1908 இல் கட்டி முடிக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் பாதை மூடுபனி புல்வெளிகள் மற்றும் பசுமையான தேயிலை தோட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகள் வழியாக உங்களை ஊட்டிக்கு அழைத்து செல்கிறது.
யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களில் இடம் பிடித்துள்ள ஊட்டி மலை ரயில் பயணம் 6,200 அடி உயரத்தில் மெதுவாக உங்களை தாலாட்டிக் கொண்டே முழு நீலகிரி இயற்கை அழகையும் கண்டு ரசிக்க வைக்கிறது. ஆனால் இந்த மலை ரயிலில் நீங்கள் பயணிக்க வேண்டுமென்றால் ஓரிரெண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும், அதிலும் கோடை விடுமுறையில் நீங்கள் செல்ல திட்டமிடுகிறீர்கள் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே புக் செய்துவிட வேண்டும்.

செங்கோட்டை - கொல்லம்
கொல்லம்-செங்கோட்டை இரயில் பாதை தமிழ்நாட்டின் செங்கோட்டையையும் கேரள மாநிலத்தின் கொல்லம் சந்திப்பையும் இணைக்கிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் இந்த ரயில் பயணம் உங்களை பல ஆறுகள், காடுகள், மலைகள் மற்றும் பாரம்பரிய பாலம் வழியாக அழைத்துச் செல்கிறது. வழக்கத்திற்கு மாறான இடங்களை கண்டு ரசிப்பவர்களுக்கு, கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வரையிலான ரயில் பயணம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.
பயணம் முழுவதும், பயணிகள் பல பசுமையான காடுகள், சுத்தமான மற்றும் வேகமாக ஓடும் ஆறுகள் மற்றும் மலைகள் ஆகியவற்றைக் காண்பார்கள். அவர்கள் செல்லும் வழியில் ஒரு பாரம்பரிய பாலம் மற்றும் தடங்களுக்கு மேலேயும் கீழேயும் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து செல்கிறார்கள். இந்த ரயில் பயணம் சுற்றுலாப் பயணிகளை கேரளாவின் இயற்கை அழகை அனுபவிக்க அனுமதிக்கிறது.

பொள்ளாச்சி - பாலக்காடு
தமிழ்நாட்டின் அழகிய ரயில் பயணங்களில் குறுகிய ரயில் பயணமாக இருப்பது பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு வரை செல்லும் பயணம் தான். ஆம் இரண்டு இடங்களுக்கும் இடையே உள்ள 54 கிமீ தூரத்தை ரயில் 45 நிமிடம் முதல் 1 மணி நேரத்தில் கடந்திடலாம். பயண நேரம் குறைவாக இருந்தாலும், பயணத்தில் போது பல மலைகளையும், சமவெளிகளையும், அழகிய காட்சிகளையும் நீங்கள் கண்டு ரசிப்பீர்கள்.
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை என இரண்டிலும் பாலக்காடு மழைப்பொழிவைப் பெறுகிறது. அதனால் சீசன் நேரங்களில் இந்த ரயிலில் நீங்கள் ஒருமுறை பயணம் செய்து பார்த்தால், நிச்சயம் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுக்காமல் இருக்க மாட்டீர்கள்.

சென்னை - ராமேஸ்வரம்
சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில், இந்தியாவின் தென்கிழக்கு விளிம்பில் இருந்து இந்து புனித யாத்திரையின் நான்கு முக்கிய தலங்களில் ஒன்றான ராமநாதசுவாமி கோயிலின் தாயகமான பாம்பன் தீவுக்குச் செல்கிறது. இந்த ரயில் பயணம் தனித்தன்மை வாய்ந்தது. இயற்கை சுற்றுலாவை வழங்குவதைத் தவிர, இது பார்வையாளர்களை ஒரு புராண பயணத்திற்கும் அழைத்துச் செல்கிறது.
சென்னை மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் ரயில் இந்தியாவின் முதல் பாலம் என்று அழைக்கப்படும் பாம்பன் பாலத்தை கடக்கிறது. பாலத்தின் மீது செய்யும் பயணமானது 2.2 கிலோமீட்டர்கள் மட்டுமே என்ற போதிலும், இயற்கைக்காட்சி மற்றும் மதப் பின்னணி அதை சிறந்த வாழ்க்கை அனுபவங்களில் ஒன்றாக ஆக்குகிறது. பாலத்தின் மீது ரயில் கடக்கும் போது நமக்கு கிடைக்கும் உணர்வு அதிசயக்க வைக்கிறது.

கன்னியாகுமரி - திருவனந்தபுரம்
அரேபிய கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகியவை சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு செல்லும் இந்த ரயில் பயணம், நாட்டின் வளமான தோட்ட நடைமுறைகளின் ஸ்லைடுஷோ போன்றது. இந்த மூன்று மணி நேர ரயில் பயணத்தில், பயணிகள் பசுமையான தேயிலை, தென்னந்தோப்புகள் மற்றும் பலவிதமான மசாலாப் பொருட்களின் பண்ணைகள் ஆகியவற்றை கண்டு களிப்பார்கள். இந்தப் பாதை இயற்கை அழகை கண்டு ரசிக்க வாய்ப்பு அளிப்பதோடு பயணிகள் தெற்கின் உள்ளூர் வாழ்க்கையை நெருக்கமாக அனுபவிக்க அனுமதிக்கிறது.
நீங்கள் இந்த ரயில்களில் எப்போதாவது சென்றது உண்டா? ஆம் என்றால் உங்கள் அனுபவம் என்ன?



Click it and Unblock the Notifications







