நீண்ட நாட்களாக உங்கள் வீட்டு குட்டீஸ்கள் எங்காவது அழைத்துப் போகச் சொல்லி கொண்டே இருக்கிறார்களா? அவர்கள் மனம் கவர்ந்த படியும் இருக்கும், உங்களின் பணம் கரையாமலும் இருக்கும் - நீங்கள் இங்கு சென்றால். ஆம்! சென்னை வாசிகள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சென்னையின் பிரமாண்ட உணவு திருவிழா இப்போது துவங்கவுள்ளது. உங்களது மனம் கவர்ந்த உணவுகளை மலிவு விலையில் ருசித்திட இங்கே வாருங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடத்தப்படும் உணவுத் திருவிழா
சென்னை உணவுத் திருவிழா ஆண்டுதோறும் நகரத்தில் உள்ள அனைத்து உணவுப் பிரியர்களையும் மாநிலத்தின் தனித்துவமான உணவு வகைகளை ஆராய்வதற்காக நடத்தப்படுகிறது. மகத்தான உணவுப் பயணச் சந்தையின் ஒரு துறையாக உணவுத் திருவிழாக்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. சென்னை உணவுத் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச உணவு வகைகளைக் கொண்டாடுகின்றன. இதில் கலந்து கொள்ள சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் சென்னை தீவுத்திடலுக்கு வந்து சேரும்.

சிங்கார சென்னையில் சிறுதானியம் மற்றும் உணவுத் திருவிழா 2023
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் உணவுத் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் பெ.சதீஷ் குமார் கூறியது: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத் திடலில் 'சிங்கார சென்னையில் சிறுதானியம் மற்றும் உணவுத் திருவிழா' நடைபெற உள்ளது.

உள்ளூர் முதல் உலக உணவுகள் வரை ஒரே இடத்தில்
இந்த ஆண்டும் 300 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டு என்பதால், பாரம்பரிய சிறுதானிய உணவுகளுக்காக 30 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மண் மணம் கமழும் சைவ, அசைவ உணவு வகைகள், தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவுகள், தாய்லாந்து, மலேசிய, சீன உணவு வகைகளும் இங்கு கிடைக்கும்.

வகை வகையான உணவுகள் மலிவு விலையில்
சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், நுழைவுக் கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.10 வசூலிக்கப்படும். அது மட்டுமில்லாமல் இங்கு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இங்கு விற்கப்படும் உணவுகளின் விலை, வழக்கமாக வெளியே நிறுவனங்களில் விற்கும் விலையை விட மலிவாக இருக்குமாம். மீன் வளத்துறை சார்பில் மீன் உணவுகளை, ஏழை எளிய மக்களும் வாங்கி உண்ணும் அளவுக்கு மலிவு விலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் குடும்பத்துடன் சென்றிடலமா?
உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னையில் வரும் செப்டம்பர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழா ஒவ்வொரு நாளும் காலை 10 முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். அண்ணா சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ள தீவு திடலை மாநகர பேருந்துகள், டாக்சி அல்லது இரு சக்கர வாகனங்கள் மூலம் எளிதில் அடையலாம். நீங்களும் உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இங்கே வந்து, இந்த வார இறுதியை மகிழ்ச்சியாக செலவிடுங்கள்!



Click it and Unblock the Notifications





