கடந்த சில மாதங்களாக திருமலை திருப்பதியில் சிறுத்தைகள் நடமாடுவதையும், ஒரு மாதத்திற்கு முன்னர் 6 வயது சிறுவன் சிறுத்தை தாக்குதலுக்கு உட்பட்டதையும் நாம் அறிவோம். ஆனால் அதைவிட கொடுமையானது, கடந்த வாரம் அலிபிரி நடைபாதையில் நடந்து சென்ற 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. என்ன இருக்கிறது திருமலையில், ஏன் இவ்வளவு சிறுத்தைகள், இதை தடுப்பது எப்படி, பாதுகாப்பாக திருமலைக்கு சென்று வருவது எப்படி என்று பார்ப்போம்!
நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்யும் மக்கள்
திருமலைக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் மனமுருகி வேண்டுவதை அவ்வண்ணமே அருளும் ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பக்தர்கள் நடந்து சென்று பெருமாளை தரிசிக்கின்றனர். படி முழுக்க மஞ்சள், குங்குமம் வைத்துக் கொண்டு, கற்பூரம் ஏற்றிக் கொண்டு, கோவிந்தா கோஷம் போட்டுக் கொண்டு பக்தர்கள் செல்கின்றனர். நடந்து செல்வது பக்தர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தியை கொடுப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இரண்டு வழிகளில் திருமலைக்கு நடைபாதை
ஸ்ரீவாரி மெட்டு, அலிப்பிரி மெட்டு ஆகிய இரண்டு வழிகளில் பக்தர்கள் திருமலையை அடையலாம். அலிப்பிரி மெட்டு நடைபாதை திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அலிப்பிரி மெட்டு நடைபாதையில் தான் பக்தர்கள் நடந்து சென்று காளி கோபுரத்தில் டிக்கெட் வாங்கி சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். மற்றொரு வழி ஸ்ரீவாரி மெட்டு, இது திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தூரத்தில அமைந்துள்ளது.
தூரம் குறைவான ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை
திருமலைக்கும் திருப்பதிக்கும் இடையேயான தூரம் அலிப்பிரி மெட்டுவில் 9 கிமீ ஆகவும், அதுவே ஸ்ரீவாரி மெட்டு வழியாக 3 கிமீ தூரம் தான். ஒருவர் அலிப்பிரி மெட்டு வழியாக திருமலையை அடைய 3 - 4 மணி நேரம் வரை ஆகிறது, ஸ்ரீவாரி மெட்டு வழியாக நடந்தால் 1 மணி நேரத்தில் திருமலையை அடைந்திடலாம். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக அந்த வெங்கடேச பெருமானே நடந்து சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
காட்டு விலங்குகள் அடங்கிய நடைபாதை
திருமலையில் சிறுத்தை, புலிகள், கழுதை புலி, காட்டு கரடி, குரங்குகள், மான்கள், புலி மற்றும் பல காட்டு விலங்குகளும், அரிய வகை பறவைகளும் இருக்கின்றன. வன விலங்குகள் வாழும் காடுகளுக்குள் சாலையும் நடைபாதையும் அமைக்கப்பட்டாலும் கூட, அவ்வப்போது வனவிலங்குகளை பக்தர்கள் காண்கின்றனர். குறிப்பாக சிறுத்தை நடமாட்டதால் பல கொடிய விபத்துகள் அரங்கேறுகின்றன.

TTDயின் நடவடிக்கைகள்
1. வனவிலங்குகள் தாக்கினால் தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் மரக் குச்சியும் வழங்கப்படும் என்று TTD தெரிவித்துள்ளது. நடைபாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு பிரம்பு குச்சி இப்போது வழங்கப்படுகிறது.
2. ஏற்கனவே 30 TTD பாதுகாப்பு மற்றும் 10 வனக் காவலர்கள் நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்போது அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று TTD கூறியுள்ளது.
3. பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் வனத்துறையினர் எப்பொழுதும் 24x7 என்ற அடிப்படையில் இரண்டு கூண்டுகளை தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.
4. வழித்தடத்தில் காலி கோபுரம் முதல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் வரை கிட்டத்தட்ட 500 சிசிடிவி கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக TTD EO தெரிவித்தார்.
5. நடைபாதையில் குழந்தைகளுடன் மலையேற்றம் செல்லும் பெற்றோர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சரியான முடிவு இதுதான்
கோயில் ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால், பாதசாரிகள் செல்லும் பகுதிக்கு வேலி அமைப்பதற்கான முன்மொழிவு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக TTD அதிகாரி தெரிவித்தார். அதன்படி கூடிய விரைவில் நடைபாதை முழுவதும் வேலிகள் அமைக்கப்படும் என்று தெரிகிறது.



Click it and Unblock the Notifications





