அடிக்கிற வெயிலுக்கு இதமா ஜில்லுன்னு அருவியிலையும், குளத்திலயும் ஒரு குளியல் போட்டுட்டு வந்தா நல்லா இருக்கும் இல்லையா! வெறும் நீர்வீழ்ச்சி மட்டும் இல்ல, பயணம் பண்ணுற வழி கூட செமையா இருக்குமாம்! எங்க பார்த்தாலும் பச்சை பசேல் மரங்கள், இனிமையான காற்று, இதமான வானிலைன்னு நம்மை மனசை கொள்ளயடிக்குற மாதிரியான ஒரு ஸ்பாட் தான் இந்த கும்பக்கரை அருவி! தேனியில் இருந்து 28 கிமீ, பெரியகுளத்தில் இருந்து 8 கிமீ தூரத்தில இருக்கிற இந்த இடத்தில சலசலன்னு கொட்டுற தண்ணி, வழுக்கும் பாறைகள், நீச்சலடிக்க குளங்கள்ன்னு எல்லாமே பிளஸ் பாயின்ட்ஸ் தான்! இந்த இடத்துக்கு நீங்க இப்போ போனாலும் நீர்வரத்து அதிகமாக இருக்கும்! இங்க எப்படி போறதுன்னு இப்போ பார்க்கலாமா?

அடிக்கிற வெயிலுக்கு இதமா ஆட்டம் போட சூப்பர் ஸ்பாட்
கொடைக்கானலில் இருந்து 70 கிமீ, தேனியில் இருந்து 28 கிமீ, பெரியகுளத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய கும்பக்கரை நீர்வீழ்ச்சி இயற்கை எழில் கொஞ்சும், அமைதியான மற்றும் இனிமையான அருவியாகும். கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை நீர்வீழ்ச்சி, அதே பகுதியில் உள்ள பல பிரபலமான அருவிகளில் ஒன்றாகும். இந்த நீர்வீழ்ச்சியின் நீர் கொடைக்கானல் மலையில் உருவாகி இரண்டு இயற்கை நிலைகளில் பாறைகளின் கீழே பாய்கிறது. இந்த அழகான நீர்வீழ்ச்சியில் எப்போதுமே நீர்வரத்து இருந்துக் கொண்டே இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இனிமையான பயணத்துடன் உங்களை வரவேற்கும் அருவி
இந்த இடத்திற்கு நீங்கள் பெரியகுளம், தேனி, கொடைக்கானல் பகுதிகளிலிருந்து சுலபமாக வரலாம். செல்லுகிற வழி நெடுக மரங்களும், இதமான வானிலையும், வீசுகிற காற்றும் நமக்கு நிச்சயமாக ஒரு இன்பமான உணர்வை கொடுக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பார்க்கிங்கிற்கு செல்லுகிற வழி வரைக்கும் நீங்கள் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே செல்லலாம். பார்க்கிங்கில் உங்கள் வாகனங்களை பார்க் செய்துவிட்டு 1 கிமீ தூரத்திற்கு நடந்து சென்றால் அருவியின் அடிவாரத்தை அடைந்து விடலாம். ட்ரெக்கிங் மாதிரி நடந்து செல்வது மிகவும் நன்றாக இருக்கும். நடப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால் பேட்டரி வண்டியில் அடிவாரத்தை அடையலாம்.

மனதிற்கும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் குளியல்
நீர்வீழ்ச்சியின் படிக-தெளிவான நீர் இயற்கை தாதுக்கள் மற்றும் மூலிகைகளால் செறிவூட்டப்பட்டுள்ளது, இது நம்பமுடியாத சிகிச்சை நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த மூலிகை தண்ணீரில் குளிப்பது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஜில்லென்ற தண்ணீரை விட இங்கு சிறப்பாக இருப்பது இயற்கையாகவே உருவாகியிருக்கும் பள்ளங்களும், வழுக்கும் வழிகளும் தான். வழுக்கிக்கொண்டே போய் அந்த குளத்தில் விழுந்து நீங்கள் குளித்து மகிழலாம். பெண்கள் உடை மாற்றிக் கொள்ள வசதிகளும் இங்கு உண்டு.

நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு முன் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை
1. தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது.
2. நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் சோப்பு அல்லது ஷாம்பு பயன்படுத்தக்கூடாது
3. வயது முதிர்ந்த ஆண்களுக்கு குளிக்கும் போது 3/4 அல்லது குறைந்த கால்சட்டை அணியுமாறு அவர்கள் பரிந்துரைத்தனர்.
4. எல்லா சுற்றுலா தலங்களிலும் இருப்பது போல், புகைபிடிக்க முடியாது.
5. குளித்த பின் துணி துவைப்பதும் பரிந்துரைக்கப்படவில்லை.

நீர்வீழ்ச்சிக்கு செல்ல சிறந்த நேரம்
பருவமழை மற்றும் குளிர்காலத்தில், உங்களைச் சுற்றியுள்ள குளிர்ச்சியை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருப்பீர்கள், ஆகையால் கோடைக்காலத்தில் இங்கு செல்வதே இதன் அழகை நீங்கள் முழுதாக ரசிப்பதற்கு ஏற்றதாக இருக்கும். எனவே மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை நாட்களில் நீங்கள் இங்கு சென்று வாருங்கள்.
பார்க்கிங் கட்டணம்
பைக் 10
கார் 50
வேன் 75
பேருந்து 100
நுழைவுக்கட்டணம்
பெரியவர்களுக்கு ரூ.30
குழந்தைகளுக்கு ரூ.20
பேட்டரி வண்டி ஒரு நபருக்கு ரூ. 20
திறந்திருக்கும் நேரம்
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீங்கள் இங்கு செல்லலாம்.
இந்த இடத்தில் இப்போது கூட நீர்வரத்து நன்றாக இருக்கிறது, நீங்கள் நாளையே கூட இந்த இடத்திற்கு சென்று வரலாம்!



Click it and Unblock the Notifications





