கோடைக்காலம் என்றால் வெயில் ஒரு பக்கம் நமக்கு கசப்பாக இருந்தாலும், கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய சில இனிப்பான விஷயங்கள் நம்மை புத்துணர்ச்சி அடைய வைக்கின்றன. ஆம், பலாப்பழம், மாம்பழம், நுங்கு, கீரனிப்பழம், பதநீர், வெள்ளரிப்பழம் ஆகியவற்றிற்காகவே நாம் கோடைக்காலத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். பலாப்பழம் என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைவர்க்கும் பண்ருட்டி தான் நியாபகத்திற்கு வரும், இந்த பலாப்பழத்திற்கு என பண்ருட்டியில் வருடா வருடம் மிகவும் 'பிரபலமான பலாப்பழ திருவிழா' நடைபெறுகிறது!
அனைவருக்கும் பிடித்த பலாப்பழம்
ஏப்ரல், மே மாதம் வந்தாலே சாலை ஓரமாய் விற்கப்படும் பலா சுலைகளின் வாசனை நம் மூக்கை துளைத்து விடுகின்றன. அந்த வாசனையை மீறி அவற்றை வாங்காமல் வருவது சற்று கஷ்டம் தான். தேடி தேடி பார்த்து, ஒரு நல்ல பலாப்பழத்தை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் அறுத்து நம் அக்கம் பக்கத்தினருக்கும் கொடுத்து விட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக உண்ணாமல் நம் கோடை காலம் முடிவடையாது.

இந்திய அளவில் பேமஸ் - பண்ருட்டி பலாப்பழம்
பலாப்பழம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்தாலும் கூட பண்ருட்டி பலாப்பழம் தான் இந்திய அளவில் பேமஸ். பண்ருட்டியில் வித விதமான பலாப்பழம் கிடைப்பது தெரியும், ஆனால் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் பலாப்பழங்களை கொண்டு வந்து சந்தையில் வைத்து ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக பலாப்பழ திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த திருவிழாவில் நாம் 50க்கும் மேற்பட்ட பலாப்பழ வகைகளை காணலாம். பண்ருட்டியில் பிறந்து வளர்ந்து பலாப்பழம் சாப்பிட்டவர்களுக்கும் கூட பலாப்பழத்தில் இத்தனை வகைகள் இருக்கின்றன என்பது தெரியாது.
பண்ருட்டியில் நடைபெறும் பலாப்பழ திருவிழா
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை கிராமத்தில் உள்ள பலா தோப்பில் மாபெரும் பலா திருவிழா நடைபெற்றது. விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் '100 வகை பலா, 100 விதமான சுவை' என்ற தலைப்பில், பலாவை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு விழாவாக நடத்தப்பட்டது. இந்த பலா திருவிழாவில் பண்ருட்டி மற்றும் கோவை, ராணிபேட்டை மற்றும் வெளிநாட்டு பலா என 100 வகை பலாவை விவசாயிகள் கண்காட்சியக மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்.
பலவகையான வித்தியாசமான பலாப்பழங்கள்
மரம் சார்ந்த விவசாயம் மூலம், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கி, சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற இரட்டை நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற பலாப்பழ திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பலாப்பழ திருவிழாவில் அனைத்து பலாப்பழங்களும் இரண்டாக வெட்டி வைக்கப்பட்டுள்ளன. பார்க்கும் போதே பலாச்சுளையின் நிறம், அளவு, வாசனை நமக்கு அதனிடையே உள்ள வித்தியாசங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

பலாப்பழ திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பழங்களின் வகைகள்
1. ஹனி கோல்ட்
2. செந்தூரா
3. தேன் பலா
4. பேச்சிப்பாறை
5. ராஜ ருத்ராட்சா
6. சூர்யா தாய்லாந்து ஆரஞ்ச்
7. தேன் மஞ்சள்
8. ரூபி ஆரஞ்ச்
9. துப்ருகர் பிங்க்
10. வேர் பலா
11. மிருது பலா
12. பபுள்கம்
13. அசோக் மஞ்சள்
14. ஆயிரம் காய்ச்சி
15. பண்ருட்டி பலா
16. ஹனி டியூ
17. தங்கப் பலா
18. லால்பாக் மதுரா
19. பாலூர் பலா
20. ஒடுக்கு பலா
21. சங்கரா
22. சித்தூர் பலா
மேற்கூறியவை உட்பட, பல வகையான சுவையான, இனிப்பான பலாப்பழ வகைகள் அங்கே இருந்தன.
போட்டி போட்டு பலாப்பழம் வாங்கி சென்ற மக்கள்
இதனை சென்னை, சேலம், கோவை, ஈரோடு, தேனி, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் மக்கள் பலர் கலந்துகொண்டு ஒரே இடத்தில் வைக்கப்பட்ட பலா கண்காட்சியை பார்வையிட்டு ஆவலுடன் வாங்கி சென்றனர். மேலும் இதில், ஏராளமான பெண்கள், பலாப்பழத்தை கொண்டு சிப்ஸ், ஜூஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை சமைத்து அசத்தினர். இந்த திருவிழாவுக்கு நீங்கள் சென்றுள்ளீர்களா?



Click it and Unblock the Notifications





