நீங்கள் தமிழகத்திற்கு உள்ளேயே அல்லது வெளி மாநிலங்களுக்கோ அடிக்கடி பயணம் செய்பவரா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும். டிக்கெட் முன்பதிவு செய்து ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50 சதவீதச் சலுகை வழங்கப்படும் என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. உங்களுடைய 6 ஆவது பயணத்தில் இருந்து நீங்கள் டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி பெறுவீர்கள். இதை எப்படி உபயோகிப்பது குறித்த தகவல்கள் கீழே!

6 ஆவது பயணத்தில் 50% தள்ளுபடி
SETC அல்லது ஸ்டேட் எக்ஸ்பிரஸ் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் 5 முறை பயணம் செய்யும் பயணிகளின் அடுத்த பயணத்திற்கான டிக்கெட்டுகளில் 50% தள்ளுபடி கிடைக்கும் என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் கடந்து புதன்கிழமை அன்று தெரிவித்தார். மேலும் இது அனைத்து தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். நீங்கள் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணித்த பிறகு, 6 ஆவது பயணத்தில் இருந்து இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்தால் மட்டுமே இந்த சலுகையைப் பெறலாம்.
பெண் பயணிகளுக்கு முக்கியத்துவம்
சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர், SETC பேருந்துகளில் தனியாகப் பயணம் செய்யத் தயங்கும் பெண் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். பெண் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து SETC பேருந்துகளிலும் பெண்களுக்கு என நான்கு இருக்கைகள் தனியாக ஒதுக்கப்படும் என்று கூறினார். பயணம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை பெண்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கிடைக்கும் என்றும் அறிவித்தார்.

சுயஉதவி குழுக்களுக்கு முன்னுரிமை
பஸ் டிப்போக்களில் கேன்டீன்களை நடத்துவதில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். இளைஞர்களின் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில், மாதாந்திர ரூபாய் 6,000 செலுத்தி பேருந்துகளில் பார்சல் சேவைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.
பஸ் டிப்போக்கள் புதுப்பிப்பு
சென்னையில் ஆவடி, பாடியநல்லூர் போன்ற இடங்களில் உள்ள எம்டிசி பஸ் டிப்போக்கள் மற்றும் டெர்மினஸ்கள் கான்கிரீட் தளம், உயர்மாஸ்ட் விளக்கு, பயணிகளுக்கான இருக்கை வசதியுடன், 10.76 கோடி ரூபாய், 5.43 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். டிப்போக்களில் பணியாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகளையும் போக்குவரத்து துறை அமைக்கும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு சன்மானம்
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி செய்து, விபத்து நடந்த நேரத்தில் நேரத்தில் மருத்துவமனைக்கு விரைந்து செல்ல உதவும் நல்ல உள்ளங்களுக்கு மத்திய அரசின் ரூ.5,000 மானியத்தோடு தமிழக அரசு வழங்கும் ரூ.10,000 வெகுமதியையும் சேர்த்து பெறலாம். அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களைப் போல இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர்கள் ஓட்டுவதற்குத் தேவையான பேட்ஜைப் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

ஆன்லைன் சேவை தொடக்கம்
போக்குவரத்து தொடர்பான சேவைகளை தடையின்றி பெற, பொதுமக்கள் 42 ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு தொடர்பான சேவைகளை ஆன்லைனில் ஆதாரைப் பயன்படுத்திப் பெறலாம். ரெட்ஹில்ஸ், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர் உள்ளிட்ட 18 ஆர்டிஓக்களில் அரசு-தனியார் கூட்டு முயற்சியில் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.



Click it and Unblock the Notifications





