உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் 1,000 டன் தங்கப் புதையில் இருப்பதாக ஷோபன் சர்கார் என்ற சாமியார் சொன்னாலும் சொன்னார் உத்தரப்பிரதேசம் முழுக்க தங்கவேட்டை நடந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில் பதேஹ்பூரின் கங்கா காட் அருகே உள்ள பழமையான சிவன் கோவில் பகுதி உட்பட சுமார் 12 இடங்களில் மண் தோண்டப்பட்டதாகவும், சில இடங்களில் மக்கள் தங்கத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் எக்கச்சக்கமான வரலாற்று நினைவுச் சின்னங்களும், அரண்மனைகளும் இருக்கின்ற காரணத்தால் சாமியார் கனவு பலிக்கும் என்றோ, மக்களின் தங்கக் கனவு நிறைவேறும் என்றோ சொல்லமுடியுமா?
வாருங்கள் அப்படியே ஒரு ரவுண்ட போயி உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய வரலாற்று சின்னங்களை பார்வையிடுவோம்!

அனூப் தலாவ், ஃபதேபூர் சிக்ரி
சூரிய ஒளியில் மின்னும் வண்ணம் இத்தொட்டியின் உள்ளே தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் அக்பர் காலத்தில் போடப்பட்டிருக்கிறது. பின்னர் அக்பரின் மகன் ஜஹாங்கீர் அந்த நாணயங்களை தர்மமாக கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தனது குறிப்பேடுகளில் ஒரு கோடியே மூன்று லட்சம் காசுகளை அதிலிருந்து எடுத்து தர்மமாக கொடுத்ததாக அவரே குறிப்பிட்டிருக்கிறார். அக்பரின் பிரத்யேக மாளிகையின் முன்பு அமைந்துள்ள இந்த அனூப் தலாவ் அழகிய மேடைகளுடன், சிறப்பான கோணங்களுடன் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. பழங்காலங்களில் எந்த நேரத்திலும் சுத்தமான நீர் இருக்கும் வண்ணம் பிரதான நீர்நிலையுடன் இணைக்கப்பட்டிருந்தது.

தமேக் ஸ்தூபி, சாரநாத்
இந்த ஸ்தூபிகளில் புத்தருடைய சேகரிக்கப்பட்ட எலும்புகள் வைக்கப்பட்டுள்ளன. என்னடா இது புத்தரின் எலும்புகள் இருக்கும் இந்த இடத்திலெல்லாமா தங்கம் இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? யார் கண்டா யார் கனவுல எது வரும்ன்னு?!...சரி விஷயத்துக்கு வருவோம்..இந்த மாபெரும் ஸ்தூபி வாரணாசியிலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் சாரநாத்தில் அமைந்துள்ளது. மேலும் மான் பூங்காவில், தமேக் ஸ்தூபி உள்ள இடம் தான் புத்தர் ஞானம் பெற்ற பிறகு தனது முதல் போதனைகளை மக்களுக்கு வெளியிட்ட இடமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேய்சர்பாக் அரண்மனை, லக்னோ
உலகின் எட்டாவது அதிசயமாக திகழவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆவாத் நவாப் வாஜித் அலி ஷா என்பவர் இந்த மாளிகையை நிர்மாணிக்க துவங்கினார். பின்பு கல்கத்தாவிற்கு நாடுகடத்தப்பட்ட நவாப் வாஜித் அலி ஷாவின் ராணியுடன் மற்ற கலகக்கார நவாப்கள் இங்கு ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த அரண்மனையின் பெரும்பகுதியை அழித்து விட்டனர். 12 கதவுகளுடன் வெள்ளைக்கல்லால் கட்டப்பட்டிருக்கும் ஒரு கம்பீர மாளிகை ஒன்றும் இந்த அரண்மனை வளாகத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது.

புலந்த் தர்வாஜா, ஃபதேபூர் சிக்ரி
பிரம்மாண்ட வாயில் என்றழைக்கப்பட்ட புலந்த் தர்வாஜா 17-ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அக்பரின் குஜராத் வெற்றியை நினைவு கொள்ளும் விதமாக கட்டப்பட்டது. இந்த 15 மாடி உயர வாயில் ஃபதேபூர் சிக்ரியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் பாரசீக கல்வெட்டு 1601-ல் அக்பரின் குஜராத் வெற்றியைக் குறிக்கிறது. மேலும் பாரசீகத்தில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு பலவகையான கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் ஏற்றுக்கொன்ட அக்பரின் பரந்த மனப்பான்மையை காண்பிப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சத்தர் மன்ஸில், லக்னோ
சத்தர் மன்ஸில் அல்லது குடை அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த மாளிகையின் உச்சியில் முலாம் பூசப்பட்டுள்ள ஒரு குடையமைப்பு காணப்படுவதால் இந்த பெயர் வந்துள்ளது. இந்த அரண்மனை 1857 சிப்பாய் புரட்சியின் போது தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்த இடமாக இருந்திருக்கிறது.

பாஞ்ச் மகால், ஃபதேபூர் சிக்ரி
அழகிய தனித்துவம் வாய்ந்த நீர்த்தொட்டியான அனூப் தலாவிற்கு அருகில் ஐந்து மாடிகளுடன் பரந்து விரிந்த பாஞ்ச் மகால் ஓய்வு அரண்மனையாக அக்பரால் கட்டப்பட்டது. பொழுதுபோக்கவும் ,ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் அக்பர் இந்த அரண்மனையை பயன்படுத்தினார். மேலும் அக்பரின் ராணிகளும், இளவரசிகளும் வலம்வரும் வண்ணம் பிரத்யேகமாக இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications






