இந்த வார இறுதியில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ண ஒரு சூப்பர் இடத்தை நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்! பருவமழை சென்னையின் அனைத்து ஏரி மற்றும் குளங்களை நிரப்பியதால் ஆங்காகே செக் டேம்களில் இருந்து உபரி நீர் வழிந்து ஓடுவது பல அழகிய ஓடைகளை உருவாக்கியுள்ளது. சென்னையிலிருந்து வெறும் 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த கொண்டாங்கி ஏரியில் நீங்கள் குளிக்கலாம், குழந்தைகள் விளையாடலாம். இந்த ஏரிக்கு செல்வது ஏதோ நீங்கள் ஒரு கிராமத்தில் ஆனந்தாமாக இருந்ததை போன்ற ஒரு உணர்வை உங்களுக்கு தரும்!
கூட்டம் கூட்டமாக வருகை தரும் குடும்பங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே அமைந்திருக்கும் கொண்டாங்கி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீர் வெளியேறி கொண்டிருப்பதால் அந்த இடமே அழகிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. சென்னை வாசிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் மக்களும் கூட்டம் கூட்டமாக இந்த அழகிய இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர். குடும்பம் குடும்பமாக கொண்டாங்கி ஏரிக்கு வருகை தரும் மக்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குளித்து, நீச்சலடித்து விளையாடி மகிழலாம்
சென்னையை வெளுத்து வாங்கிய கன மழையால் ஏரி முழு கொள்ளளவை இப்பொழுது அடைந்துள்ளது. முழுதாக நிரம்பி வழியும் ஏரியை காண மக்கள் திரள் திராளாக வருகை தருகின்றனர். ஏரியும் கூட அதிகம் ஆழம் இல்லாதது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஆழம் 50 அடி தான் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். நீங்கள் படிக்கட்டில் அமர்ந்து குளிக்கலாம், நீச்சல் தெரிந்தால் கண்டிப்பாக நீச்சல் அடிக்கலாம். நீர் வருவதற்கு ஒரு சிறிய இடைவெளியின் கீழ் நீங்களே அமர்ந்து குளிக்கலாம். நிச்சயம் அது ஒரு அலாதியான உணர்வை உங்களுக்கு வழங்கும்.
பிக்னிக் செல்ல ஏற்ற இடம்
இங்கே வந்தால் குளிக்க மட்டும் தான் முடியுமா என்று எண்ண வேண்டாம். ஏரியை சுற்றி அழகான வயல்களும், மரங்களும் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது. நீங்கள் அமர்வதற்கு போர்வை அல்லது பாய், சாப்பிடுவதற்கு சாப்பாடு கொண்டு வந்து இங்கே பொழுதையும் கழிக்கலாம். நிச்சயம் நீங்கள் ஏதோ ஒரு அழகிய கிராமத்திற்கு சென்று வந்தது போல ஒரு வித்தியாச உணர்வை இந்த ட்ரிப் உங்களுக்கு வழங்கும்.

கண்டிப்பா அனைவரும் செல்ல வேண்டிய இடம்
இந்த ஏரி மிகவும் பெரிய ஏரி என்பதால், நீர் வரத்து கட்டாயம் 2 மாதங்களுக்கு தொடர்ந்து இருக்கும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். நீங்கள் பெண்கள், குழந்தைகளுடன் வருகிறீர்கள் என்றால் வார இறுதியில் சென்று வாருங்கள். வார இறுதிகளில் நீங்கள் குடும்பங்களின் கூட்டத்தை மட்டுமே காணலாம். ஆனால் எத்தனை பேர் வந்தாலும் அனைவரும் அமர்ந்து குளிக்கும் அளவுக்கு நீர் வரத்து நம்மை மகிழ்விக்கிறது. நீங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வருகிறீர்கள் என்றால் வார நாட்களில் சென்று வாருங்கள். தனியா, ஜாலியா இருக்க வார நாட்கள் தான் பெஸ்ட்.

கொண்டாங்கி ஏரிக்கு எப்படி செல்வது?
இந்த அழகிய கொண்டாங்கி ஏரி கூடுவாஞ்சேரியில் இருந்து 16 கிமீ தொலைவிலும், சிங்கபெருமாள் கோவிலில் இருந்து 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. நீங்கள் கூகுல் மேப்ஸில் 'கொண்டாங்கி ஏரி' என்று டைப் செய்து, அவற்றை பின் தொடர்ந்து இந்த அழகிய இடத்தை அடையலாம். இந்த இடத்திற்கு இரு சக்கர வாகனங்கள் அல்லது காரில் வருவது தான் சரியான தேர்வாக இருக்கும்.
என்ன? இந்த வார இறுதியில் இந்த ஏரிக்கு சென்று ஆட்டம் போடலாமா?



Click it and Unblock the Notifications





