கலைகளின் நாயகியாக விளங்கக்கூடிய சரஸ்வதி தேவியை நாம் உள்ளன்போடு வணங்கும் பொழுது குழந்தைகளுக்கு கலைகள் வளரும், அறிவில் அவர்கள் முதிர்ச்சி அடைவார்கள், பெரியவர்கள் ஞானத்தை அடைவார்கள், ஏன் பரமஞானிக்கும் கூட சரஸ்வதியின் கடாட்சம் பெருகும். ஞானரானியான சரஸ்வதி தேவியை நாம் தினந்தோறும் வணங்கினாலும் கூட இந்த நவராத்திரி வேலையில் பிரார்த்தனை செய்வது மிகவும் விசேஷம்!
அதிலும் கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு சென்று வணங்குவது என்பது நம் வாழ்வில் பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்!
கூத்தனூர் சரஸ்வதி கோவில்
தமிழகத்தில் சரஸ்வதி தேவிக்காக அர்பணிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த முதல் கோவிலான கூத்தனூர் சரஸ்வதி கோவில், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் அமைந்துள்ளது. புராண காலத்தில் அம்பாள்புரி என்றும், பூந்தோட்டம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர், பிற்காலத்தில் இந்த ஊரை இரண்டாம் ராஜராஜ சோழன் தன் அவைப் புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்று விளங்குகிறது.
கருவறையில், சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடை உடுத்தியவளாக, வெண் தாமரை மலரில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வல மேல்கரத்தில் அட்சமாலை ஏந்தி, வல கீழ்க்கரத்தில் சின்முத்திரை காட்டி, இடது மேல்கரத்தில் அமிர்த கலசம் ஏந்தி, இடது கீழ்க்கரத்தில் புத்தகமும் கொண்டு எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
பல அதிசயங்கள் நிகழ்ந்த ஸ்தலம்
இரண்டாம் இராஜராஜ சோழன் அவையில் புகழ்பெற்று விலகிய ஒட்டக்கூத்தர் தான் கவி பாடும் முன் கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிப்பது வழக்கம். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்று புராணக்கதைகள் கூறுகின்றன.
வேண்டும் வரம் கிட்ட புருஷோத்தம பாரதி அம்பிகையை நினைத்து விடாது தவமிருந்து பூசித்தமையால், அவருக்கு விஜயதசமியன்று அம்பிகையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அன்றி லிருந்து தான் விஜயதசமி கொண்டடாப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்
சரஸ்வதி கோயிலில் வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். சாரதா நவராத்திரி விழா 12 நாள்களும், பின்னர் பத்து நாள்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன. விழா நாள்களில் சரஸ்வதி தேவி சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் என்று பல்வேறு அலங்காரங்களில் காட்சி தருவதை தரிசிக்கக் கண் கோடி வேண்டும்.
சரஸ்வதி பூஜையன்று மட்டும் நியமத்துடன் விரதமிருந்து, பக்தர்களே அம்பிகையின் திருவடிகளில் மலர் கொண்டு அர்ச்சிக்கலாம் என்பது இக்கோவிலில் பின்பற்றப்படும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
யாரெல்லாம் இக்கோவிலுக்கு செல்ல வேண்டும்?
கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்க, அரசாங்க வேலை கிடைக்க, தொழிலில் மேன்மையடைய, வாழ்க்கையில் பிரகாசிக்க, முன்னுக்கு வரவேண்டும் என நினைப்போர் அனைவரும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் அன்னையின் ஆசிபெற்று நினைத்தபடி வாழ்வார்கள். மிக முக்கியமாக ஞானத்தை அடைய அனைவரும் இக்கோவிலுக்கு சென்று வர வேண்டும்.
விசேஷ நாள்களிலும், சரஸ்வதிக்கு உரிய புதன்கிழமைகளிலும் அம்பிகைக்குத் தேனும் பாலும் அபிஷேகம் செய்தால் கல்வியில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதீகம். அதோடு முதன்முதல் பள்ளி செல்லும் குழந்தைகள்,
தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகள் இங்கு வந்து, பேனா, புக், ஹால் டிக்கெட் ஆகியவற்றை வைத்து வழிபட்டு செல்வது மிகவும் வழக்கமாகும்.
அதே போல வித்யாரம்பம் எனப்படும் முதல் முறை மழலைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் முறையை செய்ய சரஸ்வதி பூஜை நேரத்தில் இந்த கோவிலில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஞான தெய்வத்தின் வாயிலில் இருந்து கல்வியை தொடங்குவது மிகவும் விசேஷம் தானே! ஞான தெய்வத்தின் வாயிலில் இருந்து கல்வியை தொடங்குவது மிகவும் விசேஷம் தானே!
கூத்தனூரை எப்படி அடைவது?
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேரளம் மற்றும் திருமீயச்சூர் திருத்தலத்துக்கு அருகில் உள்ளது இந்த கூத்தனூர். மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் திருவாரூரில் இருந்தும் இக்கோயிலுக்கு செல்லலாம். இக்கோயிலுக்கு அருகில் பல தேவார பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. நீங்கள் அவற்றையும் ஒரு சேர தரிசிக்கலாம்
நமக்கு உயர்கல்வி, நல் ஞானம் ஆகியவற்றை அருள்புரிய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு கூத்தனூரில் கோயில் கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியைத் தரிசித்து வழிபட்டு அருள் பெறுவோம், வாருங்கள்!