அதிசயங்களால் மட்டுமே நிரம்பியிருக்கும் அற்புத சிவன் கோவில் இது, கடற்கரையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அரபிக்கடலுக்கு உள்ளே அமைந்திருக்கும் இந்த கோவில் குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற கோவிலாகும். முற்றிலும் கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்கு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது!

கடலில் புதைந்துள்ள அதிசய சிவன் கோவில்
மலைகள், குகைகள், கடலோரம், நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் கட்டப்பட்ட வித்தியாசமான கோவில்கள் பற்றி நம் கேள்வி பட்டிருக்கிறோம்! ஆனால் இந்த நிஷ்கலங்க் மகாதேவ் கோயில் தனித்துவமானது. ஏனென்றால் அது கடலுக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது!! இக்கோயில் கடலில் புதைந்துள்ளது.
குஜராத்தின் தனித்துவமான அடையாளம்
நிஷ்கலங்க் மகாதேவ் கோயில் என்பது குஜராத்தின் பாவ்நகர் அருகே கோலியாக்கில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். கோலியாக் கடற்கரையில் அமைந்துள்ள இது, இந்தியாவில் உள்ள மிக அரிதான கடல் கோயில்களில் ஒன்றாகும், உங்கள் குஜராத் பயணத்தின் போது நீங்கள் கட்டாயம் பார்வையிட வேண்டிய சிவன் ஆலயம் இதுவாகும்.
அதிக அலைகளின் போது கடலில் மூழ்கும் ஆலயம்
இந்த ஆலயம் கடலில் அதிக அலைகளின் போது நீரில் மூழ்கி, தாழ்வான காலங்களில் தன்னை கம்பீரமாக வெளிப்படுத்தி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறது. அதிக அலையின் போது, இறைவன் சிலை நீரில் மூழ்கி, கோவிலின் கொடி மற்றும் தூண் மட்டுமே தெரியும். அதிக அலைகளைத் தாங்கும் வகையில் சிறப்பு கவனத்துடன் கட்டப்பட்ட இந்தக் கோயில், நவீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உண்மையிலேயே தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது.

பாவங்களை போக்க பிறகு பாண்டவர்களால் கட்டப்பட்ட கோயில்
நிஷ்கலங்க் சிவன் கோவில் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு பாண்டவர்களால் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது. அனைத்து கௌரவர்களையும் கொன்ற பிறகு, பாண்டவர்கள் தங்கள் பாவங்களை போக்குவதற்காக பல சிவாலயங்களை எழுப்பி வந்தனர். கடைசியாக இந்த கோயிலை எழுப்பிய பின்னரே அவர்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கியதாக புராணங்கள் கூறுகிறது. இந்த இடத்திற்கு வந்து அங்கே இருக்கும் சிவ லிங்கங்களுக்கு பால் அபிஷேகம் செய்தால் பூர்வ ஜென்ம பாவங்களும் கூட கரைந்து விடும் என்பது நம்பிக்கை.
ஆவணி மாதத்தில் திருவிழா
இந்திய நாட்காட்டியின்படி, ஷ்ராவண அதாவது ஆவணி மாதத்தில் அமாவாசை இரவில் 'பதர்வி' என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற திருவிழா நடைபெறுகிறது. கோவிலில் ஒரு சதுர மேடையில் 5 தனித்தனி சுயம்பு சிவலிங்கங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொறு லிங்கத்தையும் எதிர்கொள்ளும் வகையில் நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய கடவுள் சிவபெருமான் நிஷ்கலங்க் மகாதேவ் என்று அழைக்கப்படுகிறார். நிஷ்கலங்க் என்றால், சுத்தமான, தூய்மையான, குற்றமற்றவர் என்று அர்த்தமாகும்.
பகல் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி
பிரதான கோயில் தண்ணீரால் சூழப்பட்ட ஒரு சிறிய நிலத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் பாதை நள்ளிரவு முதல் மதியம் வரை தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இந்த நேரத்தில், கோயிலின் 20 அடி தூண் மற்றும் அதன் கொடி மட்டுமே தெரியும். எனவே பக்தர்கள் தரிசன நேரம் மதியம் 1:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. அப்போது, பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடந்தே இக்கோயிலை அடைகின்றனர். மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து கோயில் கடல் நீரில் மூழ்கும். அதுவே மழைக்காலங்களில் இக்கோயிலுக்கு செல்ல முடியாது.

ஒரு போதும் கோயிலின் கொடி மூழ்கியதே இல்லையாம்
கோயிலின் கொடி 364 நாட்களும் ஏற்றப்பட்டு, அடுத்த கோயில் திருவிழாவின் போது மட்டும் மாற்றப்படும். கோயில் பதிவேடுகளின்படி, கோயில் கொடி ஒருபோதும் அலைகளால் அடித்து செல்லப்பட்டது இல்லை, மூழ்கியதும் இல்லை. இது கடுமையான அலைகளால் பாதிக்கப்படாமல் நிற்கிறது மற்றும் குஜராத்தில் 2001 இல் 50,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற மிக மோசமான பூகம்பத்திலும் கூட இந்த கோவிலுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிகிறது.
வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும்
கடலின் நடுவே கடல் அலைகள் அதிகமாக இருக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ளதால் இது உண்மையிலேயே அதிசயமான கோயிலாகும். ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய கடல் கடவுள் எப்படி வழி வகுத்தார் என்பது இன்னும் பெரிய மர்மமாக உள்ளது. எனவே, இந்த கோவிலில் இருந்து எதிரொலிக்கும் ஆன்மீகத்தை அனுபவிக்க வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த கோவிலுக்கு செல்லுங்கள்!
இந்த கோவிலுக்கு எப்படி செல்வது
பாவ்நகர் விமான நிலையம் நகரத்திலிருந்து 3.5 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அதே போல அகமதாபாத் மற்றும் மும்பை ரயில் நிலையங்களிலிருந்தும் கோவிலை எளிதில் அணுகலாம். ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா போன்ற முக்கிய நகரங்களுடன் பாவ்நகர் பேருந்து சேவையை கொண்டுள்ளது. இந்த அதிசய கோவிலுக்கு நீங்கள் செல்வது எப்போது?



Click it and Unblock the Notifications





