பரந்து விரிந்து கிடக்கும் நம் பாரத கண்டம் ஜம்மு காஷ்மீர் தொடங்கி தனுஷ்கோடி வரை பல அழகான கண்கவர் கிராமங்களையும், கடற்கரைகளையும், மலைப்பிரதேசங்களையும், நகரங்களையும் கொண்டுள்ளது. பல அழகிய கிராமங்கள் நிறைந்த இந்தியாவின் முதல் கிராமம் எது தெரியுமா? உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை ஓரத்தில், அழகிய சுற்றுச்சூழலில், சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் "மனா" கிராமம் தான் இந்தியாவின் முதல் கிராமமாம்! பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (BRO) கடந்த திங்கள் கிழமை "மனா"வில் "முதல் இந்திய கிராமம்" என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கிராமம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா?

முன்பு இந்தியாவின் கடைசி கிராமமாக இருந்த மனா
மானா என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் இந்தியாவின் பல எல்லை கிராமங்களில் ஒன்றாகும். இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகாமையில் இருப்பதால் மானா கிராமம் முன்பு இந்தியாவின் 'கடைசி கிராமமாக' அறியப்பட்டது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி இந்தியாவின் முதல் கிராமம் என்ற பெயரை பெற்றுள்ளது - மனா!
பிரதமர் மோடி தெரிவித்த கருத்து
கடந்த ஆண்டு அக்டோபரில், பிரதமர் நரேந்திர மோடி, மனாவுக்குச் சென்று, ஒவ்வொரு எல்லைக் கிராமமும் நாட்டின் கிராமமாக இருக்க வேண்டும் என்ற முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. "நாட்டின் எல்லையின் முடிவு என்று முன்னர் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள், நாட்டின் செழிப்பின் தொடக்கமாக நாங்கள் கருதத் தொடங்கினோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவின் எல்லை கிராமங்களுக்கு முக்கியத்துவம்
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் எல்லைப் பகுதிகள் மிகவும் துடிப்பானதாக மாறி வருகின்றன. துடிப்பான கிராமங்கள் திட்டம் நியமிக்கப்பட்ட எல்லை சமூகங்களில் வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் உட்பட வடக்கில் எல்லையாக உள்ள 19 மாவட்டங்களின் 46 தொகுதிகளில் 2967 கிராமங்களை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் முதல் கிராமத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
1. மனா, உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் இந்திய-சீனா எல்லையில் அமைந்துள்ள கிராமம்.
2. சரஸ்வதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மனா, பத்ரிநாத் நகரத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சுற்றுலாத் தலமாகும்.
3. சுமார் 3219 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் இயற்கை எழில் கொஞ்சும் இமயமலை மலைகளால் சூழப்பட்டு, மயக்கும் காட்சிகளை வழங்குகிறது.
4. மனா கிராமத்தில் வசிக்கும் மக்கள் மங்கோலிய பழங்குடியினரான போடியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அழகாக அலங்கரிக்கப்பட்ட மற்றும் செதுக்கப்பட்ட சிறிய குடிசைகளில் வசிக்கின்றனர்.
5. மனா அதன் செம்மறி ஆட்டு கம்பளி ஆடைகள் மற்றும் கம்பளி பொருட்களுக்கு பிரபலமானது. மனா செல்லும் எவரும் அதை வாங்காமல் திரும்பக்கூடாது.
6. மனா கிராமம் பஞ்ச பாண்டவர்கள் பிறந்த ஊர் என்று நம்பப்படுகிறது.
7. இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால், இந்திய மற்றும் திபெத்திய கலாச்சாரங்களின் தாக்கம் இங்கு அதிகமாக காணப்படுகிறது.
8. இந்த கிராமம் கட்டிடக்கலை, உணவு மற்றும் பாரம்பரியங்களின் தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளது, இது உள்ளூர் கலாச்சாரத்தை அனுபவிக்க ஆர்வமுள்ள பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

மனா கிராமத்திற்கு எப்படி செல்வது
ஆண்டின் எல்லா நாட்களிலும் மிகவும் அழகாக இருக்கும் மனாவை காண சிறந்த நேரம் நவம்பர் - பிப்ரவரி ஆகும். இதற்கு இடைப்பட்ட மாதங்களில் இங்கு சீசன் கலைகட்டும் என்று கூறப்படுகிறது. மனா கிராமத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் டெஹ்ராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம் ஆகும். அல்லது ரயில் மூலமாக செல்ல வேண்டும் என்றால் ரிஷிகேஷ் ரயில் நிலையத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications




