தென்னிந்தியாவின் மிக முக்கியமான துறைமுக, சுற்றுலா, கலாச்சார மற்றும் வர்த்தக நகரமாக விளங்கக் கூடியது விசாகப்பட்டினம். நவீனம், பாரம்பரியம் இரண்டும் கலந்த ஒரு இடத்திற்கு டிரிப் போக வேண்டும் என்றால் அதற்கு சரியான சாய்ஸ் விசாகப்பட்டினம் தான். 18ம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாறு கொண்ட நகரம் இது. நினைவுச் சின்னங்கள் முதல் புனித தலங்கள், பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கவர்ச்சிகரமான ஷாப்பிங் வரை அனைத்தும் இருக்கும் சூப்பரான நகரம். நீங்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ கூட இங்கு சென்று வரலாம். விசாகப்பட்டினம் போவதாக இருந்தால் முக்கியமான எந்தெந்த 7 இடங்களைப் பார்க்க மறக்கக் கூடாது என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.கே. பீச்
ராகிருஷ்ணா கடற்கரை எனப்படும் ஆர்.கே., பீச், டால்பின் நோஸ் அருகில் அமைந்துள்ளது. இந்த கடற்கரைக்கு அருகே ராமகிருஷ்ணா மிஷன் அசிரமத்தால் தான் இது ஆர்.கே., பீச் என அழைக்கப்படுகிறது. விசாகப்பட்டினத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு சன் ரைஸ் பார்க்க மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். அதே போல் இங்கு கடல் உணவுகளும் மிகவும் பிரசித்திமானவை.
கைலாசகிரி
விசாகப்பட்டனத்தில் உள்ள முக்கியமான இன்னொரு இடம் கைலாசகிரி. விசாகப்பட்டனத்தின் கடலோர அழகை, இங்குள்ள கயிற்றுப் பாதையில் பயணித்து பார்ப்பது திரில்லான அனுபவமாக இருக்கும். அத்தனை அழகான காட்சி அது. பலரும் அறியாத மலை மீதுள்ள பூங்கா ஆகும். விசாகப்பட்டினம் முழுவதையும் பார்த்து ரசிக்க ஏற்ற இடமாகும். இயற்கை வளம் பாதிக்கப்படாமல் இந்த மலை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மலைக்கு செல்ல ரோப் கார் வசதியும் உள்ளது.

யாரதா கடற்கரை
யாரதா கடற்கரை அற்புதமான அழகுடன் கூடியது அமைதியான இடமும் கூட. விசாகப்பட்டினத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சூரிய அஸ்தமனம் பார்ப்பது சிறப்பானது. கங்காவரம் கடற்கரை, டால்பின் நோஸ், கங்காவரம் துறைமுகம் ஆகியன இந்த கடற்கரைக்கு அருகிலேயே அமைந்துள்ளன. இங்கு சன் பாத் எடுப்பதற்கும், குடும்பம், குழந்தைகள், நண்பர்களுடன் வேண்டிக்கையாக பொழுதை போக்க ஏராளாமானோர் வருவதுண்டு. அமைதியாக பொழுதை கழிக்க ஏற்ற இடமாகும்.
போரா குகைகள்
கொடைக்கானலுக்கு எப்படி குணா குகையோ அதுபோல ஆந்திராவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அரக்கு பள்ளத்தாக்கிற்கு அனந்தகிரி மலைகளில் அமைந்துள்ள போரா குகைகள் பிரபலமானது. அருமையான பாறை அடுக்குகள், திரில்லிங்கான ரயில் பயணம் என இந்த இடம் அற்புதமானது. நாட்டில் உள்ள மிகப் பெரியகுகைகளில் இதுவும் ஒன்று. சுமார் 705 மீட்டர் கொண்ட து இந்த குகை. போரா குஹாலு என்பது தான் இதன் உண்மையான பெயர். இதில் போரா என்றால் வயிறு என்றும், குஹாலு என்றால் தெலுங்கில் குகை என்றும் பொருள்.

அரக்கு பள்ளத்தாக்கு
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்குப் பள்ளத்தாக்கு, இந்தியாவின் அழகான பள்ளத்தாக்குகளில் ஒன்று. பசும் புல்வெளிகள், காபி தோட்டங்கள், பழங்குடியினரின் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற இடம். இது காடுகள் அடர்ந்த பகுதியாகும். இந்த அரக்கு பள்ளத்தாக்கில் 30 போரா குகைகள் உள்ளன. கோஸ்தனி நதிக்கரையில் அமைந்துள்ள குகைகளும், அழகிய மலைகளும் இந்த பள்ளத்தாக்கிற்கு மேலும் அழகு சேர்க்கக் கூடியவை ஆகும்.
சிம்மாச்சலம் கோவில்
வராக லட்சுமி நரசிம்மர் கோவிலான சிம்மாச்சலம் கோவில், சிம்மாச்சலம் மலையில் அமைந்துள்ளது. இது திராவிட கட்டடக் கலைக்குப் பெயர் போன கோவிலாகும். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப்பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு மலையடிவாரத்தில் இருந்து 20 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டும். படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் ஏற்ற வேண்டும். விசாகப்பட்டினத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.
டால்பின் நோஸ்
வங்கக் கடலின் அழகை இந்த டால்பின் நோஸ் பகுதியிலிருந்து பார்ப்பதே ஒரு சுகானுபவம் தான். இது யாரடா மற்றும் கங்குவரம் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. டால்பினின் மூக்கை நினைவுபடுத்துவது போல் உள்ளதால் இதற்கு டால்பின் நோஸ் என்ற பெயர் ஏற்பட்டது. விசாகப்பட்டினத்தின் மிக முக்கியமான அடையாளங்களில் இதுவும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 358 மீட்டர் உயரத்தில், பாறைகளால் ஆன இப்பகுதி அமைந்துள்ளது. பிரிட்டிஷ் படைகள் இதை ராணுவ முகாம்களாகவும் பயன்படுத்தியதாக வரலாறு சொல்கிறது. இதன் மீதுள்ள லைட் ஹவுஸில் ஏறி பார்த்தால் சுற்றி இருக்கும் 65 கி.மீ., வரை பார்க்க முடியும்.



Click it and Unblock the Notifications





