இந்தியாவின் இன்றைய இளைய தலைமுறை அமெரிக்கா, ஃபிரான்ஸ் என்று வெளிநாட்டு மோகத்தால் நம்முடைய கலாச்சார சிறப்பையும், பாரம்பரிய பெருமைகளையும் மறந்துகொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதே கலாச்சாரத்தாலும், பாரம்பரியத்தாலும் இந்தியாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இந்தியாவை தேடி லட்சக்கணக்கான வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.
2011-இன் கணக்கெடுப்பின்படி அந்த ஆண்டு மட்டும் இந்தியா வந்து சென்ற வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 63 லட்சம் ஆகும்.
இந்தியாவின் தொன்மத்தையும், வரலாற்றையும், கலாச்சார சிறப்பையும் பிரதிபலிக்கும் இடங்களுக்கே வெளிநாட்டு பயணிகளின் கூட்டம் படையெடுக்கிறது.
அந்த வகையில் இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளால் அதிகமாக பார்க்கப்படும் இடங்கள் குறித்த ஒரு அலசல்!

கஜுராஹோ
உலகுக்கே காதலை போதித்த காமசூத்ரா எழுதப்பட்ட நாடு இந்தியா. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்து கோயில்களில் அற்புதமாக காதலை வெளிப்படுத்தும் சிற்பங்களை ஏராளம் காணலாம். அவற்றில் காமக்கலையினை காட்சி வடிவமாக பிரதிபலிக்கும் கட்டிடக்கலை அதிசயம் கஜுராஹோ. இதன் காரணமாக இங்கு வெளிநாட்டவர் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
கஜுராஹோ சிற்பங்களின் புகைப்படங்கள்

கோவா
கோவா ஒரு சுற்றுலாத் தலமாக அற்புதமான விடுமுறை கால கொண்டாட்டமாகவும், அடைவதற்கு சுலபமான இடமாகவும் இருக்கிறது. இந்த நகரத்தை தேடி உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகள், இரவு விடுதி மற்றும் கடற்கரைகளை தாண்டி கோவாவில் காணக்கூடிய சுதந்திரத்தையும், குழப்பமான வீதிகளையும், நகரின் வெப்பநிலையையும், அங்கங்கு ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தியத்தன்மையையுமே பெரிதும் விரும்புகின்றனர்.
படம் : Andy Weisner

மைசூர் அரண்மனை
இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து மைசூர் அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளை கொண்டு சாம்பல் நிற சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன. இந்த அரண்மனையின் சுவர்களை பிரபல இந்திய ஓவியர்களான சித்தலிங்க சுவாமி, ராஜா ரவி வர்மா மற்றும் கே. வெங்கடப்பா போன்றோரின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. அதோடு இங்கு மரத்தால் ஆன ஒரு யானை சிலை 81 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. இப்படி கலைப்பொக்கிஷமாக திகழும் மைசூர் அரண்மனையில் பொதுவாக எல்லா நாட்களிலும் வெளிநாட்டவர் கூட்டம் காணப்பட்டாலும், தசரா திருவிழாவின்போது வெளிநாட்டவர் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

தாஜ் மஹால்
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால், முகாலயப்பேரரசர் ஷாஜஹானால் அவரது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்டுள்ள கல்லறை மாளிகையாகும். எல்லோராலும் அற்புத காதல் சின்னமாக பார்க்கப்படும் தாஜ் மஹால் வெளிநாட்டு பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம். அதாவது இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் தாஜ் மஹாலை பார்க்காமல் தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்வதில்லை.

அஜந்தா
கி.பி 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த உலகப்புகழ் பெற்ற வரலாற்று சின்னமான ‘அஜந்தா குடைவறைக்கோயில்கள்' புராதன இந்தியாவில் ஏக காலத்தில் தழைத்தோங்கியிருந்த ஹிந்துமரபு, புத்த மரபு மற்றும் ஜைன மரபு போன்றவற்றின் ஆதாரச் சான்றுகளாக காலத்தால் அழியாமல் நின்று ஆயிரம் மௌனக் கதைகள் கூறுகின்றன. உலகப்பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் அஜந்தா குகைகளில் எப்போதும் வெளிநாட்டவர் வட்டமிட்டு கொண்டே இருக்கின்றனர்.
படம் : Nagalakk

உதய்பூர்
ஏரிகளின் நகரம் என்று பிரபலமாக அறியப்படும் உதய்பூர் ஒரு எழில் கொஞ்சும் வரலாற்று ஸ்தலமாகும். இது தன் மஹோன்னதமான கோட்டைகள், கோயில்கள், அழகான ஏரிகள், அரண்மனைகள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இதன் காரணமாக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் தவறாமல் உதய்பூருக்கும் வந்து செல்கின்றனர்.
படம் : Geri

ஹம்பி
ஹம்பி தொன்மை வாய்ந்த நகரமாக விளங்கி புராண காலத்திலேயே ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹம்பி இடுபாடுகளின் உன்னதத்தை முழுக்க ரசிக்க விரும்பினால் ஒரு வாடகை சைக்கிளில் ஓய்வாக ஹம்பியை சுற்றி வந்து பார்த்து ரசிக்கலாம். அதற்கு வசதியாக சைக்கிள்களும், மோட்டார் பைக்குகளும் இங்கு வாடகைக்கு கிடைக்கின்றன. ஆக்ஷன் மன்னன் ஜாக்கி ஜான் நம்ம கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத்துடன் இணைந்து கலக்கிய 'தி மித்' திரைப்படத்தின் சில காட்சிகள் ஹம்பியில் உள்ள விருபாக்ஷா கோயிலில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நகரம் அதன் தொன்மையின் காரணமாக வெளிநாட்டவர் மத்தியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

காந்தி ஸ்ம்ருதி
காந்தி ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் இந்த பழமையான இல்லத்தில்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தனது வாழ்நாளின் கடைசி 144 நாட்களை கழித்துள்ளார். அந்தக் காலத்தில் இந்த இடம் பிர்லா ஹவுஸ் அல்லது பிர்லா பவன் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் நாதுராம் கோட்ஸேவால் 1948,ஜனவரி 30-ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் காந்தி. இந்த இடம் இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளால் பார்க்கப்படும் இடங்களில் மிகவும் முக்கியமானது.
படம் : Poco a poco

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. இதன் காரணமாகவே பிரகதீஸ்வரர் கோயிலை காண்பதற்காகவே இந்தியாவை தேடி எண்ணற்ற வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோல்கொண்டா கோட்டை
கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்தக் கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டையில் காணப்படும் ஒலியியல் அம்சம் ஒரு விசேஷமான அம்சமாக அறியப்படுகிறது. அதாவது கோட்டை வாயிற்பகுதியில் நின்று நாம் கைகளைத் தட்டினால் அந்த சத்தமானது மிகத்துல்லியமாக 91 மீட்டர் உயரத்திலுள்ள கோட்டையின் மேல் மாடத்தில் எதிரொலிக்கிறது. இந்த வரலாற்று கோட்டை ஏராளமான வெளிநாட்டு பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகிறது.
படம் : Shantanu86



Click it and Unblock the Notifications








