கொதிக்கின்ற சிவன் சிலை, இயற்கையாக உருவான வெந்நீர் ஊற்று, அதில் சமைக்கின்ற பிரசாதம் இவையெல்லாம் இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் இருந்து 80 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மணிக்கரன் என்ற இடத்தில் அமைந்துள்ள அதிசயங்களாகும். இந்த மணிக்கரன் பகுதியில் ஒரு சிவன் பார்வதி கோயிலும், ஒரு குருத்வாராவும் அமைந்துள்ளது. இந்த சிவன் கோவில் காசிக்கு இணையானது என்றும், இங்கு சென்று சிவ பார்வதியை தரிசித்துவிட்டு அங்கே வழங்கப்படும் பிரசாதத்தை ஒரு முறை சாப்பிட்டு விட்டு வந்தால் நம் வாழ்வில் செய்த பாவங்கள் யாவும் நம்மை விட்டு நீங்கிவிடும் என்பது ஐதீகம்!

அழகிய மணிக்கரன் கிராமம்
இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பியாஸ் மற்றும் பார்வதி நதிகளுக்கு இடையே பார்வதி பள்ளத்தாக்குக்கு அருகில் மணிக்கரன் என்ற அழகிய கிராமம் அமைந்துள்ளது. சுற்றிலும் பசுமை, தொலைதூரத்தில் பனி மூடிய மலைகள், இதமான வானிலை, அழகிய சமவெளிகள், வெள்ளி போன்ற மின்னு ஓடுகின்ற ஆறுகள் என இந்தப் பகுதியின் எல்லா இடங்களுமே வசீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சிவன் கோவத்தினால் உருவான வெந்நீர் ஊற்று
மணிக்கரன் பகுதியின் முக்கிய அம்சம் அண்ட இடத்தில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்று தான். இந்த அழகிய இடத்தில் ஆதி பரம்பொருளான சிவனும் பார்வதியும் பல யுகங்களாக வாழ்ந்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாள் பார்வதி தேவி இந்த ஊற்றில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, தேவியின் அரிய ஆபரணம் ஒன்று இந்த ஊற்றில் காணமல் போனதாம். தேடி தேடி அலுத்துப் போன சிவபெருமானின் கோவத்தின் பிரதிபலிப்பு இந்த ஊற்றை வெந்நீர் ஊற்றாக மாற்றியதாம்.

சீக்கியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த குருத்வாரா
மணிக்கரன் எப்படி இந்துக்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போல இந்த இடம் சீக்கியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெரும் வெள்ளத்திற்கு பிறகு மனு பகவான் செய்த மீள்குடியேற்றம் செய்த இடம் இது தான். அதே போல சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக்கின் வருகையுடன் தொடர்புடையது. இந்த இடத்தில் குருநானக் அமர்ந்து ஆழ்ந்து தியானம் செய்ததன் நினைவாக இங்கு குருத்வாரா எழுப்பப்பட்டது. இங்கு வந்து செல்வது சீக்கியர்களுக்கு மிகவும் புனிதத்தன்மை வாய்ந்தது.

வெந்நீர் ஊற்றில் சமைக்கப்படும் பிரசாதங்கள்
சிவ பார்வதி கோவிலும், குருத்வாராவும் மணிக்கரன் பகுதியில் அருகருகே அமைந்துள்ளன. கோவிலுக்கும் குருத்வாராவிற்கும் வருகை தரும் பக்தர்களுக்கு இங்கு பிரசாதம் அளிக்கப்படுகிறது. அந்த பிரசாதம் அனைத்தும் இந்த வெந்நீர் ஊற்றுகளில் வரும் சுத்தமான நீரைக் கொண்டே செய்யப்படுகிறது. இந்த நீரூற்றுகளில் உள்ள தண்ணீரில் நோய்களைக் குணப்படுத்தும் திறன் கொண்ட கந்தகம் உள்ளது. பாத்திரங்களை நேரடியாக வைப்பதன் மூலம் உணவு தயாரிக்கும் அளவுக்கு தண்ணீர் சூடாக உள்ளது.

இந்த இடத்திற்கு எப்படி செல்வது
குலு அல்லது மணாலியில் இருந்து இந்த இடத்தை எளிதில் அடையலாம். குலுவில் உள்ள பூந்தர் விமான நிலையத்தை அடைந்தவுடன் அங்கிருந்து சாலை மார்க்கமாக நீங்கள் மணிக்கரனை அடையலாம். நீங்கள் ரயில் வழியாக இங்கு வருகிறீர்கள் என்றால், சண்டிகர் ரயில் நிலையத்தில் இருந்து டாக்சி எடுத்துக் கொள்ளலாம். மணாலியில் இருந்து மணிக்கரனுக்கு செல்ல ரூ.700 டாக்ஸி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த புனிதமான இடத்திற்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications





