இந்திய ரயில்வே சொகுசு ரயில்கள் முதல் சுரங்க ரயில்கள் வரை, அதி நவீன ரயில்கள் வரை மலை ரயில்கள் வரை, சுற்றுலா சர்க்யூட் ரயில்கள் முதல் வந்தே பாரத் விரைவு ரயில்கள் வரை கலக்கி வருகிறது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில்கள் தொடங்கப்பட்ட அனைத்து பாதைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்போது புதிதாக இந்தியாவின் 14வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் 497 கிமீ தூரத்தை ஐந்தரை மணி நேரத்தில் கடக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. கட்டணம் எவ்வளவு, எந்தெந்த ஸ்டேஷன்களில் நிறுத்தப்படுகிறது, இயங்கும் நாட்கள் குறித்து கீழே!

பெரும்பாலான மக்கள் சென்னை to கோயம்புத்தூர் பயணம்
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கும், கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கும் பெரும்பாலான மக்கள் வணிக, கல்வி மற்றும் வேலைக்காக பயணம் செய்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களிலும், நீண்ட விடுமுறை நாட்களிலும் இரு நகரங்களிலிருந்தும் இடம் பெயர்வோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் தனியார் பேருந்து நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி விற்கிறது. முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுவதால் வேறு வழியில்லாமல் மக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக காசு கொடுத்து பயணம் செய்கின்றனர்.
ஏப்ரல் 8 இல் பிரதமர் மோடி துவங்கி வைத்த வந்தே பாரத் சேவை
இந்நிலையில் சென்னையில் உள்ள எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்த பிரதமர், சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பார்வையிட்டார், மேலும் குழந்தைகள் மற்றும் ரயில் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குப் பிறகு சென்னையில் இருந்து இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும்.

புதன்கிழமை தவிர வாரத்தின் எல்லா நாட்களிலும் சேவை
இரு நகரங்களுக்கு இடையே அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயணத்தின் போது, சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று நிலையங்களில் மட்டுமே ரயில் நிற்கும். இந்த ரயில் 130 கிமீ வேகத்தில் 5.50 மணி நேரத்தில் இருபுறமும் இலக்கை அடையும், இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட 1.20 மணிநேர பயண நேரம் மிச்சமாகும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் அல்லவா.

20643 சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கம்
சென்னையில் இருந்து புறப்படும் நேரம் - 14:25 மணி
சேலம் சந்திப்புக்கு வருகை - 17:48 மணி
சேலம் சந்திப்பில் இருந்து புறப்படும் நேரம் - 17:50 மணி
ஈரோடு சந்திப்புக்கு வருகை - 18:32 மணி, ஈரோடு சந்திப்பில் இருந்து புறப்படும் நேரம் - 18:35 மணி
திருப்பூர் சந்திப்புக்கு வருகை - 19:13 மணி, திருப்பூரில் இருந்து புறப்படும் நேரம் - 19:15 மணி
கோயம்புத்தூரை வந்தடையும் நேரம் - 20:15 மணி
இதே போல கோவையிலிருந்து காலை 06:00 மணி புறப்படும் ரயில் எண் 20644 கோயம்புத்தூர்-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காலை 11:50 மணி சென்னையை வந்தடைகிறது.

சென்னை to கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஏசி நாற்காலியின் கட்டணம்
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் - 1,365 ரூபாய்
சென்னையிலிருந்து திருப்பூருக்கு - 1,280 ரூபாய்
சென்னையிலிருந்து ஈரோடு சந்திப்பு வரை - 985 ரூபாய்
சென்னையிலிருந்து சேலம் சந்திப்பு வரை - 895 ரூபாய்

சென்னை to கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எக்சிகியூட்டிவ் நாற்காலியின் கட்டணம்
சென்னையிலிருந்து கோயம்புத்தூர் - 2,485 ரூபாய்
சென்னையிலிருந்து திருப்பூருக்கு - 2,325 ரூபாய்
சென்னையிலிருந்து ஈரோடு சந்திப்பு வரை - 1,930 ரூபாய்
சென்னையிலிருந்து சேலம் சந்திப்பு வரை - 1,740 ரூபாய்
மேற்கூறிய அனைத்து கட்டணங்களும் கேட்டரிங் தேர்வுகளுடன் வருகிறது. உங்களுக்கு உணவு வேண்டாமென்றால் அவற்றை தவிர்த்துக் கொள்ளலாம். அதில் உங்களுக்கு ரூ.100 முதல் ரூ.370 வரை டிக்கெட் கட்டணத்தில் இருந்து குறையும். இந்த ரயிலில் நீங்கள் எப்போது பயணம் செய்யப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications





