நீங்கள் கோவை மாநகரம் அல்லது ஈரோட்டில் வசிக்கிறீர்களா? நீண்ட நாட்களாக உங்கள் வீட்டு குட்டீஸ்கள் உங்களை எங்காவது அழைத்து செல்லும்படி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களா? கவலையை விடுங்கள்! கம்மி பட்ஜெட்டில் ஒரு அசத்தலான பிக்னிக் ஸ்பாட் இதோ. சிலுசிலுவென குளிர்ந்த காற்று, மினி நீர்வீழ்ச்சிகளில் ஆனந்த குளியல், பசுமையான இடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது என சித்திரைச்சாவடி அணைக்கட்டு நம்மை வரவேற்கிறது. இந்த வார இறுதியில் இங்கு விசிட் அடித்து ஆனந்தமாக பொழுதை போக்கிடுங்கள்! எப்படி இங்கே செல்வது? என்ன இங்கே விசேஷம் என்பது குறித்து இங்கே காண்போம்!

கோவையில் இருந்து அரை மணி நேர தூரத்தில் அழகிய ஸ்பாட்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 20 கிமீ தூரத்தில் இந்த அழகிய சித்திரை சாவடி அணைக்கட்டு அமைந்துள்ளது. வெறும் அரை மணி தூரத்தில் இப்படி ஒரு அழகான இடம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மைதான். பேரூர், மாதம்பட்டி தாண்டிய கொஞ்ச தூரத்திலே அணைக்கட்டு அமைந்துள்ளது. கொண்டாமுத்தூரில் இருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ள சித்திரை சாவடி அணைக்கட்டுவிற்கு செல்ல, Google maps ஐ நீங்கள் உபயோகப்படுத்தலாம். Google maps இல் தெளிவாக வழி உள்ளது. நீங்கள் கோவை காந்திபுரத்தில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவோ அல்லது உங்களது சொந்த வாகனத்திலோ இங்கு வருகை தரலாம்.

குழந்தைகளுடன் பிக்னிக் செல்ல சரியான ஸ்பாட்
நீங்கள் குழந்தைகளுடன் அல்லது நண்பர்களுடன் இந்த பிக்னிக் பிளான் செய்கிறீர்கள் என்றால் இரு சக்கர வாகனம் தான் பெஸ்ட். குளிர்ந்த வானிலை, இருபுறமும் மரங்கள், வழி நெடுக பசுமை என போகும் வழி மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. பயணமும் நீண்ட பயணம் அல்ல, கோவை நகரில் இருந்து வெறும் அரை மணி நேரமும், ஈரோட்டில் இருந்து ஒன்றரை மணி நேரமும் தான் ஆகிறது. இந்த இடம் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பிக்னிக் ஸ்பாட் ஆகும்.

சுற்றிலும் மயக்கும் இயற்கை அழகு
பார்க்கிங்கில் உங்களது இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களை பார்க் செய்து விட்டு சிறிது தூரம் நடக்க ஆரம்பிக்கவும். தண்ணீர் போகும் சத்தத்தை நீங்கள் நடக்கும் போதே கேக்கலாம். ஒரு 100 முதல் 150 மீட்டர் தூரத்திலேயே நீங்கள் அனைக்கட்டுவை அடைந்து விடலாம். மழைக் காலங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுதும் ஒன்றும் குறைவில்லை. நீர் வரத்து நன்றாகவே இருக்கிறது. ஆதலால் நீங்கள் தாராளமாக இந்த வாரம் இங்கு வருகை தரலாம்.

மினி நீர்வீழ்ச்சி மற்றும் அணைக்கட்டில் ஆனந்த குளியல்
அருகே கட்டப்பட்டு இருக்கும் படிக்கட்டுகள் மீது ஏறி நின்று அணைக்கட்டின் முழு காட்சியையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம். அணைக்கட்டில் இருந்து நிரம்பி வரும் உபரி நீர் வெளிவரும் இடத்தில் குழந்தைகள் அமர்ந்து குளிக்கலாம். ஆழம் எதுவும் இல்லை, ஆதலால் சிறு குழந்தைகளும் பயமின்றி குளிக்கலாம். நீங்கள் ஒரு முறை உங்கள் வீட்டு குட்டீஸ்களை இங்கு அழைத்து சென்றால் போதும். மீண்டும் மீண்டும் இங்கு அழைத்து வரச் சொல்லி அவர்கள் அடம் பிடிப்பார்கள். நீச்சல் தெரிந்த பெரியவர்கள் அணைக்குள் இறங்கி ஆனந்தமாக குளிக்கலாம். இதற்கு நுழைவுக் கட்டணம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. முற்றிலும் இலவசம் தான்.

மறக்காமல் இதை செய்யுங்க
போகும் வழியெல்லாம் சிறு சிறு கடைகளும், இளநீர், கொய்யா கடை போன்றவைகளும் இருக்கின்றன. நீங்கள் பலவற்றை ருசித்து கொண்டே உங்களது பிக்னிக்கை என்ஜாய் பண்ணலாம். குழந்தைகளுக்கு மாற்றுத்துணி, டவல் ஆகியவற்றை எடுத்துச் செல்வது அவசியம். அதோடு மட்டுமில்லாமல் நீங்கள் உணவு எடுத்து வந்து விட்டு, குளித்து முடித்த பின்னர் மாற நிழலில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு சாப்பிடலாம். ஒரு முழுமையான பிக்னிக் ஆக இது நிறைவடையும் அல்லவா! இந்த அழகான ஸ்பாட்டுக்கு நீங்கள் இந்த வாரமே செல்ல தயாரா?



Click it and Unblock the Notifications





