மலை மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் 'அய்யன் ஐயப்பனை' காண சபரிமலை நோக்கி ஓடிவரும் பகதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக சபரி மலை சீசன் மற்றும் மகர விளக்கு பூஜை நேரங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிகின்றனர். இதனால் சமீப ஆண்டுகளாக தேவசம் போர்டும், கேரளா போலீசாரும் திணறி வருகின்றனர். இதனால் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக ஆன்லைன் புக்கிங் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை அறிந்த பக்தர்கள் மிகவும் அதிருப்தி தெரிவித்து வருவதுடன், ஆங்காங்கே போராட்டங்களும் கேரளாவில் நடந்து வருகிறது!
முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சபரிமலைக்கு சீசன் நேரங்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆன்லைன் புக்கிங் அவசியம் என முடிவு எடுக்கப்பட்டது. சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரை சீசனை முன்னிட்டு, இந்த முறை ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பக்தர்களை அனுமதிக்கும் வகையில் வசதிகள் செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் தேவைக்கு ஏற்ப வசதிகள் செய்து தர ஒப்புதல்
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து விவாதம் நடைபெற்றது. பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தரமான அப்பம், அரவணை பிரசாதம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும். கூட்டம் அதிகமாகும் நாட்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வாகன பார்க்கிங் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பாரம்பரிய காட்டு வழி நடைபாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நிலக்கல் மற்றும் எருமேலியில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய கூடுதல் வசதி செய்யப்படும். சபரிமலை செல்லும் சாலைகள், பார்க்கிங் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும். பீக் ஹவர்ஸில் வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தால், மையங்கள் கண்டறியப்பட்டு, தேவையான உள்கட்டமைப்புகள் வழங்கப்படும். சபரிமலைக்கு செல்லும் சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களின் சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
நெரிசலான சூழலை கட்டுப்படுத்த நடவடிக்கை
கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 17-20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை மனதில் வைத்தே முன்கூட்டியே பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய கேரளா உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுவுக்கும் உத்தரவிட்டு இருந்த நிலையில் நாள்தோறும் 80,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
அதன்படி வரும் மண்டல காலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு ‛ஸ்பாட்' புக்கிங் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முறை அதற்கு அனுமதியில்லை. முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களே மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் நாள்தோறும் 80,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செல்லும் வழியை தேர்வு செய்து கொள்வது அவசியம்
அதுமட்டுமின்றி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவின்போதே பக்தர்கள் செல்லும் வழியை தேர்வு செய்து கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிலக்கல், எருமேலியில் கூடுதல் வாகனங்களை நிறுத்த வசதி செய்ய வேண்டும். மேலும் ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதனை செய்யாமல் செய்யும் பக்தர்கள் நிலக்கல், எருமேலி சென்றும் சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாமல் வீடு திரும்பும் சூழல் ஏற்படும். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் உரிய முறையில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தியில் உறைந்த பக்தர்கள்
ஆனால், இந்த முடிவை பக்தர்களும் பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள், இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர். பல்வேறு மன்றங்கள் புதிய விதிமுறைகளை கடுமையாக எதிர்த்து வருகின்றன, அதே நேரத்தில் சில மன்றங்கள் முடிவுகளை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை கோரி மறியல் செய்ய திட்டமிட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து மலைக் கோயிலுக்கு வருகை தரும் அனைத்துப் பிரிவினரும் ஆன்லைன் முன்பதிவு வசதிகளை அணுக வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய தடையால், தொலைதூரத்தில் இருந்து இறங்கி வரும் பக்தர்களுக்கு தரிசனம் மறுக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications





