உலகின் பல்வேறு மூலைமுடுக்குகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எவ்வளவோ மக்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான மக்கள் தமிழகத்தில் இருப்பது பாதுகாப்பாக உணருகிறார்கள், இங்கு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பதாகவும் கூறுகிறார்கள். அவர்கள் தமிழகத்தை மிகவும் நேசிப்பதற்கு பல சுவாரஸ்யமான காரணங்களை முன்வைக்கின்றனர்! அவை என்னவென்று தெரிந்துக் கொள்வோம்!

அசரவைக்கும் கலாச்சார பாரம்பரியம்
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு முன்னரே, பல ஆயிரம் கவிஞர்கள், கட்டிடக் கலைஞர்கள், விஞ்ஞானிகள், கணிதவியலாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தமிழகத்திற்கு பயணித்துள்ளனர். திராவிட கட்டிடக்கலை என்று அழைக்கப்படும் பழமையான கோயில் கட்டிடக்கலை பிறந்த இடம் தமிழ்நாடு தான் தெரியுமா? ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மகாபலிபுர கோயில்கள் முதல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் வரை ஏகப்பட்ட கோவில்கள் பிரமிக்க வைக்கும் கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

கண்ணை கவரும் இயற்கை சுற்றுலாத் தலங்கள்
கலாச்சாரம், பாரம்பரியம் மட்டும் தான் தமிழகத்தின் முகம் என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு, பல அழகிய கிராமங்களும், மலைவாசஸ்தலங்களும், சமவெளிகளும் ஏன் இயற்கை அதிசயங்களும் தமிழகத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. பிரபலமான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு முதல் பிரபலமடையாத பன்றிமலை, கொல்லி மலை, மேகமலை வரை பல எண்ணற்ற இயற்கை அழகு வாய்ந்த சுற்றுலாத் தலங்கள் பல தமிழகத்தை அலங்கரிக்கின்றன.

உதட்டை பிழியும் உணவுகள்
தமிழ்நாட்டின் அறுசுவை உணவுகள் உலக அளவில் ஃபேமஸ் என்றே சொல்லலாம். என்ன தான் உலகத்தை சுற்றி நாம் பல உணவுகள் சாப்பிட்டு வந்தாலும், நம்ம ஊர் வடை, பாயசம், சாம்பார், இட்லி, பூரி, பொங்கல் முன் நிற்க முடியாது. இது நமக்கு மட்டும் தான் என்று நீங்கள் நினைக்க கூடாது, வெளி ஊர்களில் இருந்து வரும் மக்களும் கூட நம்ம ஊர் உணவு வகைகளுக்கு அடிமையாகி வருகின்றனர்.

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பும் மரியாதையும்
எல்லாவற்றையும் விட இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் மிகவும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக உணருகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக இருக்கிறது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் மிகவும் மதிக்கப்படுவதாகவும், முகம் தெரியாத நபர்கள் கூட இங்கு பாசமாக பழகுவதாக கூறுகிறார்கள்.
நாங்கள் தமிழகத்தை மிகவும் நேசிக்கிறோம்
தமிழகத்தை பல்வேறு தரப்பில் இருக்கும் மக்களும் பல்வேறு காரணக்களுக்காக நேசிக்கிறார்கள். Quora எனப்படும் சமூகவளைத்தலத்தில் உங்களுக்கு ஏன் தமிழகம் பிடிக்கும் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு பலரும் ஆச்சர்யமான காரணங்களை கூறியுள்ளனர், அவர்கள் தெரிவித்த கருத்தை நீங்களே பாருங்களேன்!
1. சிந்தனா எனும் MBA மாணவி, தமிழ்நாடு அனைத்து மக்களும் சமமான வாய்ப்புகளை வழங்குவதாகவும், தமிழகம் மிகவும் பாதுகாப்பு நிறைந்த இடமாக இருப்பதாகவும், இது கோவில்களின் பூமி என்றும், தமிழக மக்கள் மக்கள் மிகவும் பாசத்துடன் பழகுவதாகவும் கூறுகிறார்.
2. பாலகோபால் எனும் MNC மேலாளர், 82 வயதாகும் நான், எனது 48 வருடங்களை தமிழகத்தில் கழித்தேன், அது எனக்கு மிகவும் பிடிக்குமென்றும், தமிழக மக்கள் ஒருவரையொருவர் மிகவும் மதிக்கிறார்கள், கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள் என்று கூறுகிறார்.
3. சென்னையில் வசிக்கும் ஜான், நான் பிறந்தது வேண்டுமானால் ஷில்லாங்காக இருக்கலாம், ஆனால் தமிழகம் என்னை தத்தெடுத்து கொண்டதை போல உணருகிறேன் என்று கூறியுள்ளார். நண்பா, மச்சி, மாமா, அண்ணா, மச்சா என்று இவர்கள் அழைப்பது தன்னை அவர்களுடன் நெருக்கமடைய வைக்கிறது.
4. பெங்களூவை சேர்ந்த பத்திரிகையாளரான அஜய் மோகன், தமிழகத்தின் சாலைகள் மிக அருமையாக உள்ளது, அழகான கிராமங்களை கொண்டுள்ளது எனவும், தமிழத்தின் உணவு தனித்துவமான சுவையை கொண்டுள்ளது, மக்கள் மிகவும் உதவி செய்யும் நோக்குடன் பழகுகிறார்கள், குறிப்பாக தமிழகத்தின் தேநீர் சுவைக்கு நான் அடிமை என்றும் கூறியுள்ளார்.
5. கட்டிடக்கலை நிபுணரான செந்தில் பிரபு ஈஸ்வரகுமார், தமிழகம் ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கிறது, தமிழ்நாட்டின் வளமான வரலாறு, கலாச்சார பங்களிப்புகள் மற்றும் ஒரு வலுவான சமூகத்தைச் சேர்ந்த உணர்வு கொடுக்கிறது என்றும், தமிழ்நாடு என்னை நம்பகத்தன்மையுடன் வாழ அனுமதிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
6. புனேவை சேர்ந்த பொறியாளரான சித்தாந்த் சாந்த், மராத்தியர்களை திராவிடர்களாகக் கருதும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. இந்த நவீன காலத்திலும் கூட கலாச்சாரத்தில் பெருமை கொண்டவர்கள் தமிழர்கள் மற்றும் அவர்களின் பாரம்பரிய ஆடைகளை அணிய அவர்கள் ஒருபோதும் தயங்காதவர்கள் என்று கூறியுள்ளார்.
இது போல நூற்றுக்கணக்கான பதில்கள் அந்த கேள்விக்கு விடையாக வந்துக் கொண்டிருக்கிறது, ஆக மொத்தம் தமிழகம் அனைவர்க்கும் மிகவும் பிடித்த இடமாக இருப்பது நன்றாக தெரிகிறது, உங்களுக்கு எந்த காரணத்திற்காக தமிழகம் பிடிக்குமென்று கூறுங்களேன்!



Click it and Unblock the Notifications





