மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சிறு மலைநகரம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 949 மீட்டர் உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் நகரம் காபி உற்பத்தி மற்றும் ஏலக்காய் விளைச்சலுக்கு புகழ் பெற்றுள்ளது. இந்த இடம் சுற்றுலாத் தளமாக இருந்தாலும், பலருக்கு தெரியாமல் தன் பசுமை மாறா இளமையோடு காட்சியளிக்கிறது. இங்கு ஒரு நாள் சுற்றுலாவை எப்படி கழிக்கலாம் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக காண்போம்.

மலையேறிகளின் சொர்க்கம்
மலையேறிகளின் சொர்க்கம் சக்லேஷ்பூர் நகரம் மைசூர் ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் இந்த நகரம் ஹொய்சளர்கள் மற்றும் சாளுக்கியர்களின் ஆட்சியில் இருந்துள்ளது. ஹொய்சளர்கள் ஆட்சியின்போது இந்த நகரம் சக்லேஷ்பூர் என்ற பெயரை பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

உடைந்த சிவலிங்கத்தின் கதை
உள்ளூர் கதைகளின்படி ஹொய்சள வம்சத்தினர் இந்த சிறு நகரத்தில் ஒரு உடைந்த சிவலிங்கத்தை கண்டெடுத்ததாகவும் அதன் பின்னரே சக்லேஷ்பூர் என்று இந்த நகருக்கு பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் மற்றொரு கதைப்படி இந்த நகரம் விவசாய உற்பத்தியில் செழிப்புடன் விளங்கியதாலேயே இப்பெயரை பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.

மலையேற்றப்பாதை
சக்லேஷ்பூர் இதன் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட சூழலுக்காகவும் இங்குள்ள மலையேற்ற வசதிகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்டுள்ளது. பிஸ்லே வனப்பாதுகாப்பு சரகம் மற்றும் குமார பர்வத மலையேற்றப்பாதை போன்றவை இந்த சக்லேஷ்பூர் ஸ்தலத்தின் இயற்கை அம்சங்களை பிரதிபலிக்கும் இடங்களாகும்.

எழில் நிறைந்த நகரம்
மலையேற்றத்தில் அவ்வளவாக விருப்பமில்லாத பயணியாக இருந்தாலும் இந்த எழில் நிறைந்த நகரத்தை சும்மா சுற்றிவருவதே உங்கள் கண்களையும் மனதையும் நிறைய வைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு உண்மையாகும்.

எப்படி அடைவது
சக்லேஷ்பூரை அடைவதற்கு இந்த நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹாசன் நகருக்கு பயணிகள் செல்ல வேண்டியுள்ளது. அருகாமையிலுள்ள விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது.

பிஸ்லே காட்
சக்லேஷ்பூரின் முக்கியமான சுற்றுலா அம்சமான இது இங்குள்ள பிஸ்லே வனப்பாதுகாப்பு சரகத்திற்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. மழைக்காடுகளை கொண்ட இந்த வனப்பகுதியில் புலிகள், ராஜ நாகம், மான்கள் மற்றும் பல வகை பறவை இனங்கள் வசிக்கின்றன. பிஸ்லே குட்டா அல்லது சூர்யபிரகாச மலை என்று அழைக்கப்படுகிற இந்த சிற்றுலாத்தலத்தின் உச்சியிலிருந்து அருகிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை, குமார பர்வத மலை, புஷ்பகிரி, தொட்டபெட்டா மற்றும் பட்டபெட்டா போன்ற மலைகளை ரசித்து மகிழலாம்.

மஞ்சராபாத் கோட்டை
சக்லேஷ்பூருக்கு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 48ல் இந்த மஞ்சராபாத் கோட்டை அமைந்துள்ளது. இஸ்லாமிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வண்ணம் இது அலங்கார வளைவுடன் வாயில் அமைப்புகளைக்கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,240 அடி உயரத்தில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இது மைசூரை ஆண்ட திப்பு சுல்தானால் பாதுகாப்பு தேவைகளுக்காக கட்டப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியிலிருந்து சக்லேஷ்பூரை தாண்டி தக்காணத்திற்குள் வரும் பாதைகளை கண்காணிக்கும்படியாக இது அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications




