மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சிறு மலைநகரம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 949 மீட்டர் உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் நகரம் காபி உற்பத்தி மற்றும் ஏலக்காய் விளைச்சலுக்கு புகழ் பெற்றுள்ளது.
மலையேறிகளின் சொர்க்கம்
சக்லேஷ்பூர் நகரம் மைசூர் ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் இந்த நகரம் ஹொய்சளர்கள் மற்றும் சாளுக்கியர்களின் ஆட்சியில் இருந்துள்ளது. ஹொய்சளர்கள் ஆட்சியின்போது இந்த நகரம் சக்லேஷ்பூர் என்ற பெயரை பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.
உள்ளூர் கதைகளின்படி ஹொய்சள வம்சத்தினர் இந்த சிறு நகரத்தில் ஒரு உடைந்த சிவலிங்கத்தை கண்டெடுத்ததாகவும் அதன் பின்னரே சக்லேஷ்பூர் என்று இந்த நகருக்கு பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் மற்றொரு கதைப்படி இந்த நகரம் விவசாய உற்பத்தியில் செழிப்புடன் விளங்கியதாலேயே இப்பெயரை பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.
சக்லேஷ்பூர் இதன் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட சூழலுக்காகவும் இங்குள்ள மலையேற்ற வசதிகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்டுள்ளது. பிஸ்லே வனப்பாதுகாப்பு சரகம் மற்றும் குமார பர்வத மலையேற்றப்பாதை போன்றவை இந்த சக்லேஷ்பூர் ஸ்தலத்தின் இயற்கை அம்சங்களை பிரதிபலிக்கும் இடங்களாகும்.
மலையேற்றத்தில் அவ்வளவாக விருப்பமில்லாத பயணியாக இருந்தாலும் இந்த எழில் நிறைந்த நகரத்தை சும்மா சுற்றிவருவதே உங்கள் கண்களையும் மனதையும் நிறைய வைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு உண்மையாகும்.
சக்லேஷ்பூரை அடைவதற்கு இந்த நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹாசன் நகருக்கு பயணிகள் செல்ல வேண்டியுள்ளது. அருகாமையிலுள்ள விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications