திருப்பதி என்றாலே நம் அனைவர்க்கும் நியாபகத்திற்கு வருவது கலியுகவரதனாக நம்மை காத்துக் கொண்டிருக்கும் அந்த ஏழுமலையான் கோவில் மட்டும் தான்! நாம் திருப்பதி சென்று பெருமாளை தரிசித்து விட்டு உடனே வீட்டிற்கு கிளம்பி விடாமல், திருப்பதியில் அமைந்து இருக்கும் அழகான சுற்றுலாத் தலங்களுக்கு ஒரு விசிட் அடிக்கலாமே!

திருப்பதியில் வாடகை பைக்குகள்
கோவா, புதுச்சேரி, மும்பை, சென்னை போன்ற இடங்களில் வாடகை பைக்குகள் கிடைப்பதைப் பற்றி நம் அறிந்திருப்போம். ஆனால் இப்போது திருப்பதியிலும் வாடகை பைக்குகள் வந்துவிட்டன. நீங்கள் உங்களுடைய ஆதார் கார்டை ஒப்படைத்து, டெபாசிட் தொகையை கட்டிய பின்னர் வாடகை பைக் உங்கள் வசமாகிவிடும். பைக்கை எடுத்துக் கொண்டு திருப்பதியின் அழகான சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வாருங்கள். நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!

நாகரவனம் ஜங்கிள் புக்
திருப்பதியில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம். திருப்பதி வனப்பகுதியை சுற்றி பார்க்க வேண்டும், திருப்பதியில் டிரெக்கிங் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால் கண்டிப்பாக இந்த இடத்திற்கு செல்லலாம்.
இங்கு ஸ்லேண்டர் லோரிஸ், இந்திய ராட்சத அணில், கோல்டன் கெக்கோ, சிறுத்தை, முள்ளம்பன்றி, சாம்பர் என பலதரப்பட்ட வன விலங்குகளையும் ரெட் சாண்டர், சைகாஸ் பெட்டோமி மற்றும் எண்டெடா போன்ற ராட்சத தாவரங்களையும் கண்டு ரசிக்கலாம். அது மட்டுமில்லாமல் அழகான அருவிகளும் உண்டு. நண்பர்களுடனும், குடும்பத்துடனும் கட்டாயம் கண்டுகளிக்க வேண்டிய இடம் இது.

தலகோனா நீர்வீழ்ச்சி
தலகோனா நீர்வீழ்ச்சியின் நீர் குணப்படுத்தும் சக்திகளால் செறிவூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு ட்ரெக்கிங், வனவிலங்குகளை பார்ப்பது, படகு சவாரி செய்வது, ஜங்கிள் சஃபாரி டிரைவ், கேனோப்பி வாக் செய்யவும் வசதிகள் உண்டு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவில் திருப்பதி-மதனப்பள்ளி நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள தலகோனா ஒரு மேம்பட்ட சுற்றுலா மையமாகும். இயற்கை அழகு மற்றும் பசுமையால் சூழப்பட்ட அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

மாமண்டூர் காடு
சென்னை - கடப்பா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாமண்டூர் வனப்பகுதி, அதிக மதிப்புமிக்க உள்ளூர் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. மாமண்டூர் மலைகளும் பள்ளத்தாக்குகளும் பல அழகிய இடங்கள், பருவகால் நீர்வீழ்ச்சிகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை அழகால் சூழப்பட்டுள்ளது.

ஆகாய கங்கா
திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஜாபலி ஆஞ்சநேய சுவாமி கோயில்
இந்த கோவில் திருமலையில் அமைந்துள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும். மேலும் ராமரும் சீதையும் ஆரண்ய வாசத்தில் இருக்கும் போது, அவர்கள் இங்கு ஹனுமானுடன் சில காலம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடம் ஆகாச கங்காவில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கபில தீர்த்தம்
இந்த கபில தீர்த்தம், அழிப்பவரான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கபிலேஸ்வர சுவாமி கோயிலாகும். இக்கோயில் கீழ் திருப்பதியில் உள்ள நந்தி சிலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள பல்வேறு சரணாலயங்களில் ஒன்றாக இது இருந்தாலும் கூட, கபில தீர்த்தம் அதன் இங்கு வரும் மக்களின் இதயங்களில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் அதனை சுற்றி உள்ள இயற்கை அழகு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

பாபவிநாசம்
பாபவிநாசத்தை சுற்றி உள்ள இயற்கை காட்சிகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். திருமலை கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஒரு அழகான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பாபவிநாசத்தின் புனித நீரில் நீராடுபவர்களின் பாவங்களை நீங்குவதாக நம்பப்படுகிறது.பாபநாசம் அருவிக்கு அருகில் அரசு அணை கட்டியுள்ளது. அருவியில் இருந்து வரும் தண்ணீர் அணையில் சேமிக்கப்பட்டு திருமலையில் தண்ணீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
அடுத்த முறை நீங்கள் திருப்பதிக்கு செல்லும் போது இந்த இடங்களை எல்லாம் சுற்றிப் பார்க்க மறக்காதீர்கள்!



Click it and Unblock the Notifications





