குடியரசு தினம் என்பது இந்தியா முழுமையாக சுதந்திரம் பெற்று, மக்களாட்சி அமைந்ததை உணர்த்தும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினம் விடுமுறை நாள் என்பதால் குழந்தைகள், அலுவலகம் செல்பவர்கள் என அனைவருக்கும் ஓய்வு நாளாக இருக்கும். இந்த நாளில் குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு சென்று வர பிளான் செய்வது ஏற்றதாக இருக்கும். குடியரசு தின விடுமுறையை ஜாலியாக கொண்டாட ஏற்ற இடங்களை தேர்வு செய்வதற்கு இதோ சில ஐடியாக்கள்...

கன்னியாகுமரி
தமிழகத்தின் தென்கோடி நகரமான கன்னியாகுமரி கடற்கரை, விடுமுறையை கொண்டாட மிகவும் ஏற்ற இடம். கன்னியாக்குமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, முக்கடல் சங்கமிக்கும் இடம் ஆகியவை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். சமீபத்தில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றிற்கு இடையே கடலுக்கு மேலே கண்ணாடி பாலம் தமிழக அரசால் அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. கடலின் மீது நடந்து செல்வது கண்டிப்பாக வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். வாய்ப்பு இருப்பவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தையும் கண்டு ரசித்து விட்டு வரலாம்.
வேளாங்கண்ணி
அமைதியும் தெய்வீகமும் இணைந்த தலம் என்றால் அது வேளாங்கண்ணி தான். உலகில் உள்ள பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்று. தேவாலயத்திற்கு வருபவர்கள் மட்டுமல்ல மனதிற்கு அமைதி, ஓய்வு தேடுபவர்களின் பெஸ்ட் சாய்ஸ் வேளாங்கண்ணி. கலைப் பொருட்கள், நினைவு பொருட்கள் என பல விதமான கைவினைப் பொருட்களை வாங்கி மகிழ, சுடசுட கடல் உணவுகளை சுவைக்க என உங்களின் விடுமுறை டிரிப்பை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி விட சரியான தேர்வாக வேளாங்கண்ணி இருக்கும்.
மகாபலிபுரம்
தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மிக பிரபலமான இடங்களில் ஒன்று மகாபலிபுரம் கடற்கரை. சுற்றுலாப் பயணிகள் ஒருமுறை வந்தால் கூட வாழ்நாள் அனுபவத்தை வழங்குவதாக மகாபலிபுரம் கடற்கரை மாற்றி விடும்.கடற்கரை பிரியர்களின் சிறந்த தேர்வாக இருக்கும் இடமான மகாபலிபுரத்தில் பார்த்து மகிழ சீஷெல் அருங்காட்சியகம், சிற்பக்கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. பூமியின் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் மாமல்லபுரம் கடற்கரை சமீப காலத்தில் அதிகம் வளர்ச்சி அடைந்த இடமாகவும் மாறி உள்ளது.
ஊட்டி
இயற்கை எழில் சூழ்ந்த, கண்ணுக்கு குளுமையான சுற்றுலா தலத்திற்கு செல்ல வேண்டும் என திட்டமிடுபவர்களின் சரியான தேர்வு ஊட்டியாகும். பனிச்சரிவு ஏரி என சொல்லப்படும் அவலாஞ்சி, தொட்டபெட்டா, அரசு தாவரவியல் பூங்கா, பைன் காடுகள், ஊட்டி ஏரி என சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு மலை பிரதேசத்தின் ஒட்டுமொத்த அழகையும் ரசித்து மகிழ ஏற்ற தலம் ஊட்டி ஆகும்.
மேகமலை
அதிகம் கூட்டம் இல்லாமல் அமைதியாக இயற்கை அழகை ரசிக்கவும், சினிமாக்களில் மட்டுமே கண்டு வியந்த அழகிய காட்சிகளை நேரடியாக கண்டு மகிழ பெஸ்ட் இடம் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை தான். அருவிகள், அணைகள், மலைகள், தேயிலை தோட்டங்கள் என ஒரு முழுமையான சுற்றுலா சென்ற நிறைவை, அதுவும் குறைந்த செலவில் தரும் இடம் மேகமலை தான். மலைவாசஸ்தலங்கள் என்று சொன்னாலே ஊட்டி, கொடைக்கானல் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் அதை தாண்டிய அமைதியை மேகமலையில் அனுபவிக்க முடியும்.
திருச்சி
திருச்சி என்றதும் ஸ்ரீரங்கம், சமயபுரம் போன்ற ஆன்மிக தலங்கள் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் கோவில்கள் இல்லாமல் திருச்சி மற்றும் அதனை சுற்றிலும், சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளன. கொள்ளிடம், கல்லணை, பட்டாம்பூச்சி பூங்கா என ஏராளமான இடங்கள் உள்ளன. காவேரி ஆற்றின் அழகை ரசிக்க மிகவும் ஏற்ற இடங்கள் இவை. குடும்பத்துடன் சென்று பாரம்பரிய பெருமைகளை கண்டு ரசிக்க வேண்டிய இடங்கள் இவை.
சிதம்பரம்
சிதம்பரத்தில் நடராஜர் கோவில் மட்டுமல்ல, சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. காட்டுக்குள் சென்று வந்த த்ரில்லிங் அனுபவத்தை தரும் பிச்சாவரம் காடுகள், கடற்கரையின் அழகுடன், வரலாற்று சிறப்புகளையும் கண்டு ரசிக்கும் படியான பூம்புகார் கடற்கரை என சிதம்பரத்தை சுற்றி ரசிக்க ரசிக்க திகட்டாத இடங்கள் பல உள்ளன. தமிழகத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். ஆரவாரம் இல்லாமல் அமைதியாக குடும்பத்துடன் சென்று விட்டு வர ஏற்ற இடம் இந்த கடற்கரை கிராமங்கள்.
ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஏற்காடு அருவி, ரோஜா தோட்டம், கிளியூர் அருகி, பீகு பார்க், அண்ணா பார்க், லேடீஸ் சீட், ஜெண்ட்ஸ் சீட் என பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். குறைந்த செலவில் அதிகமான இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த விட்டு வர ஏற்ற இடம் ஏற்காடாக தான் இருக்கும். அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சென்று வர பஸ் வசதியுடன், மிக குறுகிய தூரங்களிலேயே இருப்பதால் ஜாலியாக இருந்து விட்டு வர ஏற்ற இடம் ஏற்காடு தான்.



Click it and Unblock the Notifications






