சென்னையில் இருந்து வெறும் 2 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள புதுச்சேரி சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத் தலம் என்றே கூறலாம். ஆனால் நீங்கள் சென்னையிலிருந்து புதுவைக்கு ECR சாலை மார்க்கமாக பயணம் செய்தது உண்டா? இந்த பயணத்திற்கு கார் என்பது கட்டாயமல்ல, பைக் இருந்தாலே போதும்! வழி நெடுக பசுமையான மரங்கள், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடற்கரை, ஆங்காங்கே அழகான சுற்றுலாத் தலங்கள் என இந்த பைக் ரைடு உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கும். நீங்கள் இந்த பயணத்தை எப்போது மேற்கொள்ளலாம், வழியில் செய்ய வேண்டியவை, புதுச்சேரியில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட் என எல்லா தகவல்களும் இதோ!

ஏன் நாம் புதுச்சேரிக்கு செல்ல வேண்டும்
பிரஞ்சு கலாச்சாரம், பழங்கால கட்டிடக்கலை, வண்ணமயமான கடற்கரைகள், வித விதமான கஃபேக்கள், பப்கள், ஷாப்பிங் என சுதந்திரமான சுற்றுலாவை பயணிகளுக்கு வழங்குகிறது நம் புதுச்சேரி. நாளுக்கு நாள் புதுச்சேரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் துடிப்பான இடமாக புதுச்சேரி திகழ்கிறது. நாமும் இங்கு என்ன தான் இருக்கிறது என தெரிந்துக் கொள்ள வேண்டாமா. பைக்கில் சூப்பராக ஒரு ரைடு செல்லுவோம் வாருங்கள்!

நீலாங்கரை கடற்கரையில் சூரிய உதயம்
நீங்கள் பைக்கில் இருவராக ரைடு செல்ல பிளான் பண்ணுகிறீர்கள் என்றால், வார இறுதியில் இரண்டு நாட்கள் புதுவையில் தங்கி இருப்பது போன்று பிளான் பண்ணுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தையும் பேக்பேக்கில் (backbag) வைத்து தயார் செய்து விடுங்கள். அதிகாலையில் ஒரு 5 மணிக்கு நீங்கள் கிளம்பினால் திருவான்மியூர் அல்லது நீலாங்கரை கடற்கரையில் சூரிய உதயம் காணுங்கள். இந்த இரு கடற்கரைகளுமே காலை நேரத்தில் கூட்டம் எதுவுமின்றி மிகவும் நிசப்தமாக இருப்பதால், உங்களுக்கு ஒரு அமைதியான சூரிய விடியல் கிடைக்கும். அதை ரசித்துவிட்டு சூடாக தேநீர் பருகி உங்கள் பயணத்தை தொடருங்கள்.

வழியில் நீங்கள் பார்க்க வேண்டியவை
சென்னைக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே நிறைய அழகான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மெட்ராஸ் முதலை பூங்கா, தக்ஷின சித்ரா ஹெரிடேஜ் மியூசியம், முட்டுக்காடு போட் ஹவுஸ் ஆகியவை நீங்கள் பார்ப்பதற்கு ஏற்றது. ஆனால் நீங்கள் மிகவும் காலையில் செல்வதால் இவையாவும் திறந்து இருப்பது கடினம். ஆகவே நீங்கள் நேராக மகாபலிபுரத்திற்கு சென்றிடலாம். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் ஒன்றான மகாபலிபுரம் காலை வேலையில் சுற்றிப் பார்ப்பதற்கு அவ்வளவு அமைதியாக அழகாக இருக்கிறது.

மகாபலிபுரத்தில் நிறுத்தம்
அற்புதமான ரதங்கள், மண்டபங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நுணுக்கமான செதுக்கப்பட்ட சிற்பங்களை நீங்கள் இங்கே காணலாம். கிருஷ்ணா பட்டர்பால், கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம், ஆர்ட் கேலரி என்று இங்கு சுற்றி பார்க்க ஏராளம் உள்ளன. ஆனால் நம் இலக்கு புதுச்சேரி தானே. முடிந்த வரை குறைந்த நேரத்தை செலவு செய்து விட்டு, மகாபலிபுரத்தில் காலை உணவு அருந்திவிட்டு உங்கள் பயணத்தை தொடரலாம்.

வழியில் இடைக்கழிநாடு ஆலம்பரை கோட்டை ஒரு விசிட்
மகாபலிபுரத்தில் இருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்திலேயே நீங்கள் இடைக்கழிநாடு என்ற ஊரை அடைவீர்கள். அங்கிருந்து கிழக்கில் உள்ளே சென்றால், அந்த ஆலம்பரை கோட்டையின் சிதிலமடைந்த பகுதிகளும் அதனை சுற்றியுள்ள அழகிய சிறு சிறு ஓடைகளும் உங்களை வரவேற்கும். இந்த இடம் நிச்சயம் போட்டோ ஷூட்டுக்கு ஏற்றது. அங்கிருந்து கிளம்பினால் அடுத்த நிறுத்தம், மதிய சாப்பாட்டிற்கு புதுச்சேரி தான்.

புதுச்சேரியில் உள்ள அழகான சுற்றுலாத் தலங்கள்
அழகிய கடற்கரைகள் - ராக் பீச், செரினிட்டி பீச், ஈடன் பீச், பாரடைஸ் பீச், போதி பீச், ஆரோவில் பீச் ஆகிய வண்ணமயமான கடற்கரைகளில் சூரிய உதயத்தை ரசித்திடுங்கள். மாலை நேரத்தில் கடற்கரையோரம் அமைதியாக நடைபயணம் செய்யுங்கள்.
கோவில்கள் - உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், காசிக்கு இணையான சக்தி வாய்ந்த திருக்காஞ்சி கோவில், இயற்கை சூழலில் அமைந்திருக்கும் தென்னம்பாக்கம் அழகர் கோவில் ஆகியவற்றிற்கு சென்று வாருங்கள்.
ஆரோவில் - புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முதன்மையானது இந்த ஆரோவில் என்று சொல்லலாம். வழி முழுக்க மரங்கள், பலவிதமான தனித்துவமான கஃபேக்கள், குளோப், ஆரோவில் மியூசியம் என இந்த இடம் ஒரு தனி உணர்வை நமக்கு வழங்குகிறது.
வித விதமான உணவுகள் - புதுச்சேரி பல தரப்பட்ட மக்களும் வந்து செல்லும் இடமாக அந்த காலத்தில் இருந்தே இருப்பதால், இத்தாலி, பிரெஞ்சு, சைனீஸ், ஐரோப்பிய, வட இந்திய, தென் இந்திய உணவுகளை வழங்கும் பல ரிசார்ட்டுகளை உள்ளடக்கியது. விலையும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. சுவைத்து மகிழுங்கள்.
ஷாப்பிங் - மணக்குள விநாயகர் கோவில் அருகே, மிஷன் ஸ்ட்ரீட் அருகே, நேரு வீதிக்குள் என பல இடங்களில் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம். வித விதமான உடைகள், வாசனை திரவியங்கள், அழகு பொருட்கள், பரிசு பொருட்கள் ஆகியவை மலிவு விலையில் கிடைக்கின்றன.
பல அழகிய தேவாலயங்கள் மற்றும் மியூசியத்தை பார்வையிடுங்கள், இரவில் உயிர்ப்போடு இருக்கும் பல கஃபேக்கள், பப்கள் என உங்கள் பொழுதை போக்குங்கள். இப்படி புதுவையின் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கு இரண்டு நாட்கள் போது, இரண்டாவது நாள் மாலையில் நீங்கள் சென்னைக்கு புறப்படலாம்!



Click it and Unblock the Notifications





