ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள செவ்வாய் தோஷத்தின் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவது திருமண காரியமே. திருமண வயதைக் கடந்தும் பலபேர் திருமண யோகமின்றி இருப்பதை பார்த்திருப்போம். திருமணம் மட்டுமின்றி வாகன யோகம், சுபகாரியம் என பல விசயங்களில் இத்தோஷம் தடங்களை விளைவிக்கும். செவ்வாய் தோஷமாமே, கல்யாணம் நடக்குமா ?, ஏதாவது பரிகாரம் செய்யக்கூடாதா என நம்மைச் சுற்றியிருப்போர் பேச வேதனையின் உச்சமாகவே இருக்கும். இப்படி செவ்வாய் தோஷத்தால பல வேதனைகளை அடைந்துகொண்டிருப்போர் இந்த பரிகாரத் தலங்களுக்கு சென்று பாருங்கள். பின், உங்கள் காட்டில் மழை தான்.
சங்கமேஸ்வரர் கோவில், பவானி
ஈரோடு மாவட்டம், பவானியில் அமைந்துள்ளது சங்கமேஷ்வரர் கோவில். இத்தலத்தில் சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மையார் அருள்பாலிக்கின்றனர். தமிழகத்தில் சிறப்புபெற்ற பரிகாரத் தலங்களில் சங்கமேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். குறிப்பாக, இத்தலத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்யப்படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், இத்தல இறைவனை வழிபட்டு சங்கமேஸ்வரர் கோவிலிலேயே தனி சன்னதியில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்து வந்தால் விரைவில் சுபகாரியம் அரங்கேறும்.
தல சிறப்பு
விஸ்வாமித்திரர் என்னும் முனவர் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்றும் இத்தல இறைவன் வணங்கப்படுகிறார். இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.
அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்
மயிலாடுதுறைக்கு அருகே உள்ள திருக்கடையூரில் அமைந்துள்ளது அமிர்தகடேஸ்வரர் ஆலயம். இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணமாக திகழ்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றுள்ளது, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலமாக திகழ்கிறது. பிரதோஷ தினங்களில் இத்தலத்திற்கு வந்து மூலவருக்கு மாலை அணிவித்து வழிபட்டால் கூடிய விரைவில் தோஷங்கள் நீங்கும் என்பது தலநம்பிகைக்யாக உள்ளது.
பெயர்க் காரணம்
முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர்ந்தளிக்க முயன்ற போது விநாயகரை வழிபாடாத காரணத்தினால் சினம் கொண்ட அவர் இத்திருக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை ஒளித்துவைத்தார். அக்குடமே பிற்காலத்தில் இத்தலத்தில் சிவலிங்கமாக உருவானதால் அமிர்தகடேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக வரலாறு.
வீரபத்திரர் திருக்கோவில், அனுமந்தபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், அனுமந்தபுரத்தில் அமைந்துள்ள அகோர வீரபத்திரர் திருக்கோவில் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. சிவபெருமானின் மூத்த புதல்வரான வீரபத்திரர் திருத்தலமான இங்கு பில்லி சூனியம், தோஷங்கள் போன்றவற்றிற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. வளர்பிரை நாட்களில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தல மூலவரை மனதார வேண்டிச் செல்ல நல்ல பலன் கிடைக்கும்.
தல அமைப்பு
வீரபத்திரர் ஆலயம் கிழக்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ளது. கோவிலின் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் இரு துவார பாலகர்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்க அடுத்துள்ள கருவறையின் முகப்பில் இடது புறம் விநாயகரும் வலது புறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே கருவறையில் இறைவன் அருள்மிகு வீரபத்திரசுவாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீகந்த சுவாமி ஆலயம், திருப்போரூர்
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஸ்ரீ கந்த சுவாமி திருக்கோவிலுக்காக பரவலாக அறியப்படுகிறது. சுமார் 700 வருடங்கள் பழைமையான இத்தலத்தில் அருள்பாலிக்கும் வள்ளி தெய்வானைக்கு தனித்தனியே சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது தல சறிப்பாகும். திருப்போரூர் ஆலயத்தில், நவகிரகங்களுக்கு என தனி சன்னதி இல்லை. கந்த சுவாமியைத் தரிசிப்பதன் மூலமே நவகிரங்களையும் வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
திருப்போரூர் ஆலயச்சிறப்பு
அருணகிரிநாதர் இந்தத் தலத்திற்கு வந்து, முருகப் பெருமானைத் தரிசித்து திருப்புகழ் பாடியுள்ளார். தந்தை ஈசனைப் போலவே முருகன் இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினார். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் இல்லை. மாறாக, ஸ்ரீசுப்ரமணியர் விக்ரமம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விக்ரமத்திற்கு மட்டும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
கல்யாண கந்தசுவாமி, மடிப்பாக்கம்
வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் முருகன் அருள்புரியும் தலம் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள கல்யாண கந்தசுவாமி கோவிலாகும். ஒவ்வொரு கார்த்திகை நட்சத்திர தினத்தன்றும் சிறப்பு அலங்காரங்களுடன் வழிபாடுகள் நடத்தப்படும். கருவறையின் தெற்கில் கருணை கணபதி, வடக்கில் செவ்வாய் பகவான் இருவரும் துவார பாலகர்களைப் போல வீற்றிருக்கிறார்கள். கிருத்திகை, பிரதோஷம் உள்ளிட்ட விசேன நாட்களில் இத்தலம் வந்த வழிபட்டால் தோஷங்கள் விலகும்.
செவ்வாய் வழிபாடு
அங்காரகன் எனும் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகப் பெருமான். இத்தலத்தில் அங்காரகனுக்கு தில பத்ம தானம் எனும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. திலம் என்றால் எள். பத்மம் என்றால் தாமரை. இத்தல அங்காரகனின் பாதங்களில் செவ்வாய்க் கிழமையன்று எள்ளையும் தாமரையையும் சமர்ப்பித்து மனமுருக பிரார்த்தனை செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அகஸ்தீஸ்வரர் கோவில், புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் இருந்து 69 கிலோ மீட்டர் தொலைவில் தளிஞ்சி என்னும் பகுதியில் அமைந்துள்ளது அகஸ்தீஸ்வரர் திருக்கோவில். இத்தலத்தில் மூலவர் அகஸ்தீஸ்வரர், அம்மையார் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சுமார் 500 ஆடுகள் பழமையான இத்தலத்தில் தட்சிணா மூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் துர்க்கையம்மனும், கிழக்கில் ஜேஷ்டா தேவியும் வீற்றுள்ளனர்.
தலஅமைப்பு
கோவிலின் நுழைந்ததும் முதலில் தென்படுவது அகன்ற பிரகாரம். அடுத்தடுத்து நாகர், நந்தி, பலி பீடம் இவைகளைக் கடந்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டப நுழை வாசலில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் வள்ளி- தெய்வானையுடன் முருகனும் காட்சியளிக்கின்றனர். மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி அகிலாண்டேஸ்வரி அம்மனின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் முகத்துடன் வீற்றுள்ளார்.
கைலாசநாதர் ஆலயம், கோடக நல்லூர்
திருநெல்வேலியில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் கோடக நல்லூர் பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் திருத்தலம் செவ்வாய் தோஷ பரிகாரத் தலங்களில் புகழ்பெற்றதாகும். குறிப்பாக, அம்மாவாசை தினங்கள் தோறும் இத்தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் இத்தலம் வந்து இறைவனை வேண்டி துளசிஇலை மாலை இடுவதன் மூலம் தோஷம் விலகி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில் நடைபெறும் நித்ய அக்னி வழிபாட்டில் பங்கேற்பதன் மூலம் நிவர்த்தி பெறலாம்.