உலகத்தில் வேறு எங்குமே பார்க்க முடியாத ஒரு அரிய காட்சி தான் இது! சிவபெருமான் சயன கோலத்தில் இங்கு பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த கோயிலில் சிவபெருமான் பார்வதி தேவியின் மடியில் படுத்து ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளார். பிரம்ம தேவரே சிவனின் ஆதியும் அந்தமும் காண முயற்சி செய்து தோற்று போனார். ஆனால் நாம் இந்த கோயிலுக்கு சென்றால் சிவனை தலை முதல் கால் வரை தரிசிக்கலாம். அதுமட்டுமல்ல, இந்த கோயிலுக்கு சென்று மனமுருகி பிரார்த்தனை செய்யும் போது உங்களின் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைப்பதாக பக்த கோடிகள் கூறுகின்றனர்! இந்த சக்தி வாய்ந்த ஸ்தலம் சென்னையிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் தான் அமைந்துள்ளது!
சயன கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான்
சிவபெருமானுக்கு இந்தியாவில் பல வித திருத்தலங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சிறப்பு வாய்ந்த திருத்தலங்களில் ஒன்று தான் இந்த சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வரர் கோயில். தேவலோகத்தில் அமிர்தம் கடையும்போது வெளிவந்த ஆலகால விஷத்தை தேவர்களை காக்கும் பொருட்டு சிவபெருமான் குடித்தார். விஷத்தை அருந்தியதால் ஏற்பட்ட வீரியத்தினால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் அம்பாளின் மடியில் தலை வைத்தவாறு சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.
முதல் பிரதோஷ வழிபாடு தோன்றியது இந்த இடத்தில் தான்
இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.வழக்கமான விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் சன்னதியை போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான்.

சுருட்டப்பள்ளி என்கிற பெயர் வந்த காரணம்
சர்வேஸ்வரன் சயனித்த ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரராக, திருக்கோல காட்சி தரும் புண்ணியம் பெற்ற ஸ்தலம் தான் சுருட்டப்பள்ளி. விஷத்தை சாப்பிட்ட பகவான் சுருண்டு மயக்க நிலையில் படுத்ததால்தான் சுருட்டப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தேவர்கள் வாசம் செய்யும் ஊர் ஆகையால் சுருளு பள்ளி, சுருளு: தேவர்கள் பள்ளி, ஊர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
தஞ்சம் அடைந்த தேவர்கள்
பல நாட்கள், கயிறாக விளங்கிய வாசுகி பாம்பு கொடிய வியத்தை கக்க... அந்த விஷம் கடலோடு கலந்து காலகூட விஷமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் பயங்கரமாக துரத்தியது. பயந்து நடுங்கிய தேவர்களும், அசுரர்களும் தங்களை காக்க வேண்டி கைலாச நாதரான ஸ்ரீபரமேஸ்வரனின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்து தஞ்சம் அடைந்தனர்.

ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான்
பரமேஸ்வரரின் ஆணைப்படி நந்தி தேவரும், சுந்தரரரும் எடுத்து வர ஒரு நாவல் பழம் போல அந்த காலகூட விஷத்தை உருட்டி ஈசன் உட்கொண்டார். பரமேஸ்வரன் அதை உட்கொண்டால் அவன் உள்ளே இருக்கும் பல கோடி உயிர்களும் அழிந்து விடும் என்பதை உணர்ந்த அன்னை பராசக்தி தன் தளிர்க் கரங்களினால் ஈசனின் கண்டத்தைப் பற்றி விஷத்தை அங்கேயே தங்கச் செய்கிறாள்.
தம்பதி சமேதராக காட்சி தரும் தெய்வங்கள்
நாம் கோயிலின் நுழைவு பகுதியை அடைந்தவுடன் நம்மை 5 அடி உயரம் கொண்ட நந்தி பெருமான் நம்மை வரவேற்கிறார் . பின்பு நாம் 5 நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் நம்மை சங்கநிதி வசுந்தராவுடனும், பத்மநிதி வசுமதியுடனும் காட்சி தருகிறார்கள். துவாரகா பாலகர்கள் இங்கு கிடையாது . உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் அன்னை மரகதாம்பிகை சிம்ம வாகினியாக காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தில் வலது பக்கத்தில் கற்பக விருட்சம், இடது பக்கத்தில் காமதேனு பசு காணப்படுகிறது. இந்த கோயிலில் நீங்கள் அனைத்து சுவாமிகளையும் அவர்களது ஜோடியுடன் தரிசிக்கலாம்.

வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வாருங்கள்
சென்னையில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள ஊத்துக்கோட்டை அருகில் 3 கிமீ தொலைவில் உள்ளது . கோயம்பேட்டில் இருந்து புத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் இக்கோயிலுக்கு செல்லும். காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சிவபெருமான் சயன கோலத்தில் காட்சி தரும் இந்த அரிய காட்சியை நாம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துவிட வேண்டும்!



Click it and Unblock the Notifications





