கேரளாவில் இருக்கும் சிவன் கோவில்களிலேயே மிகவும் பிரபலமானது திருச்சூரில் இருக்கும் பகவன் ஸ்ரீ வடக்குநாதர் ஆலயமாகும். இது விஷ்ணுவின் அவதாரமான பகவான் பரசுராமரால் உருவாக்கப்பட்ட முதல் ஆலயமாகும், அவர் இது போன்று பல ஆலயங்களை எழுப்பியுள்ளார். உலகப்புகழ்பெற்ற திருச்சூர் பூரம் இந்த கோவிலில் தான் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. உலகிலேயே 15 ஆவது மிகப்பெரிய கோவிலான இந்த வடக்குநாதர் ஆலயம் 4000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
பனி லிங்கம், சோடச லிங்கம், மண் லிங்கம் போல இங்கு குடி கொண்டிருப்பது தனித்துவமான நெய் லிங்கமாகும். கோடை வெப்பமோ, தீப தூப ஆராதனைகளால் ஏற்படும் வெப்பமோ நெய் லிங்கத்தை ஒரு போதும் உருக வைத்ததில்லை. பாறை போல் கெட்டியாக இருக்கும் நெய் லிங்கத்தில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ வடக்குநாதர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும் இங்கு வந்து வேண்டி சென்றால் நடைபெறாத காரியம் ஒன்றுமில்லை என்று கூறப்படுகிறது. பல சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்கு நாம் செல்வது எப்படி என்று பார்ப்போம்!

பகவான் பரசுராமரால் எழுப்பட்ட முதல் சிவாலயம்
கேரள மாநிலம், திருச்சூரில் வடக்குநாதர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், 16 வகையான பேறுகளை அடைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறலாம் என்பது ஐதீகம். தன் தந்தையை அழித்த மன்னர் குலத்தை கூண்டோடு அழித்த பரசுராமர் தான் செய்த பாவத்தை போக்க பல சிவ ஆலயங்களை எழுப்பினார், அவர் எழுப்பிய முதல் சிவாலயம் இதுவே ஆகும். புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைத்தார்.
சிவனின் கோபத்திற்கு ஆளான சிம்மோதரன்
இறைவனின் சிவ கணங்களுள் ஒருவரான சிம்மோதரனிடம் பூவுலகில் தாம் அமர்வதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து வரும்படி சிவபெருமான் கட்டளையிட்டார்.அதன்படி இன்றைய திருச்சூர் வந்த சிம்மோதரன் இங்கே பரசுராமர் சிவாலயம் அமைக்கும் இடம் வந்ததும் மனதிற்கு பிடித்துவிட்டது. அதனால் அங்கேயே மெய்மறந்து தங்கிவிட்டார். திரும்பி வராத அவரைக் கண்டறிந்த கோபங்கொண்ட சிவபெருமான் தன் காலால் சிம்மோதரனை எட்டி உதைத்தார். அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளிமயமாகி நின்றார். கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை நெய் கொண்டு குளிர்வித்தார்.

4000 ஆண்டுகளாக உருகாத நெய் லிங்கம்
பரசுராமர் ஊற்றிய நெய் முழுவதும் இறைவனின் மேலே பட்டு இறைவன் குளிர்ந்து அங்கேயே நெய் லிங்கமாக மாறினார். 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் கோவில் லிங்கத்தைப் 'பனிலிங்கம்' என்று அழைப்பது போல், இந்தக் கோவில் இறைவனை 'நெய்லிங்கம்' என்று சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர். கோடை வெயிலின் தாக்காமோ, மூலவருக்கு காண்பிக்கப்படும் தீபங்களின் வெப்பமோ நெய்யை ஒருபோதும் உருக்கியது இல்லை. 4,000 ஆண்டுகள் பழமையான கோவில் என்று சொல்லப்படும் இக்கோவிலில் நெய் லிங்கம் எப்போதும் உருகாமல் பாறை போல் கெட்டியாக உள்ளது. இருப்பினும், இந்த நெய் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகப் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
தீராத நோய் தீர்க்கும் வடக்குநாதர்
மூலவருக்கு நெய் கொண்டுதான் அபிஷேகம் செய்கின்றனர். சில வேளைகளில் பன்னீர், சந்தனம் அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. மூலவருக்கு சாற்றப்படும் நெய் கிடைப்பது மிகவும் அரிது, உடல் உபாதைகள், நீங்காத நோய் கொண்டவர்கள் வடக்குநாதருக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய்யை சிறிது சாப்பிட்டால் போதும். எப்படிப்பட்ட நோயும் சரியாகிய விடுகிறது என்பது ஐதீகம். அதோடு குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.
மதுரை மீனாட்சி கோவிலை ஒத்த அமைப்பு
திருச்சூர் வடக்குநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போன்றே நான்கு புறமும் பெரிய கோபுரத்துடனான வாசல்களைக் கொண்டிருக்கிறது. வட்ட வடிவத்திலான கருவறையில், சிவபெருமான் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார். கோவில் வளாகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ராமர், சங்கரநாராயணர், கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வழிபாடு நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பாகும்.

உலகப்புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா
வடக்குநாதர் கோவில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் 'திருச்சூர் பூரம் திருவிழா' நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழாவின் போது, இந்த ஊரிலுள்ள நான்கு அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் யானைகள், அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தத் திருவிழாவில் யானைகள் அலங்காரம் மற்றும் வண்ணமயமான முத்துக்குடைகள் ஆகியவற்றைக் காண்பதற்காக கேரளா, தமிழகம் மட்டுமில்லாமல், கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்குநாதர் ஆலயத்திற்கு எப்படி செல்வது
சென்னையிலிருந்து திருச்சூருக்கு பேருந்துகளும் ரயில்களும் வழக்கமான முறையில் இயக்கப்படுகின்றன. திருச்சூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தேக்கின்காடு எனப்படும் சிறிய குன்றுப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து பல நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீங்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தியோ அல்லது டாக்ஸிகள் மூலமாகவோ கோவிலை அடையலாம். இத்தனை சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நீங்கள் செல்லாமல் இருக்கலாமா?



Click it and Unblock the Notifications





