மகாவிஷ்ணு நித்யவாசம் செய்யும் கோவில்களாக ஆழ்வார்களால் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் போற்றி பாடப்பட்ட தலங்களை திவ்யதேசங்கள் என குறிப்பிடுகிறோம். மொத்தம் 108 திவ்ய தேசங்கள் உள்ளன. இவற்றில் 106 பூலோகத்திலும், மீதமுள்ள 2 விண்ணுலகிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த 108 திவ்யதேசங்களையும் தரிசனம் செய்பவர்களுக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூமியில் 106 திவ்யதேச கோவில்களில் 14 காஞ்சிபுரம் நகரத்தில் மட்டும் உள்ளன. ஒன்று காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூரு செல்லும் வழியிலும் அமைந்துள்ளது. இந்த 15 கோவில்களையும் ஒரே நாளில் சுற்றி பார்ப்பதற்கான டூர் பிளானை எப்படி போடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரம் திவ்யதேசங்கள்
1. திருக்காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
2. அஷ்டபுயகரம் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
3. திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில்
4. திருத்தங்கா ஸ்ரீ தீப பிரகாசர் பெருமாள் கோவில்
5. திருவெள்ளுக்கை ஸ்ரீ அழகிய சிங்கர் பெருமாள் கோவில்
6. திருபரமேஸ்வர விண்ணகரம் - ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில்
7. திருஊரகம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில்
8. திருநீரகம் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில்
9. திருக்காரகம் ஸ்ரீ கருணாகர பெருமாள் கோவில்
10. திருக்கர்வண்ணம் ஸ்ரீ திருக்கார்வண்ணர் கோவில்
11. திருக்கள்வனூர் ஸ்ரீ ஆதி வராக பெருமாள் கோவில்
12. திருப்பாடகம் ஸ்ரீ பாண்டவ தூதர் பெருமாள்
13. திருபவளவண்ணம் ஸ்ரீ பவள வண்ணர் கோவில்
14. திருநிலாதிங்கள்துண்டம் ஸ்ரீ நிலாதிங்கள் துண்டன் பெருமாள் கோவில்
15. திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோவில்
எப்படி செல்வது?
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்வதற்கு ரயில் வசதி உள்ளது. கிண்டி-திருமாள்பபூர் வழியாக காஞ்சிபுரத்தின் கிழக்கு பகுதியை அடைந்து விடலாம். சுமார் 2 மணி நேர பயணத்திற்கு பிறகு காஞ்சிபுரத்தை அடைந்து விடலாம். அங்கிருந்து ஒரு ஆட்டோவை நாள் வாடகைக்கு எடுத்துக் கொண்டால், 15 கோவில்களுக்கும் சென்று விட்டு வந்து விடலாம். சென்னையில் இருந்து காரில் செல்வதாக இருந்தால் இன்னும் அதிகமாகவே நேரம் கிடைக்கும்.
எப்போது செல்லலாம்?
வார இறுதி நாட்களில் சென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் வார நாட்களில் செல்ல திட்டமிடுவது சரியாக இருக்கும். காலை மற்றும் மாலை நேரங்களிலேயே இந்த 15 கோவில்களும் திறந்திருக்கும் என்பதால் முடிந்த அளவிற்கு காலையில் சீக்கிரமே சென்றால் கூட்டம் அதிகம் இல்லாமல் பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரலாம். குறிப்பாக வரதராஜ பெருமாள் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கடைசியாக அங்கு செல்வதால் மற்ற கோவில்களுக்கு செல்வதற்கும், நேரம் வீணாகாமல் இருப்பதற்கும் ஏற்றதாக இருக்கும்.
எந்த கோவிலுக்கு முதலில் செல்லலாம் ?
* முதலில் 13வது கோவிலாக இருக்கும் ஸ்ரீ பவள வண்ணர் கோவிலுக்கு செல்லலாம். இதற்கு மிக அருகிலேயே பச்சை வண்ணர் ஆலயமும் உள்ளது. இது திவ்யதேச கோவில் இல்லை என்றாலும் இங்கு பார்க்க வேண்டிய பிரபலமான பெருமாள் கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த இரண்டு கோவில்களையும் ஒன்றை விட்டு, மற்றொன்றை பார்க்க முடியாது.
* அடுத்ததாக 14வது கோவிலான நிலதிங்கள் துண்டன் பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். இந்த கோவில் காஞ்சிபுரத்தின் மிக முக்கியமான கோவிலான ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் தான் அமைந்துள்ளது. அதனால் சிவன், பெருமாள் இருவரையும் ஒரே இடத்தில் தரிசித்து விடலாம்.
* மூன்றாவதாக 12 வது கோவிலான ஸ்ரீ பாண்டவ தூதர் பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு, நான்காவதாக 11வது கோவிலான ஆதி வராக பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். இந்த கோவில் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்குள் தான் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் வந்து விட்டு அன்னை காமாட்சியை பார்க்கா விட்டால் எப்படி? பெருமாளுடன், அன்னை காமாட்சியையும் தரிசித்து விடலாம்.
* ஐந்தாவதாக 7வது கோவிலான உலகளந்த பெருமாள் கோவிலுக்கும், அங்கிருந்து 8வது கோவிலான ஜெகதீஸ்வரர் கோவில், 9வது கோவிலான கருணாகர பெருமாள், 10 வது கோவிலான திருகார்வண்ணர் கோவிலையும் சரிசிக்கலாம். இந்த மூன்று கோவில்களுமே உலகளந்த பெருமாள் கோவில் வளாகத்திலேயே அமைந்துள்ளது.
* பிறகு 6வது கோவிலான வைகுண்ட பெருமாளை தரிசனம் செய்து வைத்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டன் ஆசிரமத்தை தரிசித்து விட்டு அங்கு சற்று ஓய்வும் எடுக்கலாம். பகல் 3 மணிக்குள்ளாகவே இத்தனை கோவில்களையும் பார்த்து விடலாம்.
* மாலையில் கோவில் திறந்ததும் 4வது கோவிலான ஸ்ரீ தீப பிரகாசர் பெருமாள் கோவிலுக்கும், 5வது கோவிலான அழகிய சிங்கர் பெருமாள் கோவில், 2வது கோவிலான ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில், 3வது கோவிலான சென்ன வண்ணம் செய்த பெருமாள் கோவிலை தரிசித்து விட்டு, முதல் கோவிலான வரதராஜ பெருமாள் கோவிலை தரிசிக்க செல்லலாம்.
* அங்கிருந்து பெங்களூரு செல்லும் சாலையில்12 கி.மீ., பயணம் செய்தால் 15வது கோவிலான திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்து விடலாம்.
காஞ்சிபுரம் சென்று திவ்யதேச தலங்களை தரிசனம் செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications






