தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 2022-2023 நிதியாண்டில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்களுக்கான கட்டணமில்லா சேவையின் மூலம் பெரும்பாலான பொதுமக்கள் பயனடைந்து வரும் நிலையில் இந்த தகவல் பொதுமக்களை சற்று கலக்கத்திற்கு ஆளாக்கியுள்ளது. போக்குவரத்துக் கழகத்தின் நஷ்டம் காரணமாக இந்த இலவச சேவைகள் வாபஸ் வாங்கப்படுமா?

தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம்
1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் ஏறக்குறைய 20,000 அதிகமான பேருந்துகள் தினமும் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினசரி 1.70 கோடி பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிதியாண்டில் ரூ.4,978 நஷ்டம்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து ரூட்களிலும் பேருந்துகள் நன்றாகவே 2022 - 2023 அதாவது இந்த நிதியாண்டு முழுவதும் ஓடியுள்ளது. அதன் மூலம், இந்த நிதியாண்டில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.12,000 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. ஆனால் இந்த வருடத்தில் ஆன செலவுகள் ரூ.16,985 ஆகும். இதன் மூலம் மாதத்திற்கு ரூ. 452 கோடி என பனிரெண்டு மாதங்களுக்கு மொத்தமாக ரூ.4,978 கோடி நஷ்டமாகி உள்ளது.

குறையும் நஷ்ட விகிதம்
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் கொரானா தொற்றுக்கு முந்தைய 2019 20-ம் நிதியாண்டில் ரூ.5230 கோடியும், 2020-21-ம் நிதியாண்டில் ரூ.8328 கோடியும், 2021 - 22ம் நிதியாண்டில் ரூ.6622 கோடியும் நஷ்டமடைந்துள்ளது. ஆனால் படிப்படியாக நஷ்டம் குறைந்து வருகிறது. முந்தைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த நஷ்டமானது குறைவாகவே உள்ளது. இனி வரும் காலங்களில் இது இன்னும் குறையலாம்.

இலவச சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை
1,000 புதிய பேருந்துகள் வாங்க ஏற்கனவே ரூ.420 கோடி ஒதுக்கபட்டுள்ளது, 100 மின்சார பேருந்துகளும் வாங்கவும் டெண்டர் விடப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகம் இந்த வருடம் நஷ்டமடைந்திருந்தாலும் கூட, பேருந்து கட்டணத்திலும், இலவச சேவைகளிலும் எந்த மாற்றமும் இருக்காது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

50% கட்டணச் சலுகை
SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6-வது முறை பயணத்தில் 50% கட்டணச் சலுகை கொடுக்கப்படுமாம். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் எனவும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு 4 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரவேற்க்கத்தக்க விஷயம் தானே!



Click it and Unblock the Notifications





