உலகின் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளையும், ஆன்மிக அன்பர்களையும் தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் இடங்கள் என்றால் அவை தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்கள் தான். அழகு, மன நிம்மதி, நிறைவு, மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க ஏற்ற இடங்களாக இருப்பவை கோவில்கள். தமிழகத்தில் லட்சக்கணக்கான கோவில்கள் இருந்தாலும் புகழ்பெற்ற, பழமையான கோவில்களுக்கு செல்லும் போது கிடைக்கும் ஆனந்தமே தனி தான். அப்படி ஒரு அற்புதமான அனுபவத்தையும், உணர்வையும் தரக் கூடிய தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களை வெறும் 10 நாட்களில் எந்த முறையில் சென்றால் சுற்றி பார்க்கலாம் என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.

முதல் நாள் :
சென்னையில் நம்முடைய ஆன்மிக பயணத்தை துவங்குவது சிறப்பாக இருக்கும். இங்கு அனைவரையும் ஈர்க்கும் கபாலீஸ்வரர் கோவில், காளிகாம்பாள் கோவில், வடபழனி முருகன் கோவில், அஷ்டலட்சுமி கோவில் ஆகியவற்றுடன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை தரிசித்து விடலாம்.
இரண்டாம் நாள் :
ஆயிரம் கோவில்களின் நகரமான காஞ்சிபுரம் சென்றால் ஏகாம்பரேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றை பார்த்து விட்டு, காஞ்சிபுரத்திற்கு பெயர் பெற்ற பட்டு புடவைகளையும் ஒரு பார்வை பார்த்து, வாங்கி விட்டு வரலாம்.
மூன்றாம் நாள் :
மூன்றாம் நாளில் புகழ்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க இடமான மகாபலிபுரத்திற்கு சென்று கடற்கரை கோவில்களை தரிசித்து விட்டு, கிருஷ்ணர் வெண்ணை உருண்டை, பஞ்ச ரதங்கள் ஆகியவற்றையும் தரிசித்து விட்டு, கடற்கரையையும் ரசித்து விட்டு வரலாம்.
நான்காம் நாள் :
தமிழகத்தின் மற்றொரு கோவில் நகரமான கும்பகோணத்திற்கு சென்றால் நவகிரக கோவில்களை தரிசித்து விடலாம். அதோடு வைத்தீஸ்வரன் கோவில் ஐராவதேஸ்வரர் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில், உப்பிலியப்பன் கோவில் ஆகியவற்றை தரிசித்து விட்டு இரவு தஞ்சாவூரில் தங்கலாம்.
ஐந்தாம் நாள் :
சோழர்களின் தலைநகரமான தஞ்சாவூரில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலை சுற்றி பார்க்க ஒரு நாள் வேண்டும். உலகின் மிக உயரமான கோவில்களில் ஒன்றாகவும், உலகின் முதல் முழுமையான கிரானைட் கற்களால் ஆனதுமான இக்கோவிலின் அழகையும், சிற்பங்களையும் கண்டு ரசிக்காதவர்களும், வியக்காதவர்களும் இருக்க முடியாது.
ஆறாம் நாள் :
புராதான நகரங்களில் ஒன்றான திருச்சியை அடைந்தால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், மலைக்கோட்டை கோவில்கள், காவிரி ஆறு ஆகியவற்றை கண்டு ரசித்து விட்டு வரலாம்.
ஏழாம் நாள் :
நாட்டில் உள்ள புனித நகரங்களில் ஒன்றான ராமேஸ்வரத்திற்கு சென்றால் ராமநாத சுவாமி கோவில், ராமர் பாதம் போன்ற புகழ்பெற்ற இடங்களையும், தனுஷ்கோடி ஆகியவற்றையும் பார்த்து விட்டு வரலாம்.
எட்டாம் நாள் :
மதுரை வந்தால் தமிழகத்தின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில், மலை அடிவாரத்தில் இருக்கும் கள்ளழகர் கோவில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் பழனி முருகன் கோவில் ஆகியவற்றிற்கு சென்று வரலாம்.
ஒன்பதாம் நாள் :
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆகிய கோவில்களை சுற்றி பார்த்து விட்டு வரலாம். அப்படி இல்லாமல் தென் மாவட்ட முருகன் கோவில்களை தரிசிக்க நினைப்பவர்கள் மதுரையில் இருந்து கோயமுத்தூர் சென்றால் மருதமலை முருகன் கோவில், ஈரோடு சென்னிமலை ஆண்டவர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று விட்டு வரலாம்.
பத்தாவது நாள் :
பத்தாவது நாளில் மதுரைக்கு திரும்பி வந்தால் அங்கிருந்து சென்னைக்கு பஸ் அல்லது ரயில் வசதி நிறைய உள்ளது. பத்தாவது நாளில் சென்னைக்கு திரும்பி வந்து விடலாம்.



Click it and Unblock the Notifications






