உலகப்புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சமீபகாலமாக திருப்பதியில் சிறுத்தை, கரடி போன்ற காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அலிப்பிரி மெட்டு நடைபாதை வழியாக திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது!
புத்துணர்ச்சி அளிக்கும் திருப்பதி நடைபாதை
கலியுகவரதனாக நம்மை காத்துக் கொண்டிருக்கும் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது நம் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்பது நம்பிக்கை. நம்முடைய தீவிர வேண்டுதல்கள் நடைபெற வேண்டும் என்பதற்காகவும், வேண்டுதல்கள் பலித்து விட்டால் நன்றி செலுத்தும் விதமாகவும் நடைபாதையில் நடந்து சென்று பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஒரு இயற்கை ஆர்வலராக இருந்தாலும் இந்த நடைபாதையை நடந்து செல்லலாம். சேஷாசலம் காடுகளுக்கு நடுவில், குளிர்ந்த காற்று வீச நடந்து செல்வது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

திருப்பதி நடைபாதையில் காட்டு விலங்குகளின் நடமாட்டம்
சமீபகாலமாக திருப்பதி நடைபாதையில் சிறுத்தை மற்றும் காட்டு கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் 6 வயது சிறுவன் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளானான், அந்த சுவடு மறைவதற்கு முன்னரே 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்தாள் என்பது வருத்தத்தை அளிக்கிறது.
பயத்தில் உறைந்த பக்தர்கள்
திருப்பதி திருமலை நடைபாதையில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தாலும் சிறுத்தைகள் சுற்றித் திரிவதாலும் பக்தர்களிடையே பெரும் அச்சம் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக நடைபாதையில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகளை குறிவைத்து தாக்கும் சிறுத்தைகள்
திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிப்பிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரண்டு மலைப் பாதைகள் வழியாக நடந்து சென்று எம்பெருமானை தரிசித்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக அலிப்பிரி நடைபாதையில் சிறுவர்களை குறிவைத்து சிறுத்தைகள் தாக்கி வருகின்றன. இதனால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

தடிகளை கொடுத்து அனுப்பும் TTD தேவஸ்தானம்
வனத்துறையின் கடுமையான சட்டங்களால் மலைப் பாதைகளில் உடனடியாக இரும்பு வேலி அமைக்க முடியவில்லை. சட்டத்தில் ஏதேனும் மற்றம் கொண்டு வந்தால் அல்லது அரசாங்கள் சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே இரும்பு வேலி அமைக்க முடியும். இதனால் தற்போதைய நிலைமையை சமாளிக்க நடந்து செல்லும் பக்தர்களுக்கு தடிகளை தேவஸ்தானம் கொடுத்து அனுப்பி வருகிறது. கையில் தடியை எடுத்துச் சென்றால் அதைப் பார்த்து சிறுத்தை பயந்து ஓடி விடுமா? என்பது பெரிய கேள்விகுறிதான். தேவஸ்தானத்தின் இந்த செயலை பலரும் பார்த்து விமர்சித்த போதிலும் இத்திட்டத்தை கைவிட முடியாது என TTD தேவஸ்தான தலைவர் கருணாகரன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆங்காங்கே பிடிபடும் சிறுத்தைகள்
வனத்துறையினர், கடந்த 50 நாட்களில் திருப்பதி வனப்பகுதிகளில் ஆங்காங்கே கூண்டுகள் அமைத்து இதுவரை 3 சிறுத்தைகளை பிடித்துள்ளனர். ஆனாலும் திருப்பதி காடுகளில் இன்னமும் 20 க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளதாகவும் மேலும் கரடிகளும் காட்டு யானைகளும் சுற்றித் திரிவதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.
குறைந்த பக்தர்களின் எண்ணிக்கை
கைத்தடிகள் கொடுத்து அனுப்பினாலும், பக்தர்கள் பீதி காரணமாக அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதைகளில் நடந்து செல்ல தைரியமாக முன் வருவது இல்லை. இதனால் இவ்விரு மலைப்பாதைகளிலும் நேற்று பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. வழக்கமாக ஒரு நாளைக்கு 12,000 முதல் 20,000 பேர் வரை திருப்பதி மலைப் பாதைகளில் நடந்து செல்வார்கள். ஆனால், தற்போது 3,000 முதல் 4,000 பேர் மட்டுமே நடந்து செல்கின்றனர். அதே போல, அதிக அளவிலான கார், பேருந்து, வேன் போன்ற வாகனங்களில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுதான் ஒரே வழி
திருமலை மலைப்பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணைந்து தேடுதல் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் மாற்றம் ஏதாவது நடந்து வேலி அமைக்கப்பட்டால் மட்டுமே நடந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications





