ரயில் பயணம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது - ஜன்னலோர இருக்கை, ஜில்லென்று காற்று, வசதியான பயணம் எல்லாவற்றிர்க்கும் மேல் மலிவான பயணம் என ரயில் பயணம் தான் மக்களுக்கு பிடித்த போக்குவரத்து முறையாக உள்ளது. ஆனால், இந்தியாவின் அனைத்து ரயில்களிலும் பயணம் இன்பமாக அமைவது இல்லை, தெரியுமா? இந்தியாவின் அசுத்தமான ரயில்கள் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. இந்த ரயில்களில் பயணம் செய்வது மிகவும் அசௌகரியமாக இருக்குமாம். இலவசமா டிக்கெட் கிடைச்சாலும் கூட இந்தியாவின் இந்த ரயில்களில் பயணம் செய்யக்கூடாது என இந்த ரயில்களில் பயணம் செய்தவர்கள் கூறுகின்றனர்!

பயணிகளுக்கு உதவும் ரயில் மடட் செயலி
இந்திய ரயில்வே, 2018 ஆம் ஆண்டில், ரயில் மடட் செயலியை (Rail Maddad App) அறிமுகப்படுத்தியது - இது ஒரு குறை தீர்க்கும் போர்டல் ஆகும், இதில் பயணிகள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி ரயில்கள் அல்லது நிலையங்கள் குறித்த புகார்களை எளிதாகப் பதிவு செய்யலாம். மக்கள் தங்கள் எழுத்துப்பூர்வ எதிர்ப்புகளுடன் புகைப்படங்களையும் பதிவேற்றலாம்.
கண்டுபிடிக்கப்பட்ட அசுத்தமான ரயில்கள்
ரயில் மடட் செயலியில் கொடுக்கப்படும் புகார்கள் முக்கியமான தரவுகளாக செயல்படுகின்றன, இந்திய ரயில்வே அமைப்பில் உள்ள மிக முக்கியமான பிரச்சனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதன்படி ரயில்களில் உள்ள சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான புகார்களின் அதிர்வெண், நாட்டில் உள்ள அசுத்தமான ரயில்களை அடையாளம் காண உதவியது. நீங்கள் தவிர்க்க வேண்டிய நாட்டின் அசுத்தமான ரயில்கள் கீழே!

இந்தியாவின் அசுத்தமான ரயில்கள்
1. சஹர்சா-அமிர்தசரஸ் கரிப் ரத்
கிழக்கு பீகாரில் உள்ள சஹர்சாவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எப்பொழுதுமே அதிகப்படியான பயணிகளை கையாள்கிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த ரயிலில் தூய்மை இல்லாதது தொடர்பாக 81 புகார்கள் வந்துள்ளன. அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத்தில் தண்ணீர் பற்றாக்குறை குறித்து 58 புகார்கள் வந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. அசுத்தமான கோச், கழிவறை, மற்றும் சிங்க் கேபின் குறித்து மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

2. சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ்
இந்த ரயில் புது தில்லியில் உள்ள ஆனந்த் விஹாரிலிருந்து பீகாரின் ஜோக்பானி வரை இயக்கப்படுகிறது. ஜோக்பானியில் இருந்து புறப்படும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸில் சுகாதார சீர்கேடு குறித்து 67 புகார்கள் வந்துள்ளன. இந்த ரயிலில் வேறு பாதையில் ஓடும்போதும் கூட 52 புகார்கள் வந்தன என்று கூறப்படுகிறது.

3. ஸ்வராஜ் எக்ஸ்பிரஸ்
ஜம்முவில் உள்ள ஸ்ரீ வைஷ்ணோ தேவியிலிருந்து மும்பையில் உள்ள பாந்த்ரா வரை இயக்கப்படும் விரைவு வண்டி தொடர்பாக 64 புகார்கள் வந்தன, அதே நேரத்தில் பாந்த்ராவிலிருந்து புறப்படும் ரயிலில் டிசம்பர் மாதத்தில் தூய்மையின்மை குறித்து 61 புகார்கள் எழுப்பப்பட்டன.

4. திரிபுரா சுந்தரி எக்ஸ்பிரஸ்
இந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் இருந்து பஞ்சாபில் உள்ள ஃபிரோஸ்பூருக்கு செல்கிறது. ஃபிரோஸ்பூரில் தொடங்கும் ரயிலில் கடந்த 2022-ம் ஆண்டில் தூய்மை இல்லாதது குறித்து பயணிகளால் 57 புகார்கள் வந்துள்ளன.

5. ஜெய்நகர்-அமிர்தசரஸ் குளோன் சிறப்பு
அசுத்தமான கோச், அசுத்தமான கழிவறை தொடர்பாக டிசம்பரில் இந்த ரயில் தொடர்பாக வந்த மொத்த 92 புகார்களில் 50 புகார்கள் தூய்மையின்மை குறித்து வந்தது.
மேலும் ஐந்து ரயில்கள்
மேற்கூறப்பட்ட ரயில்கள் மட்டுமின்றி புதுடெல்லி-திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்பாக 35 புகார்களும், அமிர்தசரஸ் குளோன் சிறப்பு ரயில் தொடர்பாக 50 புகார்களும், அஜ்மீர்-ஜம்மு தாவி புஜா எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்பாக 40 புகார்களும், ஆனந்த் விஹார்-ஜோக்பானி தொடர்பாக 52 புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
ஒரே மாதத்தில், இந்த 10 ரயில்கள் குறித்து ரயில்வேக்கு 1079 புகார்கள் வந்துள்ளன, அதில் சுகாதாரமற்ற நிலை, தண்ணீர் பற்றாக்குறை, அழுக்கு போர்வைகள் மற்றும் ஷீட்கள், சேதமடைந்த இருக்கைகள் போன்ற புகார்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ரயில்களில் பயணம் செய்வது மோசமான அனுபவத்தை கொடுப்பதாக பயணிகள் கருதுகின்றனர். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? நீங்கள் இது போன்ற அசுத்தமான ரயில்களில் பயணம் செய்தது உண்டா?



Click it and Unblock the Notifications





