அருவி அல்லது நீர்வீழ்ச்சி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது என்று சொல்லுங்களேன் பார்ப்போம்! அடிக்கிற வெயிலுக்கு இதமாக நீருக்குள் நனைந்து ஆட்டம் போட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் பயணிகளே! தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் எண்ணற்ற அழகான அருவிகள் உள்ளன என்று நாம் அறிவோம், அதே போல மர்மங்கள் நிறைந்த ஆபத்தான அருவிகளும் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த கட்டுரையில் அதிகபட்சம் யாருக்கும் தெரியாத, பிரபலமாகாத, வனத்துறையால் பொதுமக்கள் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட அபாயகரமான அருவிகளைப் பற்றி தான் பார்க்க போகிறோம்! இந்த அருவிகளுக்கு எல்லாம் உரிய அனுமதி இல்லாமல் நீங்கள் செல்லக் கூடாது, அவை என்னென்ன அருவிகள் என்று பார்ப்போமா!

தலையாறு அருவி
தலையாறு அருவி திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவி 975 அடி உயரம் கொண்டு தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியாகவும், இந்தியாவின் 6 ஆவது உயர்ந்த அருவியாகவும் உலகின் 267 ஆவது உயரமான அருவியாகவும் உள்ளது. மழைக்காலங்களில் இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது மிகவும் சாதாரணம், இந்த அருவியில் எவ்வளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு எலிவால் போன்று இருக்குமாம், அதனால் இதற்கு எலிவால் அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இந்த அருவியை தூரத்தில் இருந்து பார்க்க நீங்கள் வத்தலகுண்டு-பெரியகுளம் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய காட்டுசாலையின் டம் டம் பாறையின் மீது இருந்து பார்க்கலாம். இந்த அருவியை அருகில் இருந்து பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் 4 கிமீ தூரத்திற்கு கரடு முரடான காட்டுப் பாதையில் நடக்க வேண்டும். சாதாரண சுற்றுலாப் பயணிகளால் இந்த இடத்திற்கு செல்ல முடியாது. இந்த அருவிக்கு அருகில் செல்ல முயன்ற பல சுற்றுலாப் பயணிகள் பாறைகளில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

பாணதீர்த்தம் அருவி
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அருவி பாபநாசத்தின் காரையாறு அணைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அருவியில் நீரானது ஆண்டு முழுவதும் வற்றாமல் கொட்டி கொண்டே இருக்குமாம். இந்த அருவியில் இருந்து வரக்கூடிய நீர் தான் காரையாறு அணையில் சேமிக்கப்பட்டு தாமிரபரணி நதியாக பாய்ந்து ஓடுகிறது. திருநெல்வேலி, தென்காசி இடங்களில் இருந்து காரையாறு அணைக்கு பேருந்து வசதி இருக்கிறது. அங்கிருந்து படகு மூலம் நீர்வீழ்ச்சியை பார்வையிட முன்பு அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது. நீர்வீழ்ச்சியில் எப்போதும் காட்டாற்று வெள்ளம் போல நீர்வரத்து உள்ளதாலும், நீர்வீழ்ச்சிக்கு அருகே பல சுழல்கள் உருவாகுவதாலும் பொதுமக்கள் நலன் கருதி இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிகுர் அருவி
சிகுர் அருவி நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது, இந்த அருவி மோயராடின் தெற்கே நீலகிரி மலைகளின் வடக்கே பாதுக்காக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இது முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த அருவியை நாம் தூரத்தில் இருந்தே பார்க்கலாம், அருகில் பார்ப்பது என்பது கடினமான காரியம். அருகில் அருவியை பார்வையிட வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் வனத்துறையிடம் அனுமதி வாங்கிய பின்னர், பல கரடு முரடான பாதைகளை கடந்து, காட்டு விலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்ல வேண்டும்.

சின்னக்கல்லாறு அருவி
சின்னக்கல்லாறு அருவி கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி மாவ்சின்றோம், சிரபுஞ்சிக்கு அடுத்தப்படியாக இந்தியாவின் 3 ஆவது ஈரப்பதம் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது. இது தமிழ்நாட்டின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த அருவி வால்பாறையில் இருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, இந்த அருவியை பார்க்க விரும்புபவர்கள் வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று கரடு முரடான காட்டுப் பாதைகளை கடந்து செல்ல வேண்டும்.

தேனருவி
தென்காசி மாவட்டத்தின் குற்றாலத்தில் அமைந்துள்ள 9 அருவிகளில் ஒன்றாக இந்த தேனருவி அமைந்துள்ளது. இந்த தேனருவி செண்பகா தேவி அருவிக்கு 3 கிமீ உயரத்தில் அமைந்துள்ளது. 40 மீட்டர் உயரத்தில் இருந்து விழக்கூடிய இந்த அருவி இரு பெரிய மலைகளுக்கு நடுவே ஆபத்தான இடத்தில் பாய்க்கிறது. இந்த இடத்தை சுற்றிலும் ஏகப்பட்ட தேன் கூடுகள் உள்ளதால் இதற்கு தேனருவி என்ற பெயர் வந்ததாம். இந்த அருவிக்கு செல்ல 2 மணி நேரத்திற்கு மேலாக ட்ரெக்கிங் செய்ய நேரிடும், இந்த அருவியை சுற்றிலும் பல ஆபத்துகள் நிறைந்துள்ளதால் வனத்துறை இந்த அருவிக்கு செல்ல அனுமதி கொடுப்பது இல்லை.

கல்லாறு அருவி
கல்லாறு அருவில் சேலம் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சேர்வராயன் மலைத்தொடரில் இருந்து உருவாகிறது. ஏற்காட்டின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவி சேலத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும் ஏற்காட்டில் இருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த அருவிக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தினாலேயே இது யார் கண்ணுக்கும் தெரியாமல் உள்ளது. இந்த அருவியை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் டவரும் கூட கிடையாது. தனி நபர்கள் இங்கே வருவது நல்லது அல்ல.

கோரையாறு அருவி
இந்த அருவி பெரம்பலூர் மாவட்டம் வேப்பம்தட்டை பகுதியில் பச்சைமலையில் அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்குமாம். இந்த அருவிக்கு செல்ல பெரம்பலூரில் இருந்து கோரையாறு கிராமத்தை அடைந்து 6 கிமீ கடினமான ட்ரெக்கிங் செய்து கோரையாறு அணையை அடையலாம். அருவியின் அடியில் 60 அடி ஆழம் கொண்ட பெரிய நீர் தேக்கம் உள்ளது, நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் இறங்கி குளிக்கவும். இந்த இடத்திற்கு செல்ல நீங்கள் வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

வட்டப்பாறை அருவி
வட்டப்பாறை அருவி கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டி என்ற சிற்றூருக்கு பக்கத்தில் பாதுகாக்கப்பட்ட கீரிப்பாறை வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த அருவிக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம். சுமார் 13௦ அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே அமைந்துள்ளது.. இந்த அருவிக்கு செல்ல விரும்புபவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெற்ற பின்னர் ட்ரெக்கிங் செய்து அணுகலாம்.

மங்களம் அருவி
மங்களம் அருவி திருச்சி, பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களை இணைக்கக்கூடிய கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த அருவி பச்சை மலையின் உச்சியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு செல்ல நீங்கள் வனத்துறையிடம் முறையாக அனுமதி பெற்றிருப்பது அவசியம்.

மேகம் அருவி
மேகம் அருவி கள்ளக்குறிச்சியின் கல்வரயான் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட தொலைவு மட்டுமே சாலையால் அணுகிட இயலும், கொடுந்துரையில் இருந்து 6 கிமீ தூரத்திற்கு கடினமான ட்ரெக்கிங் செய்ய வேண்டும். சுமார் 500 அடி உயரத்தில் இருந்து விழும் நீரை பார்க்க எவரும் மெய் சிலிர்க்காமல் இருக்க முடியாது. சரியான உள்ளூர் வழிகாட்டியுடன் இந்த இடத்திற்கு நீங்கள் செல்லலாம்.



Click it and Unblock the Notifications





