நீர்வீழ்ச்சி என்றாலே அனைவர்க்கும் பிடிக்கும் தானே! மலையின் உச்சியிலிருந்து, சலசலவென விழும், ஜில்லென்ற நீரில் நனைந்து குளித்து ஆட்டம் போட யாருக்கு தான் பிடிக்காது. மலைகளின் உச்சியில் இருந்து வேகமாக பள்ளத்தாக்குகளின் விளிம்புகளில் கொட்டும் நீரை பார்த்து பார்த்து நாம் யாரும் நிச்சயம் உற்சாகம் அடையாமல் இருக்க முடியாது! இந்தியாவின் பல்வேறு இடங்களில் பல நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை மற்றும் தனித்தன்மை வாய்ந்தவை. இந்தியாவின் அழகான கம்பீரமான நீர்வீழ்சிகளின் லிஸ்ட் இதோ உங்களுக்காக!

அதிரப்பில்லி நீர்வீழ்ச்சி, கேரளா
நாம் பல படங்களில் பார்த்து ரசித்த இந்த பிரமாண்டமான அருவி இயற்கை அழகின் சொர்க்கமான கேரளாவின் திருச்சூரில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமுடி மலையில் உருவாகும் சாலக்குடி ஆறு, வாழச்சல் வனப்பகுதியை கடந்து, அதிரப்பிலி அருவியாக பிரமாண்டமாக கொட்டுகிறது. மழைக்காலத்தில் நம்மை மிரட்டும் விதமாக காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றி கிரேட் இந்தியன் ஹார்ன்பில், ஆசிய யானை, காட்டெருமை, சாம்பார் மற்றும் பல விலங்கினங்களை நாம் காணலாம்.

ஜோக் நீர்வீழ்ச்சி, கர்நாடகா
கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோக் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியாகும். பசுமையான காடுகளின் பின்னணியில் ராஜா, ராணி, ராக்கெட் மற்றும் ரோவர் என அழைக்கப்படும் நான்கு அருவிகளின் நீர் ஒன்றிணைந்து அருவியின் கம்பீரமான அழகை உருவாக்குகிறது. இந்தியாவில் உள்ள இந்த மகத்தான நீர்வீழ்ச்சியின் அழகின் உச்சத்தைக் காண பருவமழையின் போது இங்கே விஜயம் செய்யுங்கள். அடர்ந்த பசுமையான போர்வை, இப்பகுதியின் இயற்கை வாழ்விடம் மற்றும் வெள்ளை அடர்ந்த புகை போன்ற அருவியின் அழகை மேம்படுத்துகிறது. இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகள் வழியே ட்ரெக்கிங் செய்வது உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கித் தரும்.

ஒகேனக்கல், தமிழ்நாடு
தமிழ்நாட்டின் தர்மபுரியில் காவேரி ஆற்றினால் உருவாகும் ஒகேனக்கல் 20 மீட்டர் உயரத்தில் இருந்து மேற்பரப்பில் உள்ள பாறைப் படுக்கையில் விழுந்து புகையின் மாயையை உருவாக்குகிறது. இந்த நீர்வீழ்ச்சிகளின் வித்தியாசமான அமைப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக பருவமழையின் சமயத்தில் நீரின் வேகம் காட்டாறு போன்று விழும் நீர்வீழ்ச்சியைப் பார்த்து நாம் யாரும் வியப்படையாமல் இருக்க முடியாது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீராடுவது மட்டுமின்றி, பாரம்பரிய படகுகளில் படகு சவாரி செய்தும் சாகசத்தை அனுபவிக்கலாம். இருப்பினும், மழைக்காலத்திற்குப் பிறகு, தண்ணீர் கடுமையாகவும் சக்தியுடனும் இல்லாதபோது மட்டுமே படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது.

துத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவா
கோவாவின் மொல்லெம் தேசிய பூங்காவில் அமைந்துள்ள துத்சாகர் நீர்வீழ்ச்சி, சுமார் 1017 அடி உயரத்தில் இருந்து விழுந்து வெள்ளை நீர்வீழ்ச்சியின் பிரமிக்க வைக்கும் காட்சியை உருவாக்குகிறது. குறிப்பாக மழைக்காலங்களில், நீர்வீழ்ச்சி நிரம்பி வழியும் போது, இதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். துத்சாகர் என்றால் பால் கடல் என்று அர்த்தம், நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் மாத்திரத்திலேயே ஒரு கோப்பையிலிருந்து பால் விழுவது போன்ற ஒரு மாயை உங்களுக்குள் தோன்றும் என்பதில் சந்தேகமே இல்லை.

சித்ரகூட் நீர்வீழ்ச்சி, சத்தீஸ்கர்
'இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி' என்று அன்புடன் அழைக்கப்படும் சித்ரகோட் நீர்வீழ்ச்சி, சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூரில் அமைந்துள்ளது. பொதுவாக 100 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் வேகம் அதிகரித்து 150 மீட்டர் உயரத்தில் இருந்து பிரமாண்டமாக கொட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த நீர்வீழ்ச்சிக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.

நோகலிகை நீர்வீழ்ச்சி, மேகாலயா
உலகின் நான்காவது உயரமான மற்றும் நாட்டின் மிக உயரமான இந்த நோஹ்கலிகை நீர்வீழ்ச்சி பூமியின் ஈரமான இடமான சிரபுஞ்சியில் அமைந்துள்ளது. சீற்றத்துடன் ஓடும் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் மூடுனியின் அழகில் இருந்து நீங்கள் மீண்டு வர நேரம் பிடிக்கும். பச்சை சரிவுகளுக்கு மத்தியில் விழும் வெள்ளை நீரின் அற்புதமான அழகு இயற்கை ஆர்வலர்களின் மனதைக் கொள்ளையடிப்பதோடு, இங்கு ட்ரெக்கிங் செய்து உயிருக்கு புத்துணர்ச்சி அளித்திடுங்கள்.



Click it and Unblock the Notifications





