சுற்றுலா என்றால் இளமையானவர்களுக்கு மட்டும் தான், இளமை கொஞ்சம் குன்றினாலும் வீட்டுக்கும் முடக்கி வைத்திட வேண்டியது தான் - என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு, நம்மை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய அம்மா, அப்பா பாசம் கொட்டி வளர்த்த தாத்தா பாட்டியின் அருமை அவர்கள் நம் அருகில் இருக்கும் வரை நமக்கு புரியாது.
இப்படி நீங்கள் ஒரு போதும் வருத்தப்படக்கூடாது என்பதற்காகவே வயதான பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுடன் நீங்கள் தமிழ்நாட்டுக்குள் சுற்றிப் பார்க்க வேண்டிய அழகான இடங்களின் லிஸ்ட் கொடுத்து இருக்கிறோம்!

மதுரை
தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரான மதுரையின் திருவிழாக்களையும், கோவில்களையும், ருசிகர உணவுகளையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை. உங்கள் தாய், தந்தையும், தாத்தா, பாட்டியும் தொலைக்காட்சியில் மட்டுமே கண்டுகளித்த மதுரை மீனாட்சி கோவில், கள்ளழகர் கோவிலுக்கு அவர்களை அழைத்துச் சென்று அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். கூடவே அழகான திருமலைநாயக்கர் மஹால், அறுபடைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கூடல் அழகர் கோவில்களுக்கும் அழைத்துச் செல்லுங்கள். மதுரையின் ருசிகர உணவுகளை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து அவர்களை குஷிப் படுத்துங்கள்.

மகாபலிபுரம்
எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்து சிற்பங்களையும், குடைவரை கோவில்களையும் காண அவர்களுக்கு நிச்சயம் ஆசை இருக்கும். மகாபலிபுரத்தின் கடற்கரை கோவில், பஞ்ச ரதம், மகிஷாசுரமர்தினி குகை, குடைவரைக்கோயில், கிருஷ்ணா பந்து, கடற்கரை மியூசியம் கண்டு அவர்கள் நிச்சயம் பரவசமடைவார்கள். அங்கே கிடைக்கும் வண்ணமயமான ஷாப்பிங் மற்றும் கடல் உணவுகள் உங்களுக்கான கூடுதல் போனஸ் என்று தான் சொல்ல வேண்டும்.

தஞ்சாவூர்
மறைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் இன்றளவும் உலக அளவில் பேசப்படும் புகழ்பெற்ற மண்ணின் மைந்தரான மாமன்னர் ராஜ ராஜ சோழன் ஆண்ட தஞ்சையை காண எவருக்குமே ஆசை இருக்கும். உலக அதிசயங்களை விட அதிசயமான தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, மியூசியம் ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்லுங்கள். இன்னும் கொஞ்சம் பயணித்து கும்பகோணம் செல்லும் வழியில் உடையாளூர் எனும் இடத்தில் துயில் கொண்டிருக்கும் மாமன்னர் ராஜ ராஜ சோழனின் சமாதியை உங்களுக்கு காண விருப்பம் இருந்தால் அங்கேயும் சென்று வாருங்கள்.

காஞ்சிபுரம்
'ஆயிரம் கோவில்களின் நகரம்' என்று போற்றப்படும் காஞ்சிபுரம் நிச்சயம் உங்கள் வீட்டு பெரியவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக தான் இருக்கும். அகிலம் போற்றும் காஞ்சி காமாட்சி கோவில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் குடிகொண்டிருக்கும் வரதராஜ பெருமாள் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். மறக்காமல் உங்கள் அம்மா மற்றும் பாட்டிக்கு காஞ்சி பட்டுப் புடவை எடுத்து கொடுத்து மகிழ்ந்திடுங்கள்.

ராமேஸ்வரம்
இந்தியாவின் பழமையான பாலமான பாம்பன் பாலத்தை ரசிப்பதும், புண்ணியம் நிறைந்த தீர்த்தங்களில் குளிப்பதும், அருள்மிகு ராமநாதசுவாமியை தரிசிப்பதும், தனுஷ்கோடியை கண்டுகளிப்பதும் நிச்சயம் அவர்களுக்கு பிடித்த செயலாகத் தான் இருக்கும். உலகஅளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த APJ அப்துல் கலாம் ஐயாவின் அருங்காட்சியகத்திற்கும், சமாதிக்கும் செல்ல மறக்காதீர்கள்.

புதுச்சேரி
முக்கடல் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி நிச்சயம் வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு சுற்றுலாத் தலம். அதிகாலையில் சூரிய உதயம் பார்ப்பது, விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைகளை பார்வையிடுவது, அருங்காட்சியகம், பகவதி அம்மான் கோவில் என நீங்கள் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் கன்னியாகுமரியில் உள்ளன.

உங்கள் அம்மா, அப்பா மற்றும் தாத்தா, பாட்டியுடன் நீங்கள் எப்போது ஒரு டூர் செல்லப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications






