வெயில் குறைந்து லேசான மழையும், மிதமான குளிரும் நம்மை வரவேற்கும் இந்த மாதத்தில் வீட்டிற்குள் அடைந்து கிடக்காமல் சுற்றுலா செல்வது ஒரு அருமையான சாய்ஸ். அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டின் இந்த இடங்கள் எல்லாம் கூடுதல் அழகுடன் காட்சியளிப்பதால், உங்களது சுற்றுலா உங்களுக்கு மனநிறைவு மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! அக்டோபர் மாதத்தில் நீங்கள் செல்ல வேண்டிய தமிழ்நாட்டு சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!

முதுமலை
தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள இந்த அழகிய இடம், அழிவின் விளிம்பில் உள்ள புலிகளை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள முதுமலை தேசிய பூங்காவிற்கு இது மிகவும் பிரபலமானது. எந்தவொரு விலங்கு பிரியரும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் பார்க்கவே விரும்புவார்கள். அதற்கு இதுவே ஒரு சிறந்த இடமாகும். ஜங்கிள் சஃபாரி மற்றும் தெப்பக்காடு யானைகள் முகாம் ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். புலிகள், சோம்பல் கரடிகள், கோடிட்ட ஹைனாக்கள், தங்க நரிகள் மற்றும் ஆசிய யானைகளைக் காண முதுமலை தேசியப் பூங்காவிற்குச் செல்லுங்கள்.

கொடைக்கானல்
மலைவாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் கொடைக்கானல் ஒரு சிறந்த ஜூலை மாத சுற்றுலாத் தலமாகும். குறிப்பாக அக்டோபர் மாதத்தில், மழைக்காலம் அதன் அழகை பன்மடங்கு கூட்டுகிறது. கொடைக்கானல் ஏரி, பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், தூண் பாறைகள், டால்பின் நோஸ் ராக்ஸ், செம்பகனூர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் பியர் ஷோலா நீர்வீழ்ச்சி ஆகியவை கொடைக்கானலில் பார்க்கக்கூடிய சிறந்த இடங்களாகும்.

ஏற்காடு
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஏற்காடு அதன் பரந்த பசுமையான காடுகள், வளமான காபி தோட்டங்கள், தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்காக பெயர் பெற்றது. 4970 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டின் வானிலை மிகவும் இதமாக இருப்பதால் எப்பொழுதும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்த வண்ணமே இருக்கின்றனர். எமரால்டு ஏரி, மான் பூங்கா, 32 கிமீ லூப் ரோடு, டிப்பரரி வியூ பாயின்ட், லேடி சீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, ரோஸ் கார்டன், கோட்டச்சேடு தேக்கு காடு, தாவரவியல் பூங்கா, குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா, பட்டுப் பண்ணை ஆகியவற்றை நீங்கள் இங்கு கட்டாயம் பார்வையிட வேண்டும்.

வால்பாறை
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இந்த வால்பாறை அணைகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், குன்றுகள், காடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கி பார்வையாளர்களை தன்வசப்படுத்துகிறது. சோலையார் அணை, தேயிலை தோட்டம், காட்டு மரக் குடிசைகள், நீரார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, வெள்ளமலை சுரங்கப்பாதை ஆறு, பிரலா நீர்வீழ்ச்சி, சின்ன கல்லார் நீர்வீழ்ச்சி, பாலாஜி கோயில், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

ஏலகிரி
ட்ரெக்கிங் செய்பவர்களிடையேயும், இயற்கை ஆர்வலர்களின் மத்தியிலேயும் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட இடம் தான் இந்த ஏலகிரி. கடல் மட்டத்திலிருந்து 4600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம் பல கண்கவர் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கியது. அவற்றில் ஜலகம்பாறை அருவி, புங்கனூர் ஏரி, தொலைநோக்கி கண்காணிப்பகம், சுவாமிமலை மலை, ஜலகண்டீஸ்வரர் கோவில், இயற்கை பூங்கா, அரசு மூலிகை பண்ணை, நிலாவூர் ஏரி, அமிர்தி விலங்கியல் நீர்வீழ்ச்சி ஆகியவை முதன்மையானவையாகும்.

சிதம்பரம்
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் பழங்காலத்திலிருந்தே கட்டிடக்கலை பெருமை மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்து வருகிறது. சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஆகாய ஸ்தலம் இங்கு தான் அமைந்துள்ளது. தில்லை அம்பல நடராஜர் கோயில், இளசுகளுக்கு எல்லாம் பிடித்த பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள், பொன்னியின் செல்வன் கதையோடு தொடர்புடைய கொள்ளிடம், மார்க்கேண்டயரை காத்த திருக்கடையூர், பழம்பெரும் வரலாற்று நகரமான பூம்புகார் ஆகியவற்றை நீங்கள் இங்கே கண்டு களிக்கலாம்.

கன்னியாகுமரி
தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்து இருக்கும் கன்னியாகுமரி வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு நிறைந்த ஒரு மாவட்டமாகும். அக்டோபர் மாதத்தில் இங்கு செல்லும் போது கோடை வெயில் தணிந்து இதமான வானிலை நிலவுகிறது. திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், தாணுமாலயன் கோவில், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி கடற்கரை, மெழுகு அருங்காட்சியகம், சங்குத்துறை கடற்கரை, ஒலகருவி அருவி ஆகியவை நீங்கள் கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.



Click it and Unblock the Notifications





