மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததும், முக்கியத்துவம் வாய்ந்ததும் என்றால் அது புரட்டாசி தான்! ஏனெனில் வெங்கடேச பெருமான் இந்த மாதத்தில் தான் பூமியில் தோன்றினார் என்று நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் பெருமாள் கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் பகவானின் புண்ணியத்தை பெறலாம். தமிழ்நாட்டில் மொத்தம் 84 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன, அதில் இப்போது நாம் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பெருமாளின் திவ்ய தேசங்களைப் பற்றி பார்ப்போம்!

ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீ ரங்கம்
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலாகும். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் திருமால் வைகுண்டத்தில் இருப்பது போலவே சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 துணை சன்னதிகளும் உள்ளன. சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் இந்தியாவிலேயே அதிக பரப்பளவு கொண்ட கோயிலாகவும், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பெருமாள் கோயிலாகவும் விளங்குகிறது.

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோவில், திருக்கோழி
உறையூரில் அமைந்துள்ள இக்கோவில் நாச்சியார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் என்ற நாமம் கொண்ட பெருமாள் வீற்றிருந்த திருக்கோலத்திலும் தாயார் ஸ்ரீ கமலவல்லி தேவி அமர்ந்த கோலம்த்தில் காட்சி தருகிறார். சோழமன்னனின் திருமகளான கமலவல்லி நாச்சியார் ஸ்ரீ ரங்கநாதன் மீது காதல் கொண்டு, விரதம் இருக்க, அழகிய மணவாளன் இங்கு வந்து திருமணம் புரிந்து கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள் கோவில், திருக்கரம்பனூர்
ஸ்ரீரங்கத்திற்கு அருகில் அமைந்துள்ள இக்கோவில் உத்தமர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள விஷ்ணு பெருமாளான ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒவ்வொரு தம்பதியரும் இணக்கமாக வாழ வேண்டி இக்கோவிலுக்கு தருவது விசேஷம். இந்த கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால், இங்கு வந்து வேண்டிக் கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ புண்டரிகாசனப் பெருமாள் கோவில், திருவெள்ளறை
திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் 27 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் பெரிய பிரகாரத்தின் தென்பகுதியில் உள்ள கல் அறைகளில் ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும் என்று கூறுகிறார்கள். வெள்ளை நிறத்தில் உள்ள சிறிய மலையின் உச்சியில் 100 அடி உயரத்தில் இத்தலம் அமைந்திருப்பதால், இந்தத் தலம் "திரு வெள்ளறை" என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ வடிவழகிய நம்பி பெருமாள் கோவில், திரு அன்பில்
பெருமாள் பாற்கடலில் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பதை போல இங்கும் சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார். கர்ப கிரஹத்தின் மேல் உள்ள கோபுரம் ராஜகோபுரத்தை போலெ இருப்பது ஒரு தனி சிறப்பு. இந்த கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. மங்கள சாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களில் இது ஐந்தாவது திவ்ய தேசம் ஆகும். இக்கோயில் திருச்சியிலிருந்து 25 கிமீ தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரராஜ பெருமாள் என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ அப்பாக்குடத்தான் பெருமாள் கோவில், திருப்பேர் நகர்
இந்த கோயிலை திருப்பேர் நகர் என்பதைவிட, கோயிலடி என்றால் தான் பலருக்கும் புரியும். ஸ்ரீரங்கத்துக்கும் முன்னதாகவே இத்தலம் ஏற்பட்டது என்றும் அதனால்தான் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் 'கோவிலடி' என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுவர். பக்தர்களின் மனதை விட்டும், இந்த தலத்தை விட்டும் அகலாமல் இருக்கும் தலம் என்பதால் இந்த தலத்திற்கு திருப்பேர் நகர் என்ற பெயரும் உண்டு.



Click it and Unblock the Notifications




