பார்ட்டி, நகரம், கொண்டாட்டம் என என்னதான் உலகத்தை சுற்றினாலும் உண்மையான சந்தோஷமும், நிம்மதியும் இயற்கை அன்னையால் மட்டுமே வழங்க முடியும். அந்த வகையில் இந்தியாவிலேயே அழகான ஏரிகள் என்று சொல்லப்படும் ஏரிகளைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இந்த ஏரிகளை சுற்றியுள்ள, வானிலையும், இயற்கை அழகும், ரம்மியமான சூழலும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன. நீங்கள் உங்கள் வாழ்வில் ஒருமுறையாவது இந்த இடங்களுக்கு சென்று வந்துவிட வேண்டும்!
அழகிய புதையல் - இமயமலை
உலகின் உயரமான சிகரங்களை உள்ளடக்கி இந்திய நாட்டின் வடக்கே ஒரு அரணாக இமயமலைத்தொடர் வீற்றிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இமயமலை என்றால் நம் நினைவுக்கு வருவது பனி மூடிய சிகரங்கள் தான், ஆனால் அது மட்டுமே அதன் உண்மை முகம் அல்ல! இமயமலையை சுற்றியுள்ள பல்வேறு நீர்நிலைகளும் நிலப்பரப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்த தவறவில்லை. கரடுமுரடான பாறை நிலப்பரப்பின் பின்னணியில் பதிக்கப்பட்ட ஏராளமான ஏரிகள் அற்புதமான சோலைகளை உருவாக்குகின்றன.
நம்மை உறைய வைக்கும் வசீகரம்
இந்த வசீகரிக்கும் ஏரிகளைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள், ஆனால் சில உறுதியான மலையேற்றக்காரர்கள் இந்த பெரிய இமயமலை ஏரிகளின் அழகைக் காண பல நாட்களாக தொடர்ந்து மலையேறுகிறார்கள். சற்று சிரமமாக இருந்தாலும் கூட, அந்த ஏரிகளை பார்வையிட்ட உடன் அனைத்தும் மறந்து நாம் ஆனந்தத்தில் திளைப்போம்!

பாங்காங் த்ஸோ, லடாக்
சுமார் 4000 மீட்டர் உயரத்தில் மிக அழகிய சுற்றுச்சூழலில் அமைந்துள்ள இந்த பாங்காங் த்ஸோ ஏரி லடாக்கில் அமைந்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் பக்கெட் லிஸ்டில் மிகவும் விரும்பப்படும் சாலைப் பயணங்களில் ஒன்று லே மற்றும் லடாக் நிச்சயமாக இருக்கும். வெள்ளை மணலால் சூழப்பட்ட ஏரி சூரிய ஒளியில் மற்றும் நாளின் பல்வேறு மணிநேரங்களில் வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது வெவ்வேறு நிறங்களை பிரதிபலிக்கிறது. அழகிய கரடுமுரடான மலைகளுக்கு எதிராக முழுமையான பாங்காங்கின் உண்மையான அழகைக் காண சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதய நேரத்தில் அங்கு செல்வது சிறப்பு வாய்ந்தது. மேலும் சோ மோரிரி, யாரப் ஏரி ஆகியவையும் லடாக்கில் பார்க்க வேண்டிய இமயமலை எரிகளாகும்.

சாத்தால் ஏரி, உத்தரகண்ட்
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய ஏரி புலம்பெயர்ந்த இமயமலைப் பறவைகளின் இருப்பிடமாகும். ஓக்ஸ் மற்றும் பைன் மரங்களுக்கு நடுவே சாத்தால் ஏரி ஒரு ரத்தினம் போல காட்சியளிக்கிறது. ராம் தால், லக்ஷ்மன் தால், சீதா தால், நல் தமயந்தி தால், பன்னா தால், பூர்ணா தால் மற்றும் சுகா தால் ஆகிய ஏழு ஏரிகளின் கலவையாக இந்த சாத்தால் உருவானது. மேலும், இந்த ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் விசேஷமானது. உத்தரகண்ட் செல்லும்போது இந்த பசுமையான ஏரியை பார்க்க தவறாதீர்கள்.
தால் ஏரி, ஜம்மு & காஷ்மீர்
'காஷ்மீரின் கிரீடத்தில் உள்ள நகை' என்று அழைக்கப்படும் தால் ஏரி அதன் ஈர்க்கக்கூடிய அழகு காரணமாக, இது பல கவிஞர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்களின் அருங்காட்சியகமாக மாறியுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த அழகான ரத்தினத்தை ஆராய்வதற்கான சிறந்த வழி வண்ணமயமான ஷிகாராக்களில் சவாரி செய்வதாகும். மேலும், நிஷாத் பாக் மற்றும் ஷாலிமார் பாக், சாஷ்மே ஷாஹி மற்றும் ஹஸ்ரத்பால் ஆலயம் போன்ற முகலாய தோட்டங்களையும் பார்வையிடலாம். கங்கா பால், தர்சார் ஏரி மற்றும் உலார் ஏரி ஆகியவையும் இங்கு இருக்கும் அழகிய இமயமலை ஏரிகளாகும்.

சூரஜ் தால் ஏரி, ஹிமாச்சலப் பிரதேசம்
ஹிமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் உள்ள பார்சா லாவிற்குக் கீழே இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏரியான சூரஜ் தால் அமைந்துள்ளது. இந்தியாவின் மிக அழகான ஏரிகளின் பட்டியலில் இது அதன் குளிர்ந்த, அக்வாமரைன் தண்ணீருக்காக பிரபலமானது. இது லே - மணாலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் பைக் ரைடு மூலம் இங்கு வருவது பிரபலமான ஒன்றாகும்.

குருடோங்மர் ஏரி, சிக்கிம்
இமயமலையின் மிக அழகான ஏரிகளின் பட்டியலில், சிக்கிமின் வடக்குப் பகுதியில் உள்ள குருடோங்மர் ஏரியை நிச்சயம் தவிர்க்க முடியாது. உலகின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றான குருடோங்மார் கடல் மட்டத்திலிருந்து 5,210 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பனி சிகரங்கள், மலைகள் மற்றும் பனிப்பாறைகளால் சூழப்பட்ட அற்புதமான மரகத நீல நிற ஏரி, சிக்கிமின் தொலைதூர பள்ளத்தாக்குகளில் காஞ்சன்ஜங்கா மலைத்தொடரின் வடகிழக்கில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications





